ஆறாம் நிலம் – போரின் பிந்தைய ஈழ நிலத்தின் கோர முகத்தை காட்டும் படைப்பு

இயக்கம் – ஆனந்த ரமணன்
நடிகர்கள் – நவயுகா, சிறுமி அன்பரசி, மன்மதன் பாஸ்கி

கதை – போர் முடிந்த பிறகு ஈழத்தில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வு எப்படி இருக்கிறது அவர்கள் எந்த மாதிரியான வலிகளை அனுபவிக்கிறார்கள் என்பதை சொல்வது தான் ஆறாம் நிலம். வாழ்வின் பதிவு தான் இப்படம்

ஈழத்திற்க்கும் தமிழ்மக்களுக்கும் உள்ள உறவு ஆயிரம் ஆண்டு நீளும் தொப்புள் கொடி தொடர்பு. போர் நடக்கும் போது நம் தாய் தமிழ் மக்களின் அந்த போரால் எந்தளவு பாதிக்கப்பட்டார்கள் அன்றைய போரின் நிலைகள் எல்லாம் உலகம் முழுக்க அன்றைக்கன்றே விவாதிக்கப்படும் அளவு நமக்கு அந்த செய்திகள் வந்தடைந்தது ஆனால் போர் முடிந்த பிறகு, இப்போது அம்மக்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது , இப்போதாவது அவர்களுக்கான நிம்மதி கிடைத்திருக்கிறதா என்பதற்கு பதில் சொல்லும் படமாக, அவர்களின் வாழ்க்கையின் வலியை நம் முகத்தில் அறைந்ந்து சொல்லியிருக்கிறது இப்படம்.

ஈழம்த்தை வைத்து இங்கும் அங்கும் இது வரையிலும் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் எதுவும், இதுவரை சொல்லாத, இதுவரை திரையில் காட்டப்படாத ஒரு களம் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. போருக்குப் பிந்திய பத்தாண்டுகளின் பின்னும்கூட இன்றும் போர்க்காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் முற்றிலும் அகற்றப்படாத சூழல் தான் அங்கு நிலவுகின்றது. கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட நிலம், காணாமல் போனோரைத் தேடும் அம்மகக்ளின் போராட்டம், முன்னாள் போராளிகளின் இன்றைய வாழ்க்கையின் நிலை இதை எல்லாம் தான் இப்படம் பேசியிருக்கிறது. அதை காட்டிய விதத்தில் நம் மனதி ரணமாக்குகிறது.

போரில் காணாமல் போன தன் கணவனை தேடும் பெண்ணாக, ஒரு தாயாக, போரின் இழப்புகளை தாங்கி கொண்டு அந்த நிலத்தில் வலியோடு வாழ்பவபராக தேர்ந்த நடிப்பின் மூலம் ஈர்க்கிறார் நவயுகா. முன்னாள் போராளியாகவும் , கண்ணிவெடி அகற்றும் குழுவின் பொறுப்பாளனாகவும் பாஸ்கியினுடைய நடிப்பு கவனம் ஈர்க்கிறது. படத்தின் வரும் மற்ற பாத்திரங்களும், கதாப்பாத்திரங்களாக அல்லாமல் நிஜ மனிதர்களை அப்படியே கண் முன் பிரதிபலிக்கிறார்கள்

இது ஒரு படமாக அல்லாமல் அவர்களின் வாழ்வை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறது. போருக்கு பிந்தைய நிலத்தில் கண்ணிவெடி அகற்றும் பணி, மிக நுண்ணிய விவரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பணி இடம், அதற்கான பணியாளர் ஒருங்கிணைப்பு, உடை நிஜத்தை அப்படியே வெளிப்படுத்துகின்றது. எந்த சமசரமும் இல்லாமல் ஈழத்தின் இன்றைய நிலையை ஒரு டாக்குமெண்டரி வடிவில் நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர். ஈழத்தின் இன்று கொடுமையாகவே இருப்பது படத்தில் அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவ சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு சிந்தகா ஜெயக்கொடி இசையமைத்துள்ளார். சஜீத் ஜெயக்குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். அம்மக்கள் தங்களின் வாழ்வை திரையில் தங்கள் திறமையின் மூலம் கொண்டு வந்துள்ளார்கள் இப்படம் அனைவரும் பார்க்கும் வகையில் இலவசமாக Youtbe தளத்தில் கிடைக்கிறது. ஈழம் மிக மிக மிக அவசியமான பதிவு தான் இந்த ஆறாம் நிலம்.