இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சிவ கார்த்திகேயன்!

காமெடி ரியாலிட்டி நிகழ்ச்சியின் போட்டியாளராக, தொகுப்பாளராக இருந்து சினிமாவில் நடிகராக காலடி எடுத்து வைத்தவர் இன்று தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகர் என கோலிவுட்டில் தனக்கான இடத்தை அழுத்தமாக பிடித்திருக்கும் ஆர்டிஸ்ட் சிவகார்த்திகேயன் .. முன்பொரு முறை சொன்னது போல் சிங்கர், காமெடியன், மிமிக்கிரி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்ட சிவ கார்த்திகேயனுக்கு. டைமிங் காமெடி, உடனிருக்கும் தொகுப்பாளரைக் கலாய்த்து அரங்கை சிரிக்க வைப்பது, ‘ஆன் தி ஸ்பார்ட்’ காமெடியில் கலக்குவது அப்படீன்னு லைஃப் ஸ்டைல் போய் கொண்டிருந்தவருக்கு ‘மெரினா’வின் வழியே வெள்ளி திரைக்குள் நுழைய ஒரு வாய்ப்ப்ய்க் கிடைத்தது . அப்போதிலிருந்து ‘உசேன் போல்டை போல் நில்லாமல் ஓடு ஓடு ஓடிக் கொண்டே இரு, வெற்றி வரும்’ என்ற எண்ணத்தில் ஓடிக் கொண்டேருக்கும் இந்த இளைஞரின் ஓட்டத்தின் குறுக்கே ஆயிரம் தடைகள், அவமானங்கள், ஏமாற்றங்கள். என பல வலிகளை எல்லாம் தாங்கி தற்போது ‘கோலிவுட்டின் டான் ‘ என்று கொண்டாடப்படும் சிவகார்த்திகேயனுக்கு இன்னிக்கு 37 வது வயசு

அப்பாவுக்கு சிறையில் பணி என்பதால் குற்றவாளிகளை அவர்களது தண்டனைக் காலத்தில் பார்த்து வளரவேண்டிய சூழல் சிவாவுக்கு. குற்றவாளிகளை தண்டனை காலத்தில் பார்ப்பது எவ்வளவு பக்குவத்தை கொடுக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு ஊரில் நண்பர்கள் செட் ஆவதற்குள்ளாகவே அடுத்த ஊருக்கு செல்ல வேண்டியிருக்கும். அதனால் நண்பர்கள் இல்லாமல் பல நேரம் தனியாக பவுலிங் போட்டு, தனியாக பேட்டிங் செய்து, தனியாக ஃபீல்டிங் செய்து விளையாடி இருக்கிறார்.

பதின் பருவம் முடிந்து கல்லூரியில் காலடி எடுத்து வைத்த சில மாதங்களுக்குள் அப்பாவை இழந்து குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலைமை. தனக்குள்ளே இருந்த மிமிக்ரி திறமையை வெளிக்கொணர அவர் பட்டபாடு கொஞ்சம் நஞ்சமல்ல. வெறும் கைதட்டலுக்காக ஒரு மணி நேரம் மிமிக்ரி செய்துவிட்டு வீட்டுக்கு வந்து அடுத்த இரண்டு நாட்கள் தொண்டை வலியோடு துடித்திருக்கிறார். அம்மாவிடமோ அக்காவிடமோ சொன்னால் மிமிக்ரிக்கு தடை விழுந்துவிடுமோ என்று அதையும் மறைத்திருப்பார்.

‘கலக்கப்போவது யாரு?’ டைட்டில் ஜெயித்தபிறகு அதே டி.வியில் காம்பியரிங் செய்ய வாய்ப்பு வருகிறது. ஆனால் ரிஜெக்ட் செய்கிறார்கள். அன்று அவர் அடைந்த வேதனை. வளர்ந்து கொண்டிருக்கும்போதே திருமணம் செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலை. அம்மா பேச்சைத் தட்ட முடியாமல் சம்மதித்ததால் திருமண மேடையில் கழுத்தை நெரிக்கிறது பொருளாதார சூழல். வரவேற்பு நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக அதிக கூட்டம் வந்துவிட அவர்களை சாப்பிட வைக்க அம்மாவுக்கே தெரியாமல் எங்கெங்கோ கடன் கேட்க வேண்டிய சூழல். அதை அடைக்க அவர் பட்ட பாடு.. இது எல்லாமே சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மட்டும்தான்..!

சினிமாவுக்கு வந்த பின்னர் இதைப் போல பல கடினமான சூழ்நிலைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார். இப்போதும் சிவாவை சந்தோஷப்படுத்துவது பட ஓப்பனிங் மட்டுமல்ல. அவரது மகள் ஆராதனா. மனைவி ஆர்த்தி. அம்மா, அக்கா. மற்றும் புது மகன் இந்த ஐவர்தான் சிவாவின் சந்தோஷம். கடந்த 8 ஆண்டுகளாக சிவா தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை மாற்றவில்லை. ‘கீப் யுவர் பேரன்ட்ஸ் ஹேப்பி… லைஃப் வில் பி தெ ஹேப்பியஸ்ட்…’ சினிமாவில் பார்ட்டி நடந்தால் ஒரு ஓரமாக நின்று மற்றவர்கள் குடிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஜுஸ் மட்டும் குடித்துக்கொண்டிருப்பார். அது அவர் அம்மாவுக்கு அவர் செய்து கொடுத்த சத்தியம். சிவாவின் வாழ்க்கை எப்போதுமே சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கான பாடம்.

இப்போதைய நிலையில் ஓப்பனிங்தான் ஒரு ஹீரோவின் பொசிஷனை தீர்மானிக்கிறது. தமிழ்நாட்டில் ஓப்பனிங் இருக்கும் ஹீரோக்கள் நான்கே பேர் தான். ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன். எனவேதான் இந்த நான்கு பேரின் படங்களை மட்டும் MG எனப்படும் மினிமம் கியாரண்டி முறையில் வாங்கத் தயாராக இருக்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள். சினிமாவுக்கு என்ட்ரியான இந்த 11 வருடத்தில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் பெரியதாகவே இருந்திருக்கிறது. படம் வெற்றியோ தோல்வியோ எதிர் நீச்சலில் துவங்கிய இவரது சினிமா கிராஃபின் ஏறுமுகம் இன்னும் அதிகமாகிக்கொண்டே தான் இருக்கிறது. மூன்றாம் கட்ட, இரண்டாம் கட்ட நடிகன் என்ற பேரையெல்லாம் தாண்டி இன்று முதற்கட்ட நடிகனாகவும் ஓப்பனிங்கில் மாஸ் காட்டும் ரசிகர்களை கொண்ட கலைஞனாகவும் உயர்ந்திருக்கிறார்.

இப்போதும் கூட இவரிடம் யாராவது சினிமாவில் பேரும் புகழும் கிடைத்தபின் நிறைய மாறிவிட்டீர்களா என்று கேட்டால் தான் இருக்கும் வீடும் காரும் மட்டுமே மாறியுள்ளதாகவும் தான் இன்றும் சத்யம் தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி படம் பார்க்கும் ரசிகனாகவே சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் எதார்த்தமான பதிலையே சொல்லி அசாத்திய வளர்ச்சியை தன் தலையில் சுமக்காமல் தோளில் போட்டுக் கொண்டு மிளிரும் அன்பு சிவா-வுக்கு சினிமா பிரஸ் கிளப் சார்பில் ஹேப்பி பர்த் டே சொல்வதில் மகிழ்ச்சி