மகளிர் மட்டும் பார்த்து தன் தோழியை தேடும் பெண்மணி(கள்)

2D Entertainment தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மகளிர் மட்டும்…மகளிர் மட்டும் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பார்த்தவர்கள் அனைவரும் படத்தை பாராட்டி வருகிறார்கள்.

இதனிடையே  மகளிர் மட்டும் படக்குழுவினர் ” ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு பட்டு புடவை ” என்ற திட்டத்தை அறிவித்திருந்தனர். அதன்படி மகளிர் மட்டும் திரைப்படத்தை திரையரங்குகளில் காண வந்த பெண்களுக்கு பட்டு புடவை பரிசாக வழங்கப்பட்டது. மகளிர் மட்டும் திரைப்படத்தை திரையரங்கில் காண வரும் பெண்களுக்கு முதல் மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு திரையரங்கிலும் ஒவ்வொரு காட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபருக்கு பட்டுபுடவை பரிசாக வழங்கப்படுகிறது. இதுவரை தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் 3000 பெண்களுக்கு ( ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டு புடவை ) பட்டு புடவை பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும்  மகளிர் மட்டும் படத்தில் 1978ஆம் ஆண்டு பியுசி கல்லூரியில் ஒன்றாகப் படித்த தோழிகள் 2016-ம் ஆண்டு ஒருவரை ஒருவர் தேடி கண்டுபிடித்து மிண்டும் தங்களது நட்பைத் தொடர்வது போன்று கதை அமைந்திருந்தது. இப்படத்தை பார்த்த வசந்தி என்ற பெண் படத்தில் வருவது போல தன்னுடைய இரு தோழிகளான மலர் மற்றும் ராஜியை கண்டுபிடித்துத் தரக் கோரியுள்ளார்.

பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மகளிர் மட்டும். கடந்த 15ம் தேதி வெளியான இந்த படத்தை நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் வசந்தி என்ற பெண் தன் தோழிகளை கண்டுபிடித்துத் தருமாறு 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த தகவலை உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம், “இப்படத்தைப் பார்த்த பல பெண்கள், தங்களுடன் தொடர்பில் இல்லாத பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த தோழிகளை நேரில் சந்திப்பதற்காக தேடிவருகிறார்கள் என தகவல் கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் மகளிர் மட்டும் படத்தில் வருவது போலவே நிஜ வாழ்க்கையிலும் ஒன்றாக சேர்ந்த தோழிகள் மூவர் உள்ளனர் . அவர்கள் மகளிர் மட்டும் படத்தை பார்த்ததும் தங்கள் வாழ்க்கையில் நடந்தது போலவே படத்தில் சில காட்சிகள் வந்ததால் மிகவும் ஆச்சரியமடைந்துள்ளனர். அவர்கள் தயாரிப்பாளர் சூர்யாவை தொடர்பு கொண்டு ” மகளிர் மட்டும் ” போன்ற தரமான படத்தை தயாரித்ததற்கு வாழ்த்துக்கள். சூர்யா அவர்கள் இதை போன்ற தரமான படங்களை தயாரிக்க வேண்டும். மகளிர் மட்டும் எமோஷனலாக எங்கள் மனதை தொட்ட படம் . இதை போன்ற கருத்தாழமிக்க திரைப்படங்கள் 2D நிறுவனத்திடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளனர். தயாரிப்பாளர் சூர்யா மகளிர் மட்டும் போன்ற ஒரு தரமான படத்தை தயாரித்தர்க்காக மகிழ்ச்சியாக உள்ளார்.

பொதுவாக ஆண்கள் அளவிற்குப் பெண்களின் நட்பு வட்டம் நீடித்திருப்பதில்லை என்று கூறப்படுவதுண்டு. திருமணமான பிறகு பெரும்பாலான பெண்கள் தங்களுடைய பள்ளி மற்றும் கல்லூரி தோழிகளுடனான தொடர்பு குறைந்துவிடும். தற்போதைய சூழலில் சமூக வலைத்தளங்கள் நம் நட்பைத் தொடர உதவி வரும் நிலையில் அதனைப் பயன்படுத்த தெரியாத பலரும் தங்களுடைய தொலைந்த நட்பை இப்படி தேடிவருவது குறிப்பிடத்தக்கது.