அந்நியன் கதை உரிமை யாரிடம்? – ஆஸ்கார் ரவி Vs ஷங்கர் தரப்பு முழு தகவல்கள்!

விக்ரம், சதா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் 2005ஆம் ஆண்டில் அந்நியன் திரைப்படம் வெளிவந்தது. இந்தப் படத்தை ஆஸ்கா் ஃபிலிம்ஸ் சார்பில் வி. ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார். இந்த நிலையில், இந்தப் படத்தை ரன்வீர் சிங்கை வைத்து இந்தியில் ரீ – மேக் செய்யப்போவதாக இயக்குநர் ஷங்கர் நேற்று அறிவித்து இருந்தார். அந்த இந்திப் படத்தை ஜெயந்திலால் கடா என்பவர் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில், அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ஃபிலிம்ஸ் வி. ரவிச்சந்திரன் இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அந்நியன் படத்தின் கதைக்கான முழு உரிமையும் தன்னிடமே இருப்பதாகவும் அதனை இந்தியில் தயாரிக்கக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து ஆஸ்கார் ரவி அனுப்பிய நோட்டீசில், “அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் நான்தான். படத்தின் கதை உரிமை முழுவதையும் எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து நான்தான் வாங்கியிருக்கிறேன். அதற்கான பணமும் அவருக்குக் கொடுக்கப்பட்டு விட்டது. அந்தக் கதையின் முழுமையான உரிமையாளர் நான்தான். இந்த நிலையில், என்னுடைய அனுமதி இல்லாமல் அந்தக் கதையை தழுவியோ, மூலக்கருவைக் கொண்டோ, ரீ – மேக் செய்து படம் எடுப்பது சட்டவிரோதமாகும். நீங்கள் எடுத்த பாய்ஸ் திரைப்படம் சரியாக ஓடாத நிலையில், பெரும் அழுத்தத்தில் இருந்தீர்கள். இருந்தபோதும் அந்நியன் படத்தை இயக்கும் வாய்ப்பை நான் உங்களுக்கு அளித்தேன். இதற்குப் பிறகுதான் இழந்த இடத்தை நீங்கள் பிடித்தீர்கள். அது என்னுடைய ஆதரவால்தான் நடந்தது. இதை நீங்கள் மறந்து விட்டது வருத்தமளிக்கிறது.

என்னிடம் தெரிவிக்காமல் என்னுடைய வெற்றிகரமான அந்நியன் படத்தை இந்தியில் ரீ -மேக் செய்ய முயற்சிக்கிறீர்கள். நீங்கள் சில நெறிமுறைகளை கடைப்பிடிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். அப்படியிருக்கும்போது எப்படி இம்மாதிரி ஒரு சட்டவிரோதமான செயலைச் செய்கிறீர்கள் என்பது புரியவில்லை. முழு உரிமையும் என் வசம் உள்ள கதையை வைத்துக்கொண்டு இந்த விவகாரத்தில் இதற்கு மேல் ஏதும் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறீர்கள்” என ஷங்கருக்கு இது தொடர்பாக ரவிச்சந்திரன் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதை அடுத்து ஆஸ்கர் ரவிச்சந்திரன் அனுப்பிய கடிதத்துக்கு, இயக்குநர் ஷங்கர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் இயக்குநர் ஷங்கர் கூறியிருப்பது இதுதான்:

” ‘அந்நியன்’ திரைப்படத்தின் கதைக்கு நீங்கள் உரிமை கோரிய மின்னஞ்சலைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். ‘அந்நியன்’ 2005-ம் ஆண்டு வெளியானது. படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே, படத்தின் கதையும், திரைக்கதையும் என்னுடையது என்று தெரியும். கதை, திரைக்கதை, இயக்கம் ஷங்கர் என்கிற பெயருடன்தான் இந்தப் படம் வெளியானது.

படத்தின் திரைக்கதையை எழுத யாரையும் நான் எழுத்துபூர்வமாக நியமிக்கவில்லை. எனவே, இந்தத் திரைக்கதையை நான் விரும்பும்படி பயன்படுத்திக் கொள்ள எனக்கு உரிமை உள்ளது. படைப்பை எழுதியவன் என்ற முறையில் எந்தச் சூழலிலும் எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது.

மறைந்த சுஜாதாவின் பெயரை இதில் சம்பந்தப்படுத்தியதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். அவர் இந்தப் படத்துக்கு வசனங்கள் எழுத மட்டுமே நியமிக்கப்பட்டார். அதற்கான உரிய பெயரும் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் திரைக்கதையிலோ, பாத்திரப் படைப்பிலோ எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை. எனவே வசனகர்த்தா என்பதைத் தாண்டி அவர் எந்த வகையிலும் இதில் ஈடுபடவில்லை.

திரைக்கதை என்னிடம் இருப்பதால் அதை நான் விரும்பும் வகையில் பயன்படுத்திக் கொள்ளும் முழு உரிமை எனக்குள்ளது. ஏன், அந்நியனுக்காக நீங்களோ உங்கள் நிறுவனமோ எந்த விதமான உரிமைகளையும் கோர முடியாது. படத்தை ரீமேக் செய்யவும் முடியாது. ஏனென்றால் அந்த உரிமை எழுத்துபூர்வமாக உங்களுக்குத் தரப்படவில்லை. அப்படி எதுவும் இல்லாத நிலையில், படத்தின் கதைக்கான உரிமை உங்களிடம் உள்ளது என்பதைச் சொல்ல உங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை.

ஒரு தயாரிப்பாளராக, ‘அந்நியன்’ படத்தின் மூலம் கணிசமாக லாபம் அடைந்து உள்ளீர்கள். தற்போது தேவையில்லாமல், உங்களுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத எனது எதிர்கால முயற்சிகளின் மூலம் அநியாயமாக உங்களுக்கு ஆதாயம் தேடப் பார்க்கிறீர்கள். இந்த விளக்கத்துக்குப் பிறகாவது உங்களுக்கு ஒழுங்கான புரிதல் வரவேண்டும். இது போன்ற அடிப்படையற்ற விஷயங்களைத் தேவையின்றி பேச மாட்டீர்கள் என்று என்னால் மட்டுமே நம்ப முடியும்.

இதுபோன்ற மோசமான, சட்டவிரோதமான உரிமை கோரல்களால் எனது எதிர்கால திரைப்படங்களைப் பாதிக்க முயலும் நிலையில் ஒரு இயக்குநராக, கதாசிரியராக உண்மையான நிலை குறித்த தெளிவைத் தரவே எந்தவித பாரபட்சமும் இன்றி இந்த பதில் அளிக்கப்பட்டிருக்கிறது.” என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.