‘கருப்பங்காட்டு வலசு’ விமர்சனம்

சமீபகாலமாக கிராமத்து கதை அதிலும் கிராமத்தைல் க்ரைம் ஸ்டோரி மிக்ஸ் ஆன படம் வரவே இல்லை என்ற குறையைத் தீர்த்திருக்கிறது கருப்பங்காட்டு வலசு படம்..! ஒரு பக்கம் ஹைடெக்காகி வரும் நகரில் கொஞ்சம் கூட அடிப்படை வசதிகளே இல்லாத ஒரு கிராமத்தின் வளர்ச்சி, அங்கு நடக்கும் திருட்டு, அதில் இருந்து மக்களை காப்பாற்ற பொருத்தப்படும் சிசிடிவி கேமரா, அதே கேமராவினால் ஏற்படும் மரணம் என்று நிஜமாகவே ரூம் போட்டு யோசித்து கதை பண்ணி இருப்பதால் சலிப்பை தரவில்லை என்பதே நிஜம்!

‘கருப்பங்காட்டு வலசு’ என்ற டாய்லெட் கூட இல்லாத பக்கா ஓல்ட் வில்லேஜ் அந்த வில்லேஜை சேர்ந்தவராக இருந்தாலும் வெளிநாட்டில் இருந்து வரும் ஊர் தலைவரின் மகளான நீலிமா, தனது கிராமத்தின் நிலை அறிந்து, அங்கு மாற்றத்தைக் கொண்டு வரும் நடவடிக்கையில் இறங்குகிறார். நீலிமாவின் முயற்சியால் சிசிடிவி கேமரா, மாணவர்களுக்கு கனிணி பயிற்சி, கழிப்பிட வசதி உள்ளிட்ட வசதிகள் கிராம மக்களுக்கு கிடைக்கிறது. இதனால் மகிழ்ச்சியடையும் கிராம மக்கள், கோவில் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். அன்றைய இரவு கிராமத்தில் உள்ள இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் மரணமடைய, அந்த மரணங் களுக்கு பின்னணியில் இருக்கும் மர்மத்தை, பல ட்விஸ்ட்டுகளோடு சொல்வது தான் படத்தின் கதை.

நீலிமா மற்றும் ஜார்ஜ் விஜய் ஆகியோரை தவிர மற்ற நடிகர்கள் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும், நடிப்பில் பல படங்கள் நடித்த அனுபவத்தை வெளிக்காட்டியிருப்பதோடு, கதாப்பாத்திரங்களுக்கு மிக கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்கள். படத்தின் ஒரிஜினல் ஹீரோ, ஹீரோயின் என்றால் அது கேமரா மேன்(ஷ்ரவன் சரவணன்)தான்! ஒரு நிஜ கிராமத்தை அப்படியே அதன் அழகியல் மாறாமல் கண் முன்னே கொண்டு வந்து இருக்கிறார்.

மேலும் வசனங்களில் கிராமத்தின் உயிர்ப்பு அப்படியே இருக்கிறது. இதற்காகவே இயக்குநர் செல்வேந்திரனுக்கு ஒரு ரோஜா மலர் பரிசு கொடுக்கலாம்,

வழக்கம் போல் அது சரியில்லை, இது இப்படி இருந்திருக்கலாம் என்று என்று சொல்ல இந்த படத்திலும் சிலபல காட்சிகள் உண்டுதான் என்றாலும் குறுப்படங்கள் மட்டுமே எடுத்து பிரபலமான ஒரு டைரக்டரின் கன்னி முயற்சியான இந்த கருப்பங்காட்டு வலசு ஒரு முறை பார்க்கத் தகுந்த படம்தான்!