“மெட்ராஸ்காரன்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !!

SR PRODUCTIONS சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி படத்தின் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், நிஹாரிகா, கலையரசன், ஐஸ்வர்யா தத்தா நடிப்பில், புதுமையான ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகும் திரைப்படம் “மெட்ராஸ்காரன்”

இப்படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான முறையில் இனிதே நடந்தேறியது.

நடிகர் கலையரசன் பேசியதாவது..
இயக்குநர் வாலி இந்தக்கதையைச் சொன்னபோதே சூப்பராக இருந்தது. எனக்கு நடிக்க மிகப்பெரிய இடம் இருக்கிறது. படத்தில் நடிக்கும் எல்லோருக்கும் நல்ல இடம் கிடைக்கும். ஷேனுக்கு இந்தப்படம் கண்டிப்பாகச் சிறப்பான படமாக இருக்கும். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும். அனைவருக்கும் என் நன்றிகள்.

நடிகை நிஹாரிகா பேசியதாவது…
இயக்குநர் வாலி சார் கதை சொன்னபோதே, எனக்கு ரொம்ப பிடித்தது. ஷேன் உடன் நடிப்பது மிகச் சந்தோஷம். இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படமாக இருக்குமென்று நம்புகிறேன். அனைவருக்கும் என் நன்றிகள்.

இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியதாவது…
தயாரிப்பாளருக்கு என் முதல் நன்றி. என் படம் பார்த்துக் கூப்பிட்டார். கதை சொன்ன 5 நிமிடத்தில் இந்தப்படம் செய்ய ஒத்துக்கொண்டார். ஷேன் பிரதர் அவரைச் சந்தித்ததே மறக்க முடியாத அனுபவம், அவர் தமிழில் நடிக்க ஒத்துக்கொண்டதற்கு நன்றி. ஐஸ்வர்யா தத்தா அவரால் தான் இந்தப்படம் ஆரம்பித்தது அவருக்கு என் நன்றி. நிகாரிகாவை இப்போது தான் நேரில் சந்திக்கிறேன். அவருக்கு இப்படத்தில் நல்ல கதாப்பாத்திரம். சாம் சிஎஸ் ரசிகன்,அவருடன் சேர்ந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. படம் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது படம் முடித்த பின் உங்களிடம் சொல்கிறோம். இந்தப்படத்தில் பணியாற்றும் அனைவருக்கும் என் நன்றிகள்.

நடிகர் ஷேன் நிகாம் பேசியதாவது…
சின்ன வயதிலிருந்தே நிறையத் தமிழ் சினிமா பார்த்துத் தான் வளர்ந்திருக்கிறேன். கேரளாவில் தமிழ் ஹீரோக்களுக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்கிறார்கள். அதே போல் தான் நானும். தமிழுக்கு நான் நடிக்க வருவது மகிழ்ச்சியாக உள்ளது. வாலி சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தக்கதை எனக்கு மிக நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று தோன்றியது. உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்குமென்று நம்புகிறேன் அனைவருக்கும் என் நன்றிகள்.

மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகாம், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக்குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து முன்னணி நடிகை நிஹாரிகா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் கலையரசன், ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் நடிக்கின்றனர்.

ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாக படைத்துள்ளார். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் CS இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.

பெரும் பொருட்செலவில், உயர்தர தொழில் நுட்ப கலைஞர்களுடன் தரமானதொரு படைப்பாக SR PRODUCTIONS சார்பில் B. ஜகதீஸ் இப்படத்தை தயாரிக்கிறார்.