கவனிக்க வைக்கும் “ சக்ரா” – விமர்சனம்!

விஷால் ஹீரோவாக- அதுவும் இந்தியன் மிலிட்டரியில் அதிகாரியாக பணி புரிபவர் என்ற எல்லைக் கோட்டை வைத்து பின்னப்பட்டக் கதை.. அதிலும் முழுக்க டிஜிட்டல் மயமாகி நம் நாட்டில் இப்படி எல்லாம் மோசடியும், க்ரைமும் நடக்க வாய்ப்பு உள்ளது என்று சில பல விஷயங்களை சொல்லி அதிர்ச்சி அளிக்க முயன்றிருப்பதால் கவனிக்க வைக்கிறது இந்த சக்ரா.

கதை என்னவென்றால் ஆகஸ்ட் 15. நாடே சுதந்திர தின கொண்டாட்டத்தில் இருக்கும் சூழலில் சிங்காரச் சென்னையில் ஒரே நாளில் கிட்டத்தட்ட 50 வீடுகளில் ஒரு கொள்ளை கும்பல் தங்கள் கை வரிசையைக் காட்டி ரூ.7 கோடி பணத்தையும், தங்க நகைகளையும் கொள்ளையடித்துச் செல்கிறது. கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய 50 வீடுகளில் மிலிட்டரி குடும்பத்தைச் சேர்ந்த விஷாலின் வீடும் ஒன்று. கொள்ளையர் கள் தாக்கியதில் விஷாலின் பாட்டி மயக்க மடைந்து விட்ட.சம்பவம் குறித்து கேள்விப் பட்டு வீட்டுக்கு வந்து பார்க்கும் போது தனது தந்தை வாங்கிய சக்ரா மெடல் கூட திருடு போனதை அறிந்து .பதக்கத்தை மீட்டே தீருவேன் என்று சவால் விடுத்து அதை நிறைவேற்றுவதற்குள் படும் போராட்டம்தான் படம்.

ஹீரோ விஷால், மிடுக்கான உடற்கட்டுடன் அட்டகாசமாக நடித்திருக்கிறார். வழக்கம் போல் அதிரடி ஆக்‌ஷன், காதல், செண்டிமெண்ட் என அனைத்தையும் தன் பாணியில் குறையே இல்லாமல் வழங்கி இருக்கிறார். ஆனால் ஒரு இந்திய ராணுவ வீரர் ரோலில் இருந்துக் கொண்டு இம்புட்டு அரசியல் பேசுவதெல்லாம் ஓவர். நாயகி ஷ்ரத்தா, அசிஸ்டெண்ட் கமிஷனர் என்ற போர்வையில் கான்ஸ்டபிளாக வருகிறார் ஓரிரு ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடித்து அசத்தி இருப்பது போல் தோற்றமளிக்கிறார். இன்னொரு நடிகை ரெஜினா ஏற்று நடித்திருக்கும் ரோல் கொஞ்சம் புதுசு கே.ஆர். விஜயா, மனோபாலா, சிருஷ்டி டாங்கே ஆகியோருடன் ரோபோ சங்கர் எல்லாம் வீண்.

டூயட் பாடல் எல்லாம் இல்லாத இந்த சக்ரா-படத்தின் மியூசிக் டைரக்டர் யுவனின் பின்னணி இசை வேறு லெவலுக்கு ஃபீல் பண்ண வைக்கிறது. பாலசுப்ரமணியத்தின் கேமரா ஒர்க் கச்சிதம்

ஆன்லைன் ஹோம் சர்வீஸ் மூலம் நடக்கும் க்ரைம் ஸ்டோரியை யோசித்த டைரக்டர் ஆனந்தனை ஹீரோ இன்னும் யோசிக்க விட்டிருந்தால் பக்காவான ஸ்டோரியுடன் இன்னும் இன்னொரு இரும்புத் திரை படமாகி இருக்கும் இந்த சக்ரா.

ஆனாலும் இந்த டிஜிட்டல் உலக மோசடியை எக்ஸ்போஸ் பண்ண முயல்கிறது சக்ரா என்பது மட்டும் நிஜம்

நன்றி :ஆந்தை ரிப்போர்ட்டர்