நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்! தலைவர்கள் & திரைபிரமுகர்கள் அஞ்சலி

பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் ஒரு திருமணவிழாவில் கலந்து கொண்ட போது நேற்றிரவு (பிப்ரவரி 24) திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54.

ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூர் மற்றும் இளைய மகள் குஷி ஆகியோருடன் தனது உறவினரும் திரைப்பட நடிகருமான மோஹித் வர்மாவின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள துபாய் சென்றுள்ளார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நேற்றிரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார்.

(துபாய் திருமண நிகழ்வில் கடைசியாக எடுக்கப்பட்ட புகைப்படம்)

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவி. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சொந்த ஊராக கொண்ட இவர் தனது 4 வயதிலேயே திரைத் துறையில் நுழைந்து விட்டார். தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் முருகக் கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார்.

கே. பாலசந்தரின் மூன்று முடிச்சு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்ததில் 6 பிலிம் பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் விருது என பல விருதுகளை பெற்றார். சிவாஜி, கமல், ரஜினி போன்ற பிரபல தமிழ் நடிகர்களுடனும், முன்னணி தெலுங்கு, கன்னடம், இந்தி நடிகர்களுடனும் நடித்தவர்.

தமிழ் திரைப்படங்களில் புகழின் உச்சிக்கு சென்ற ஸ்ரீதேவி. இந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். பின்னர் இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு பிறகு திரைத்துறையை விட்டு விலகிய அவர், 2012ஆம் ஆண்டு இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி ஆனார். தொடர்ந்து விஜய்யின் புலி படத்திலும், அம்மாவின் பெருமையை பேசும் விதமாக அவர் கடைசியாக நடித்து வெளிவந்த ‘மாம்’ திரைப்படத்திலும் நடித்தார். இந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீதேவியின் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​ஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதேபோன்று அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

குடியரசுத் தலைவர், ராம்நாத் கோவிந்த்

நடிகை ஸ்ரீதேவியின் மறைவு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தை இவரது மரணம் நொறுக்கிவிட்டது. மூன்றாம் பிறை, லாம்ஹே, இங்கிலீஷ் விங்க்லீஷ் ஆகிய படங்களில் இவரது நடிப்பு மற்ற நடிகைகளுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நரேந்திர மோடி

இந்திய திரைப்படத் துறையில் மூத்தவரான ஸ்ரீ தேவியின் பல்வேறு கதாபாத்திரங்கள் மறக்க முடியாதவை. ஸ்ரீதேவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவு செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். நம்ப முடியாத திறமைகளை தன்னுள்ளே கொண்டவர். அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

புகழ்பெற்ற திரைப்பட நடிகை திருமதி ஸ்ரீதேவி அவர்கள் நேற்று இரவு (24.2.2018) துபாயில் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். அவரின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி இந்திய திரையுலகிற்கே ஒரு பேரிழப்பாகும். ஸ்ரீதேவி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம்

மிகச் சிறந்த மூத்த நடிகையான ஸ்ரீதேவியின் மறைவு துரதிஷ்டவசமானது. நடிகை ஸ்ரீதேவியின் துரதிஷ்டமான மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது வாழ்வும், உதாரணமாகத் திகழும் திரை வாழ்வும் பலதலைமுறைகளைக் கடந்து பலரையும் ஈர்த்துள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்

தமிழ் மற்றும் பிற மொழி திரைப்படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான நடிகை ஸ்ரீதேவி அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழிசை, தமிழக பாஜக தலைவர்

தென் தமிழகத்தில் தேசிய குடும்பத்தில் பிறந்து தனது நடிப்பு திறமையால் தேசத்தையே திரும்பி பார்க்க வைத்த மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு எனது அஞ்சலி. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் சினிமா துறையினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்திய சினிமா உலகிற்கு இது மிகப்பெரிய பேரிழப்பு.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர்

