ரசிகர்களை சிலிர்க்கவைக்கும் 3D, மெய்நிகர் காட்சியனுபவ அரங்க அமைப்புகள்!

42 ஆண்டுகளுக்கு பிறகு ஷோலே திரைப்படத்தில் வரும் கபார் சிங் தொடர்பான காட்சிகள் ராமநாகராம் மாவட்ட பாறைக் குன்றுகளில் என்றென்றும் நினைவுகூரத்தக்கவகையில் மீண்டும் பொறிக்கும் முயற்சிகள் நடந்துவருகிறது. அதுமட்டுமின்றி ஒரு பெரிய வெற்றிப்படமான ஷோலே படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்ட அங்குள்ள மலைப்பாறை இடுக்குகள் ரமேஷ் சிப்பியின் திரை அனுபவத்தோடு ஒரு பெரிய இசைக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது.

கர்நாடகா சுற்றுலா வளர்ச்சிக்கழகம் 42 ஆயிரத்து 184 அடிகளுக்கு ஷோலே ஒரு ‘3டி விர்சுவல் ரியாலிடி கிராமம்’ ஒன்றை ராமநாகராம் மாவட்டத்தில் ராமதேவரா கிராமம் அருகே நிறுவும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இங்குதான் ஷோலே திரைப்படத்தின் காட்சிகள் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றது. இப்பகுதி ‘ஷோலே ஸ்பாட்’ என்றே கர்நாடக மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது.

7.5 கோடி திட்டம்

கர்நாடக சுற்றுலாத்துறை சமர்ப்பித்துள்ள 7.5 கோடியில் வினோதமான இந்த திட்ட வரைவுக்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஷோலே திரைப்படத்தின் விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள் நடைபெற்ற இடத்தை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். அந்த பொழுதுபோக்கு ரசனையை ஊக்குவிக்கும் வகையில் தயாரித்துள்ள இந்த மாநில திட்டத்தில் தனியார் துறையினரும் இணைந்துகொள்ளலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுடன் பேசவுள்ள கதாபாத்திரங்கள்

ஷோலே திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் உயிர்ப்போடு தோன்றி பார்வையாளர்களை திக்குமுக்காடச் செய்யும்வகையில் ஒரு முப்பரிமாண (3D) கிராமம் ஒன்றை மறு நிர்மாணம் செய்யப்பட உள்ளது. இதனோடு விஆர் (Virtual Reality) எனப்படும் மெய்ந்நிகர் அனுபவத்தைத் தரும் வகையிலும் தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட உள்ளன. பார்வையாளர்களுக்காக உயிர்ப்புடன் தோன்றுவதோடு பார்வையாளர்களையும் தங்களுடன் உரையாடி வசனங்களை சொல்லி நடிக்கும் வாய்ப்பும் இதன்மூலம் ஏற்படுத்தப்படுத்தப்பட உள்ளதாக சுற்றுலாத்துறையின் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஷோலே படப்பிடிப்புத்தளத்தில் இந்தி நடிகர் தாகூர் தோன்றி ”ஏஹ் ஹாத் ஹி…, பான்ஸி கா பந்தா ஹாய்” என்று கூறும்போது பார்வையாளர்களும் உடனே அதைத் தொடர்ந்து அந்த வசனத்தை அவரைப்போலவே உணர்ச்சிகரமாகப் பேசி செய்ய நடித்துக்காட்ட இயலும். மற்றும் கூட்டமாக ”ஏஹ் ஹாத் ஹம் டேடே தாகூர்” அதிகாரி சொல்வதையும் பின்பற்றி சொல்லலாம். இப்படத்தில் இடம்பெறும் வன்முறைக் காட்சியில் கொள்ளையனாக வரும் கபாரிடம் சிக்கிக்கொண்ட சஞ்சீவ் குமார் கையும் வெட்டுப்படும் காட்சி அது. அம்ஜத் கானின் மிகச்சிறந்த நடிப்பபாற்றலையும் வெளிப்படுத்தக்கூடிய இடம் அது.

தனியாரும் இணையலாம்

ஷோலேவின் முக்கியப் பாத்திரங்களான அமிதாப் பச்சன், தர்மேந்திரா, அம்ஜத் கான் ஆகிய மூவரும் சுற்றுலாப் பார்வையாளர்கள் முன் தோன்ற உள்ளனர். அதுமட்டுமின்றி அங்கு அச்சமயம் உடன் இருப்பதுபோன்ற உணர்வைத் தருகிற வகையில் காட்சிரீதியான அனுபவங்களைத் தரக்கூடிய தொழில்நுட்பத் துணையோடு ஒலிஅமைப்புகள் வடிவமைக்கப்பட உள்ளன என்றார்.

ராமநாகராம் மாவட்ட நிர்வாகம் இப்பணிளை சிறப்பாக செய்துமுடிக்க சிப்பி புரடெக்ஷன்ஸ் தவிர, மற்ற தனியார் நிறுவனங்களையும் பொது-தனியார் கூட்டுப்பணிகளின் (PPP) திட்டத்தின்கீழ் இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது. யாரும் முன்வரவில்லையெனில் கர்நாடக அரசாங்கமே தனியாக செப்டம்பரில் இப்பணியைத் தொடங்க உள்ளது.

தொடக்கவிழாவில் அமிதாப் பச்சன்

இப்படத்தின் முக்கிய நடிகர்களாக அமிதாப், தர்மேந்திரா, ஹேமமாலினி, ஜெயபாதுரி மற்றும் உடன் நடித்த இதர முக்கிய நடிகர்களையும் மெய்நிகர் அனுபவத்தைத்தரும் துவக்கவிழாவுக்கு அழைக்கப்பட உள்ளனர். மாநில சுற்றுலா அமைச்சர் பிரியங் கார்கே மற்றும் சக்தி மற்றும் ராமநாகராம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் டி.கே.சிவகுமார் இத்திட்டப் பணிகளை கவனித்து வருகின்றனர்.

மறக்கவிலாத காட்சிஅமைப்புகள்

ஷோலே திரைப்படத்தில் வரும் சில மறக்க முடியாத பகுதிகளான தர்மேந்திரா உயர்ந்த இடத்தில் இருந்துகொண்டு தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டும் காட்சி, ஹேமமாலினியின் பாறை நடன (பாஸந்தி) பாடல் காட்சி, சஞ்சீவ் குமார் கைவிலங்கு பூட்டப்பட்ட காட்சி, மரவீடு ஒன்று என இங்கு நிரந்தரமாக காட்சிகளாக அமைக்கப்பட இருக்கின்றன.

பொன்விழா கண்ட ‘ஷோலே’

ஷோலே முக்கியமான பொழுதுபோக்கு திரைப்படம் என்றவகையில் இந்தியாவெங்கும் வசூல்ரீதியாக வெற்றிபெற்ற படமாகும். 60 திரையரஙுகுகளில் பொன்விழாவும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெள்ளிவிழா கண்டதையும் அக்கால பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் இடம்பெற்ற ஆர்.டி.பர்மன் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களை மயங்கவைத்தன. வர்த்தக வெற்றியைத் தவிர வேறெந்தவகையிலும் குறிப்பிடத்தக்க படம் இல்லையென்றாலும 42 ஆண்டுகள் கடந்தும் அதை நினைவுகூரத்தக்க வகையில் கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள இம்முயற்சிக்கு வரவேற்பு நிச்சயம் என்பதில் எந்த ஐயமுமில்லை.