மீரா மிதுனை வைத்து படம் எடுத்த கதையை 50 படமாக எடுக்கலாம் : ’பேய காணோம்’ இயக்குனர் செல்வ அன்பரசன் பேச்சு

க்ளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தேனி பாரத் டாக்டர் ஆர்.சுருளிவேல் தயாரித்துள்ள படம் ‘பேய காணோம்’. செல்வ அன்பரசன் இயக்கியுள்ள இப்படத்தில் தற்பொழுது தேடல்  நாயகியாக ஒளிந்து வரும் மீரா மிதுன், தருண் கோபி, கெளசிக், சந்தியா ராமச்சந்திரன், விஜய் டிவி புகழ் கோதண்டம், ஜேக்கப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது. HI CREATORS  பட நிறுவனம் இப்படத்தை தமிழகம்  முழுவதும் வெளியிடுகிறது.
படத்தின் டபுள் டிராக் ரிலீஸ் சென்னையில் நடந்தது. விழாவில்  நடப்பு தயாரிப்பாளர் சங்க செயலாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர் கதிரேஷன், தயாரிப்பாளர் மதுரை செல்வம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
 
விழாவில்  தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா பேசியதாவது:-
 
”இந்தப் படத்தை இயக்குனர் செல்வ அன்பரசன் காமெடியாகவும், வித்தியாசமாகவும் எடுத்திருக்கிறார் என்பது படத்தின் முன்னோட்ட காட்சிகளை பார்த்தாலே தெரிகிறது. இந்த படத்திற்கு வெளியீட்டாளர் கிடைத்திருப்பதும் மகிழ்சியான செய்தி. தயாரிப்பாளர் சுருளிவேல் சிரிப்பிலேயே படத்தின் வெற்றி தெரிகிறது. படத்தை வாங்கியிருக்கும்          HI CREATORS  நிறுவனத்திற்கும் இதுபோல் லாபம் கிடைக்கும்போது உண்மையான வெற்றியாகிவிடும்.  தொடர்ந்து இதுபோன்ற படங்களை தரவேண்டும்.
படத்தின் கதாநாயகன் கெளசிக் பேசும்போது “தயாரிப்பாளர் நல்லா சம்பதிக்கணும்னு ஆசைப்படுறேன்” என்றார். இந்த எண்ணம் நல்ல எண்ணம்தான். ஆனால் வளரும் போதும், வளர்ந்த பிறகும் இந்த எண்ணம் தொடர்ந்தால் நல்லது. படத்தின் டைட்டிலில் காமெடிக்காக சூப்பர் ஸ்டார் என்று வருகிறது. அந்த பட்டம் தலைவர் ரஜினிக்கு மட்டும்தான் சொந்தம். அதனால் ஒரு ரஜினி ரசிகனாக கேட்கிறேன். அந்த டைட்டிலை மட்டும் எடுத்துவிடுங்கள் என்று வேண்டுகோள் வைக்கிறேன். மற்றபடி படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.
 
