‘அசுர’னுக்குக் காரணமே தனுஷ்தான்! – தாணு ஓப்பன் டாக்!

இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ் – வெற்றிமாறன் – ஜி.வி.பிரகாஷ்குமார் கூட்டணியில் புதிய படத்தை தயார் செய்து ரிலீஸ் செய்யப் போகும் பெருமிதத்தில் இருக்கிறார், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை தழுவி எடுக்கப்படும் படம்தான் அசுரன். வெற்றிமாறன் நாவலை தழுவி எடுக்கும் இரண்டாவது படம் இது. இதற்கு முன் லாக்கப் நாவலை தழுவி ” விசாரணை ” படம் எடுத்திருந்தார். இயக்குனர் வெற்றிமாறனும் தனுசும் இணையும் 4வது படம். தனுஷ் நடிக்காமல் வெறும் தயாரிப்பாளராக இணைந்து காக்காமுட்டை, விசாரணை, கொடி படங்களை செய்துள்ளார்கள். அவற்றையும் சேர்த்தால் தனுஷ் வெற்றிமாறன் இணையும் ஏழாவது படம் இது.

இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ள நிலையில் நாளை ரிலீஸாக இருக்கும் ‘அசுரன்’ படத்தின் புரொட்யூசர் அகசாய சூரன் கலைப்புலி தாணுவிடம் ”இந்த ‘அசுரன்’ படைப்பின் காரணகர்த்தா எது அல்லது யார் ?’’ என்று கேட்டோம்

தாணு உடனே அவருக்கே உரிய சிரிப்பை உதிர்த்து விட்டு ‘‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தை நானும் தனுஷும் சேர்ந்து தயாரித்திருந்தோம். அந்தப் படத்தில் என்னுடைய வேலையையும் அணுகு முறையையும் பார்த்த தனுஷ்,நாம ரெண்டு பேரும் சேர்ந்து படங்கள் பண்ணலாமா சார்’னு கேட்டார். நீங்க எப்போ சொன்னாலும் ஆரம்பிக்கலாம்’னு நான் சொன்னதும், ‘அப்போவடசென்னை’க்கு அடுத்த படமா ஆரம்பிச் சிடலாம் சார். வெற்றிமாறனை கமிட் பண்ணுங்க’ன்னு சொன்னார். இப்படி ஆரம்பமானதுதான் `அசுரன்’. ‘அசுர’னுக்குக் காரணமே தனுஷ்தான்.’’என்றார்

”இப்ப ‘அசுரன்’ எப்படி – வந்திருக்கு?’’

`இந்தப் படத்துக்காக இயக்குநர் வெற்றிமாறன் ஆபீஸிலேயே இருந்து வேலை பார்த்து, அங்கேயே தூங்கி வீட்டுக்குப் போகாமலேயே அவ்வளவு மெனக்கெட்டார் . நான் போகும் போது எந்த சீனுக்கான எடிட் போகுதோ அதை மட்டும் பார்த்துட்டு வருவேன். அப்படி நான் பார்த்த காட்சிகள் அனைத்துமே புதுசா இருந்துச்சு. இந்தப் படத்தின் தயாரிப்பாளரா இருந்துட்டு, இதை நான் சொல்லும்போது கொஞ்சம் ஓவர் டோசா தெரியுயலாம். ஆனால், நீங்கள் படம் பார்க்கும்போது நான் சொன்னதை உணருவீங்க. பூமணியோடவெக்கை’ நாவலுக்குச் சிறந்த திரைக்கதையை எழுதியிருக்கார், வெற்றிமாறன்.’’

‘ஒரு தயாரிப்பாளரா தனுஷைப் பற்றிச் சொல்லுங்க?’

“குறைஞ்ச கால ஷெட்யூல் என்பதால் பயங்கர டைட் வொர்க்லதான் படத்தை எடுத்தோம். அதற்கெல்லாம் ஒத்துழைச்சு, தன்னைத்தானே வருத்தி தன்னுடைய முழு உழைப்பைக் கொடுத்திருக்கார் தனுஷ். இதற்கெல்லாம் மேல 36 வயதுடைய ஹீரோ, 48 வயதுடைய ஒரு கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டதே பெரிய விஷயம். அதிலும் 20 வயதுடைய ஒரு பையனுக்கும், 16 வயதுடைய ஒரு பையனுக்கும் அப்பாவா நடிச்சிருக்கார். இந்தப் படம் பார்க்கும் போது எந்த இடத்திலும் தனுஷ், தனுஷா தெரிய மாட்டாராக்கும்.’’

‘`ரஜினியை வைத்தும் படம் தயாரிச்சிருக்கீங்க; அவரின் மருமகன் தனுஷை வைத்தும் படம் தயாரிச்சி ருக்கீங்க. இரண்டு பேர்கிட்டேயும் ஒற்றுமை ஏதாவது இருக்கா..?’’

“இரண்டு பேரும் ஒப்பிட முடியாத அளவில் இருக்காங்கன்னு எனக்குத் தோணுது. ரஜினி சார் நடந்து போன வழியில் இப்போ தனுஷ் போயிட்டிருக்கார். ஏன்னா, அவருடைய செயல்பாடுகளைப் பார்க்கும்போது எனக்கு அப்படித்தான் தோணுது.’’

‘`தாணு – தனுஷ் காம்போவின் மற்ற படங்கள் எந்த நிலையில் இருக்கு?’’

“மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிற படத்துக்காக லண்டனில் கம்போஸிங் போயிட்டிருக்கு. சந்தோஷ் நாராயணனும் மாரியும் லண்டனில் வொர்க் பண்ணிட்டிருக்காங்க. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிற படத்துக்கும் இப்போ கம்போஸிங்தான் போயிட்டிருக்கு. ஷான் ரோல்டனும் செல்வாவும் அதில் பிஸியா இருக்காங்க.’’