தமிழ்த் திரையுலகிலும் இந்தி திரை உலகிலும் தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து தன் ஒப்பற்ற நடிப்பாற்றலால் திரையுலகில் புகழ்கொடி நாட்டியவர் ஸ்ரீதேவி அவர்கள். பத்மஸ்ரீ விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர். பலகோடி ரசிகர்களை பெற்றவர். அவரது திடீர் மறைவை நம்பமுடியவில்லை. மிகவும் துரதிஷ்டவசமானது, மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. தமிழகத்திற்கு புகழும் பெருமையும் சேர்த்த நடிகை ஸ்ரீதேவி அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரை உலகினர், ரசிகர்கள் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.

விஜயகாந்த், தேமுதிக பொதுச்செயலாளர்

நடிகை ஸ்ரீதேவி அவர்கள் துபாயில் திடீர் என மாரடைப்பால் காலமானார் என்கிற செய்தி கேட்டு பேரதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவர்கள் திரையுலகில் சிறுவயது முதல் எத்தனையோ கதாபாத்திரத்தில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். அவரது இழப்பு திரையுலகிற்கு மிகப்பெரிய ஈடுசெய்யமுடியாத ஒரு இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

தினகரன், சட்டமன்ற உறுப்பினர்

இந்திய திரையுலகின் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ ஸ்ரீதேவியின் திடீர் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீதேவி, ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது அபரிதமான திறமையால் தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தி திரைப்படத் துறையிலும் முடி சூடா ராணியாக வெற்றிக் கொடி நாட்டியவர். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

ரஜினி காந்த்

அதிர்ச்சியும் மன உளைச்சலுக்கும் ஆளானேன். நல்ல தோழியை இழந்து விட்டேன். திரைத் துறை ஆகச் சிறந்த ஒருவரை இழந்திருக்கிறது. ஸ்ரீதேவியின் குடும்பத்தினரைப் போல மிகவும் மன வேதனை அடைகிறேன்.

கமல்ஹாசன்

மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்.

பாரதிராஜா

ஸ்ரீதேவி இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவரின் சிரிப்பு நம் கண்ணை விட்டு மறையவில்லை. தெற்கில் இருந்து இந்திக்கு சென்ற நடிகைகளில் மிகச்சிறப்பான வெற்றி பெற்றவர் ஸ்ரீதேவி.

குஷ்பு

ஸ்ரீதேவியின் குழந்தை சிரிப்பை தவறவிட்டுவிட்டோம். ஸ்ரீதேவியின் மறைவு குறித்து துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.

கவுதமி

அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் ஒரு சிறந்த நடிகை.

த்ரிஷா

வாழ்க்கை மிக குறுகியது. கணிக்க முடியாதது என அவரது மரணம் உணர்த்தியுள்ளது. அவரது மறைவால் அதிர்ச்சியடைந்தேன். ஆன்மா அமைதி அடையட்டும்.

நயன்தாரா

அவர் இறந்த செய்தி என்னை அதிர்ச்சியடையச் செய்தது. அவர் ஒரு உண்மையான நட்சத்திரம் மட்டுமல்லாமல் கண்ணியமிக்க பெண்ணாகவும் வாழ்ந்தார். இன்று மிகவும் சோகமான நாள்.

சுஷ்மிதா சென்

ஸ்ரீதேவி மேடம் மறைந்து விட்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சிக்குள்ளானேன். எனது அழுகையை நிறுத்த முடியவில்லை.

பிரீத்தி ஜிந்தா

ஸ்ரீதேவி மறைந்து விட்டார் என்ற செய்தியால் மனமுடைந்து விட்டது. இந்த செய்தி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவரது ஆன்மா அமைதியில் ஆழட்டும்.

பிரியங்கா சோப்ரா

எனக்கு வார்த்தைகள் இல்லை. ஸ்ரீதேவி மீது அன்பு செலுத்தியவர்கள் அனைவருக்கும் எனது இரங்கல்கள். இது ஒரு கருப்பு தினம்.