ரசிர்களை சோதிக்கிறதா  “அண்ணாத்த”  ? -திரை விமர்சனம் !

இயக்கம்: சிவா

நடிகர்கள்: ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ், ஜகபதிபாபு,

இசை: டி. இமான்

கதைகிராமத்து ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிகாந்த். உயிருக்குயிரான தங்கை கீர்த்தி சுரேஷ். அவருக்கு ஊரெல்லாம் தேடி மாப்பிள்ளை பார்க்க்கிறார் ரஜினி.  அப்போதுதங்கைக்கும் மாப்பிள்ளைக்கும் வரும்பிரச்சனையை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.

தமிழ் சினிமாவில் பாசமலர் காலத்திலிருந்து  அடித்து துவைத்த அண்ணன்தங்கை சென்டிமென்ட் கதைக்கு கொஞ்சம் புதுப்பெயிண்ட் அடித்து ரஜினி மசாலாவை பூசித் தந்திருக்கிறார்கள் ஆனால் காலம் மாறி பல காலமாகிவிட்டதை மறந்து விட்டார்கள்.

ஊர் பஞ்சாயத்து தலைவராக மக்கள் மவுசுடன் துள்ளலாக திரிகிறார் ரஜினி. படித்துவிட்டு ஊருக்கு வரும் கீர்த்திக்கு மாப்பிள்ளை தேடுகிறார். ஒரு கட்டத்தில் தான் பேசியே திருத்திய பிரகாஷ் ராஜ் பையனுக்கு திருமணம் நிச்சயம் செய்கிறார். ஆனால் கல்யாணத்திற்கு முதல் நாள் கீர்த்தியை காணவில்லை. தங்கையை மீது பாசமான அண்ணன் அவருக்கே தெரியாமல் அவளைக் காப்பாற்ற நினைக்கிறார்  என்பதுதான் படம் ஆனால் அதை சொன்ன திரைக்கதையை தான் படு மோசமாக அமைந்து விட்டது.

படத்தின் முதல் பாதி விஸ்வாசம் இரண்டாம் பாதி வேதாளம் என முடிவு செய்து திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். படத்தின் முதல் பாதி எந்த திசையில் போகிறது என்பதே தெரியவில்லை. ரஜினி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார். கீர்த்தி வருகிறார், மீனா, குஷ்பு வருகிறார்கள், நயன்தாரா வருகிறார். பிரகாஷ் ராஜ் வேறு வந்து போகிறார். ஆளுக்குஒருசீன்எனமுதல்பாதிமுடிந்துபோகிறது

இரண்டாம் பாதியில் வில்லனுக்கு மேல் ஒரு வில்லன் என  ஒவ்வொரு வில்லனாக அறிமுகமாகிறார்கள். ஒவ்வொருவாராக வந்து ரஜினியிடம் அடி வாங்கி ஒரு வழியாக படத்தை முடிக்கிறார்கள்.

ரஜினி வெகு உற்சாகமாக இருக்கிறார், ஓடி ஆடுகிறார், பாசம் காட்டுகிறார். சண்டை போடுகிறார். பழைய ரஜினியின் துள்ளலை பார்க்க முடிகிறது. ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒரே விசயம் அது தான். ஆனால் ரஜினியின் குரலிலும் உடலிலும் முதுமை அப்பட்டமாக தெரிய ஆரம்பித்து விட்டது.

நாயகனுக்கு தங்கையாக இருந்து படம் முழுக்க கஷ்டத்தை அனுபவிக்கும் பாத்திரம் கீர்த்தி சுரேஷுக்கு பாவம். அவராவது பராவயில்லை நயன் தாரா எப்போது வருகிறார் எப்போது காணாமல் போனார் என்பதே தெரியவில்லை. மீனாவும் குஷ்புவும் காமெடிக்கு தொட்டுக்கொள்ள பயன்பட்டிருக்கிறார்கள்

தமிழ் சினிமாவின் ஆரம்பகால திரைப்படங்கள் சிலவற்றில், கதாநாயகிகளோ அல்லது நாயகனின் தங்கைகளோ பயங்கரமான துன்பங்களை அனுபவிப்பார்கள். அதைவிட பல மடங்கு துன்பத்தை அனுபவிக்கும் பாத்திரம் கீர்த்தி சுரேஷிற்கு.

அல்ட்ரா மாடர்ன் வில்லனுக்கு அண்ணனாக ஜெகபதிபாபு.  இப்போதெல்லாம் பெரிய ஹீரோ படமென்றால் முதல் கால்ஷீட் இவரிடம் தான் வாங்குகிறார்கள். அவர் இருப்பது தான் கொல்கத்தா ஆனால் அவரோ அழுக்கு படிந்த குகை மனிதனாக இருக்கிறார்.

படத்தின் கதை கேட்கவெல்லாம் நன்றாக இருக்கலாம், ஆனால் அதை பழைய 80 கால திரைக்கதை போல சொன்னது தான் சோகம்.

இமான் இசை ஒவ்வொரு காட்சியிலும் மாஸ் காட்ட, சத்தம் போட்டு கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவு கச்சிதமாக இருக்கிறது. இயக்குநர் சிவா திரைக்கதையிலும் வசனத்திலும் கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

அண்ணாத்த ரஜினி ரசிகர்களுக்கு மட்டும்