முன்னதாக படத்தின்  இயக்குனர் செல்வ அன்பரசன் பேசியதாவது:-
”அந்த காலத்தில் படம் எடுக்கறது கஷ்டம்; ரிலீஸ் பண்றது சுலபம். ஆனால் இப்போது படம் எடுக்கறது கஷ்டம்; ரிலீஸ் பண்றது ரொம்ப ரொம்ப கஷ்டம். இந்த படத்தை வெளியிடும் HI CREATORS  நிறுவனத்திற்கும் என் வாழ்க்கை முழுதும் நன்றி கடனாக இருப்பேன்.
இந்த படத்தை எப்படியெல்லாம் ரீச் பண்ண முடியுமோ அந்த அளவுக்கு ரீச் பண்ணியிருக்கோம். முதல்ல இந்தப் படத்தோட டைட்டில் ரீச் ஆகணும்னு நினைச்சேன். அதற்கு சப்போர்ட்டா மூணு பேர் இருந்தாங்க ஒண்ணு பி.ஆர்.ஓ மணவை புவன், இரண்டாவது பத்திரிகையாளர்கள், மற்றும் ட்ரோலர்ஸ் முக்கியமாக டுடே ட்ரெண்டிங் , அகமது மீரான் , அருணோதயன் , மிஸ்டர் மிதுன் , ட்யூட் அஸ்வின் போன்ற மீம் கிரியேட்டர்ஸ் மூணாவதா எங்க அக்கா மீரா மிதுன் வேற லெவல் புரோமோட்டரா இருந்தார். மீரா மிதுனை வைத்து படம் எடுத்த கதையையே 50 படங்களாக பார்ட் பார்ட்டாக எடுக்கலாம். அவ்வளவு சம்பவங்கள் இருக்கு.
இப்போ வர்ற படங்களெல்லாம் பெரிய நடிகர் நடித்திருந்தாலும் சின்ன நடிகர் நடித்திருந்தாலும் முதல் நாள் மட்டும்தான் நல்லா போகுது. இரண்டாவது நாள் ஓடுறதுக்குள்ள புளு சட்டை மாறன் விமர்சனம் பண்ணி படத்தை காலி பண்ணிடுறார். அவருக்கு வியூஸ் ஏறிக்கிட்டே போகுது. தியேட்டரில் ஆடியன்ஸ் இல்லை. இந்த புளு சட்டை மாறன்தான் அஞ்சு நிமிஷம்கூட உட்காரமுடியாத அளவுக்கு லாஜிக் இல்லாத படத்தை கொடுத்தவர். விமர்சனம் பண்றது தப்பில்லை நானும் மீடியாவில் இருந்தவன்தான் ஆனால் நாகரீகமாக விமர்சனம் பண்ணனும்.
படத்திற்கு மார்க் போடுவதில் இன்றைக்கு வரைக்கும் ஆனந்த விகடன் சினிமாவை தாழ்த்தியே வச்சிருக்கு. ‘16வயதினிலே’ படத்துக்கு கொடுத்த 62 1/2  மார்க்தான் இதுவரை அதிகபட்சமான மார்க்காக இருக்கிறது. அதற்காக பாரதிராஜாவை இதுவரைக்கும் பெருமையா பேசிட்டு இருக்கோம். இது பெருமை இல்லை கேவலம். ஏன்னா பாரதிராஜா சார் நூற்றுக்கு நூறு வாங்கக்கூடிய இயக்குனர். ஏன் 60க்கு மேல மார்க் வாங்குற இயக்குனர்களே இல்லையா? இது ஒட்டுமொத்த சினிமாவையும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றிலும் அடிக்குது.  என்று பேசினார்.
 
 
விடுதலை சிறுத்தைகள்  கட்சி  வன்னியரசு  பேசியதாவது :-
 
 ”இந்த படத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நடிகை மீரா மிதுன் மீது புகார் கொடுக்கப்பட்டு புகாரின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டு வழக்கில் கைதாகி பிறகு தலைமறைவாகி படத்தை முடிப்பதற்கு கூட ஆள் இல்லாத நிலைமையில் படத்தை முடித்ததாக சொன்னார்கள். இது மீடியாவில் பரபரப்பாகவும் பேசப்பட்டது.
அதேபோல் இன்றைக்கு நயன்தாரவுக்கு திருமணமாகி நான்கு மாதத்தில் எப்படி குழந்தை பிறந்தது என்ற எழுந்த கேள்வி பெரிய வைரல் ஆனது. பிரம்மனின் தலையில் இருந்து பிராமணன் பிறந்தான்; தோளில் இருந்து சத்ரியன் பிறந்தான்; காலில் இருந்து சூத்திரன் பிறந்தான் என்பதை நம்புகிறவர்கள் நயன்தாராவுக்கு குழந்தை பிறந்ததை மட்டும் கேள்வி கேட்கிறார்கள்.
 
விடுதலைக்கு முன்பான காலக்கட்டத்திலிருந்தே திரைப்படங்கள் சமூக விடுதலைக்கான மாற்றத்திற்கான கருவியாய் இருந்து வருகிறது. இந்தி திணிப்பு, இந்தி ஆதிக்கம் என்ற சூழ்நிலையில் அரசியல் நெருக்கடி இருக்கிறது. அந்த அடிப்படையில் நெருக்கடிகளை மீட்டெடுக்கும் திரைப்படங்களை தமிழ் சினிமா தர வேண்டும். இந்தப் படமும்  மாற்றத்தை தரக்கூடிய படமாக இருக்கவேண்டும் என்று கூறி வாழ்த்துகிறேன் என்றார்.