ஓட்டுக்காக பணம் தரும் பாணியை மையமாக வைத்து பின்னப்பட்ட ‘தப்பு தண்டா’

தேர்தல் ஓட்டுக்கு பணம் வாங்குவதும் கொடுப்பதும் மன்னிக்கமுடியாத குற்றம்” என்ற ‘உலகநாயகன்’ கமல் ஹாசனின் பிரபல வாக்கியம் மக்களின் மனத்திலும் ஆழமாக பதிந்துள்ளது. இதனை மையமாக வைத்து செப்டம்பர் 8 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் படம் ‘தப்பு தண்டா’ மாநில தேர்தல் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தை மையமாக கொண்ட படம் வெளியாவதற்கு உகந்த காலம் இது என பலரால் கருதப்படுகிறது. பல பிரபல இயக்குனர்களுக்கு ஆசானாக கருதப்படும் மறைந்த இயக்குனர் பாலு மகேந்திரா சினிமா பட்டறையிலிருந்து பயின்று வெளிவந்த ஸ்ரீகண்டன் இயக்கியுள்ள ‘தப்பு தண்டா’ திரைப்படம் செப்டம்பர் 8 அன்று ரிலீஸாகவுள்ளது. ‘மாநகரம்’ , ‘ஜோக்கர்’ போன்ற காமெடி /திரில்லர் படங்களுக்கு கிடைத்த வெற்றி அதே வகையான சினிமாவை சார்ந்த ‘தப்பு தாண்டா’ படத்துக்கும் பெரிதளவு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீகண்டன் பேசுகையில், ” இக்கதையை தயார் செய்து முடிக்க எனக்கு ஒரு வருடம் ஆனது.ஏனென்றால் இக்கதைக்கு அவ்வளவு விரிவான ஆராய்ச்சியும் களப்பணியும் தேவைப்பட்டது. அது இல்லாவிட்டால் இவ்வாறான ஒரு தேர்தல் பிரச்சாரம் கதைக்கு வலு இருக்காது. தேர்தலையும், தேர்தல் பிரச்சாரத்தையும், ஓட்டுக்காக பணம் தரும் பாணியையும் மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள காமெடி திரில்லர் தான் ‘தப்பு தண்டா’. இப்படத்தில் மூன்று கதைகள் உள்ளன. சினிமா ரசிகர்களுக்கு நாங்கள் இப்படத்தில் கையாண்டிருக்கும் வித்தியாசமான காமெடி பிடிக்கும் என எதிர்பார்க்கிறேன்.

சத்யா, ஸ்வேதா கய் மற்றும் உதயா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் பிரமாதமாக நடித்துள்ளனர். மைம் கோபி, அஜய் கோஷ் மற்றும் ஜான் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் சினிமா ரசிகர்கள் ‘தப்பு தாண்டா’ படத்தை திரையரங்கங்களில் ரசித்து கொண்டாடுவார்கள் என நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் உள்ளேன்”