பிர்சா முண்டாவின் வாழ்க்கையை ஹிந்தியில் எடுக்க ஆயத்தமாகும் பா. இரஞ்சித்!

“காலா” திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். “நமா பிக்சர்ஸ்” மிக பிரம்மாண்ட மாக தயாரிக்க இருக்கும் இத்திரைப்படம், ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக வீரச் சமர் புரிந்த பழங்குடியின போராட்டக்காரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருக்கிறது.

ஆங்கிலேயர்கள், ஜமீன்தார்கள் ஆகிய இருதரப்பிடமும் தங்கள் பாரம்பரிய நிலத்தை இழந்து, அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களை மீட்பதற்காகப் சிறுவயது முதலே போராடியவர் பிர்சா முண்டா. 1890களில் பிரிட்டிஷ் இந்தியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டபோது காட்டில் பயிரிடும் உரிமைக்கான வரி நிலுவையைத் தள்ளுபடி செய்யக் கோரி பெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை 1894 அக்டோபர் 1ஆம் தேதி பிர்சா முண்டா நடத்தினார். தங்கள் போராட்டக்குரல் அதிகாரவர்க்கத்தால் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில் ஆயுதம் ஏந்தி போராடினார். ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராகப் போராட பழங்குடிகளைத் திரட்டிக் கொரில்லா படையை பிர்சா முண்டா உருவாக்கினார். 1900ஆம் ஆண்டு ஆங்கிலேயப் படையால் கைது செய்யப்பட்டு, அதே ஆண்டு சிறையில் தனது 25 வயதில் இறந்தார்.

வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே இயக்குநர் பா.  இரஞ்சித்  கடந்த மே மாதம் தயாரிப்பு நிறுவனத்துடன் இப்படத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டு, முதற்கட்ட பணிகளை ஆரம்பித்திருக்கிறார் . இதற்காக வட மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் கிராமங்களுக்குச் சென்று தீவிரமாக தகவல்களை சேகரித்து வருகிறார். இப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்க இருக்கிறது.

பிர்சா முண்டா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முன்னணி நடிகருடன் பேச்சுவார்த்தை நடை பெற்று வரும் நிலையில், இப்படத்திற்கு பாலிவுட் உலகில் இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. “நமா பிக்சர்ஸ்” ஏற்கனவே தயாரித்த “பியாண்ட் த க்ளவுட்ஸ்” திரைப்படம் உலக அளவில் பாராட்டுகளை குவித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதே பிர்சா முண்டாவை வைத்து படம் செய்ய ஆயத்தமாகி விட்டதாக சொன்ன இயக்குநர்  கோபி நயினாரை நாம் தொடர்பு கொண்டு பிர்ஸா முண்டா பயோபிக் குறித்து கேட்ட போது, “ஆம், நான் பிர்ஸா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்க உள்ளேன். வாழ்க்கை வரலாற்றை யார் வேண்டுமானாலும் இயக்கலாம். ஹிட்லரைப் பற்றி, இயேசுவைப் பற்றி பல படங்கள் வந்துள்ளன. பிர்ஸா முண்டாவைப் பற்றி படம் எடுப்பது எனது விருப்பம், உரிமை என்பது போல் அவருக்கும் அந்த உரிமை இருக்கிறது. இது ஜனநாயகம். இது தெரியாமல் சிலர் இதை விவாதமாக்குகிறார்கள். இதனால்தான் நான் இப்போது அறம் 2 இயக்குகிறேன். இதை முடித்தபின் அந்த படத்தை இயக்குவேன்” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது..