தங்கரின் அழகி-க்கு வயது 20

அழகி!

தமிழில் ஏகப்பட்ட நபர்களை பாதித்த திரைப்படம். அந்த படத்தின் மூலம் காண்போர் ஒவ்வொருவரையும் நமது சொந்த ஊரின் நினைவுகளோடு ஒட்டி உறவாட வைத்தார் தங்கர்பச்சான். உணமையைச் சொல்லப் போனால் இன்றும் கூட எத்தனை தனம்….சண்முகம்..நம்மை சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?. அதனாலேயே அப்படத்தை பார்த்த அத்தனை பேருக்கும் நூற்றில் தொண்ணூறு பேருக்கு தன் முதல் காதலை நினைவுபடுத்தியது அதிலும் காதல், நட்பு, பிரிவு, பொறாமை, சந்தேகம், பரிதவிப்பு, பாசம், மனிதாபிமானம், குழந்தைத்தனம், விட்டுக்கொடுத்தல், போன்ற எல்லா குணாதிசியங்களையும் ஒருங்கே காட்ட எப்படி முடிந்தது இந்த தங்கர்பச்சானால்? “என இந்த ஒற்றை படத்தை கண்டுவிட்டு வியந்தனர் ரசிகர்கள்.

சிம்பிளாக சொல்வதானால் மயிலிறகை கொண்டு கைகளில் வருடுவது போன்ற மென்மையான கதை. அறியாப் பருவத்தில் தெரியாமலே நம் மனதுக்குள் குடிகொண்டுவிடுகிற காதலும் காலாகாலத்துக்கும் அது பண்ணுகிற அவஸ்தை களும்தான் இந்த ‘அழகி’யின் ஒன்லைன். பொதுவாக பெண்கள்தான் திரையில் துக்கமான காட்சிகள் வந்தால் உடனே தாமும் கண்ணீர் விட்டு அழத்தொடங்கி விடுவார்கள். காரணம் எதுவாகவும் இருக்கலாம். கதையோடு ஒன்றிப் போவதிலிருந்து அவர்களுக்கு ஏற்பட்ட மனத்தழும்புகள் வரை அதற்கு காரணம் சொல்லலாம். ஆனால், இந்த அழகி காதலின் வலியை உணராத மற்றும் காதலிக்காதவர்களைக்கூட கலங்க வைத்ததென்னவோ நிஜம். காதலித்தவர் களையும், காதலிக்கப்பட்டவர்களையும், நட்பை உயிராய் நினைத்தவர்களையும் இந்தத் திரைப்படம் வெகுவாக பாதித்தது.

அதே சமயம் ஒரு சினிமா விழாவில் தங்கர் பச்சான் பேசியது இப்போதும் காதுகளில் ரீங்காரமிடுகிறது

“நான் இயக்கிய ‘அழகி’ படம், ஒரு கோடியே எழுபது லட்சம் செலவில் தயாரிக்கப் பட்டுச்சு. அதை தயாரிப்பாளர் பாதி விலைக்கு விற்க முன்வந்து, அந்த படத்தை 120 முறை திரையிட்டு காண்பித்தும் யாரும் வாங்க முன்வரலை. அது கூட பரவாயில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு போகட்டும். என்னை அவர்கள் அவமானப் படுத்தியது போல், அவர்களின் பெயர்களை சொல்லி நானும் அவமானப்படுத்த விரும்பலை. தயாரிப்பாளராகவும், மிகப்பெரிய இயக்குனராகவும் இருக்கக்கூடிய ஒருவர் படம் பார்த்துவிட்டு, ஒரு வார்த்தை கூட பேச விரும்பாமல், முகத்தை திருப்பிக் கொண்டு போய்விட்டார்.

அதுவும் கூட பரவாயில்லை. இன்று கூட மிகப்பெரும் தயாரிப்பாளராக இருக்கக்கூடிய மற்றொருவருக்கு முதல் ஆளாக ‘அழகி’ படத்தை திரையிட்டு காண்பித்தேன். அவர் என்னிடம் எந்த கருத்தும் சொல்லாமல், தயாரிப்பாளரை அழைத்தார். “தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். செலவு செய்த பணம் இதோடு போகட்டும். இந்த படத்தை ரிலீஸ் செய்தால், மேலும் ரூ.50 லட்சம் தேவைப்படும். உங்களுக்கு போஸ்டர் காசு கூட திரும்பி வராது. இதை இப்படியே விட்டுவிட்டு ஊருக்கு ஓடிவிடுங்கள்,” என்று கூறிவிட்டு சென்றார்.

இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த துறையில் இருக்கிறார்கள். ஆனால் என்னை அவமானப்படுத்தியவர்களின் கணிப்பை எல்லாம் மீறி, ‘அழகி’ படம் எவ்வளவு பெரிய வெற்றியையும், வரவேற்பையும் பெற்றது என்று உங்களுக்கே தெரியும். தோல்வியை அனுபவித்தவனுக்குத்தான் வெற்றிகளை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது புரியும். -அப்படீன்னு சொன்னாராக்கும் (கட்டிங் கண்ணையா)

அதே சமயம் அழகி மாதிரி படங்கள் இனி வராதா ? என்றொரு ரிப்போர்ட்டர் கேட்டதற்கு தங்கர்பச்சான் ‘ கண்டிப்பா வரும் ஆனா பாக்க மக்கள் இல்ல. இப்ப காதல்னா என்னன்னே தெரியாத தலைமுறை உருவாகிடுச்சு. நேரா காமத்துக்கு போயிட்டாங்க காதலே கிடையாது. காதல் உணர்வே இல்லாம இருக்காங்க. நான் கிறது மட்டும் தான் இங்க இப்ப இருக்கு. அதே சமயம் அழகி 2 ரெடியா இருக்குறதா ஒரு செய்தி வந்துகிட்டே இரு ந்துச்சே?-ன்னு கேட்போர் இப்போதுமுண்டு .. அந்த அழகி கதை 1983 ல எழுதினது. இளையராஜா அதை ஒரு தொடரா எடுக்க சொன்னார். முன்கதையா தான் அழகி எடுத்தோம். அழகி 2 ரெடியா இருக்கு அந்தப் படத்தில பார்த்திபன் பையனா வர்றவருக்கு 27 வயசுல கதை ஆரம்பிக்கும்.இப்பவும் அழகி 2 எடுக்க தயாரிப்பாளர் தயாரா இருக்கார். நந்திதா கிட்ட இப்பவும் பேசிட்டு இருக்கேன். எல்லோரும் அவஙக வேலையை ஒதுக்கி வச்சுட்டு வரணும். ஆனா இப்ப இருக்குற தலைமுறை அழகி 2 புரிஞ்சுப்பாங்களாங்கிறது தான் பிரச்சனை. உறவுகளே இப்ப இல்லையே! – என்றும் சொன்னார்