நடிகர் வினு சக்கரவர்த்தி காலமானார்; தமிழ் திரையுலகம் அஞ்சலி

நடிகர் வினு சக்கரவர்த்தி உடல் நலக் குறைவால் சென்னையில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 74. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1002 படங்களில் நடித்தவர் வினு சக்கரவர்த்தி. இவர் நடிப்பில் வெளியான ‘குருசிஷ்யன்’, ‘அண்ணாமலை’, ‘அருணாசலம்’, ‘நாட்டாமை’, ‘மாப்பிளை கவுண்டர்’, ‘நினைத்தேன் வந்தாய்’, ‘ஜெமினி’, ‘முனி’, ‘தேசிங்கு ராஜா’, ‘வாயை மூடி பேசவும்’ போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

வினு சக்கரவர்த்தி நடித்த முதல் படம் ‘கரும்பு வில்’, 500வது படம் ‘சின்னத்தாயி’. ராகவா லாரன்ஸ் இயக்கிய ‘முனி’ ஆயிரமாவது படம். கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் கதாசிரியாராக பணிபுரிந்தார். அவருடன் இணைந்து பணியாற்றிய ‘பரசக்கே கண்ட தின்மா’ என்ற படம் வெற்றிபெற்றது. அதுதான் பின்பு ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ என்ற தலைப்பில் தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. ‘வண்டிச்சக்கரம்’ படத்தில் சிலுக்கு என்ற கதாபாத்திரத்தில் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தினார்.

சுமார் 3 ஆண்டுகளாக உடல் நலமின்றி இருந்து வந்த வினு சக்கரவர்த்தி புதன்கிழமை சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் காலமானார்.

வினு சக்கர வர்த்தியின் மனைவி பெயர் கர்ணப்பூ. இவர்களுக்கு சரவணன் என்கிற மகனும், சண்முகப்பிரியா என்கிற மகளும் உள்ளனர். வினு சக்கரவர்த்தியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

வினு சக்ரவர்த்தியின் மரணத்தையொட்டி தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “பிரபல நடிகர் வினுசக்ரவர்த்தி (74) சென்னையில் போலிஸ் சப் -இன்ஸ்பெக்டராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து, பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகல் அவர்களிடம் கதாசிரியர் மற்றும் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.

‘ ரோசாப்பூ ரவிக்கைகாரி’ படம் மூலம் திரைக்கதை எழுதி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்பு ‘வண்டி சக்கரம் ‘,’கோயில் புறா’,’இமைகள்’, ‘பொண்ணுக்கேத்த புருஷன் ‘ ஆகிய படங்களுக்கு கதை-திரைக்கதை, வசனம் எழுதி துணை இயக்குனராகவும் பணி புரிந்தார். தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், படுகா,இந்தி,ஆங்கிலம் போன்ற மொழிகளில் 1003 படங்களில் நடித்துள்ளார். அவரது கடைசி படம் சீரடி சாய்பாபா.

தனது இயல்பான நடிப்பால் மக்கள் அனைவரையும் கவர்ந்த இவர் இன்று வியாழக்கிழமை காலமானதை அறிந்து அதிர்ச்சியுற்றோம்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடையவும், அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது” என்று கூறியுள்ளது