விஷாலின் ‘சக்ரா’ படத்தை வெளியிட தடை!

நடிகர் விஷால் தயாரித்து, நடித்திருக்கும் ‘சக்ரா’ படத்தை ஓடிடியில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பிரபல திரைப்பட தயாரிப்பாளரான டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தாக்கல் செய்திருந்த ஒரு மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த இடைக்கால உத்திரவினை பிறப்பித்துள்ளது.

நடிகர் விஷால் – நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ‘ஆக்‌ஷன்’ என்ற படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித் தருவதாகக் கூறிய விஷால் இது குறித்து ரவீந்திரனுடன் ஒரு ஒப்பந்தமும் செய்துள்ளார்.

தான் அடுத்து ஒரு படத்தை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு நடித்துக் கொடுப்பதாகவும், அதனை இயக்குநர் ஆனந்தன் என்பவர் இயக்குவார் என்றும் கூறியிருந்தார். ஆனால் விஷால் தான் கொடுத்த இந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்தாக கூறப்படுகிறது.

அதே இயக்குநர் ஆனந்தன்தான் விஷாலை வைத்து தற்போது ‘சக்ரா’ படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டிரெயிலர் சமீபத்தில் வெளியானது. இதைப் பார்த்த தயாரிப்பாளர் ரவீந்திரன் இது தன்னிடம் சொன்ன கதை. தனக்கு எடுத்துக் கொடுப்பதாக சொன்னக் கதை என்பதை உணர்ந்து சட்ட நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார் தயாரிப்பாளர் ரவீந்திரன். அந்த மனுவில், “எங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை இயக்குநர் ஆனந்தன், நடிகர் விசாலை வைத்து ‘சக்ரா’ என்ற பெயரில் படம் எடுத்துள்ளதாகவும், அந்த படத்தை ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமெனவும், எனக்கு விஷால் தர வேண்டிய ரூ.8.29 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டுமெனவும்” அந்த மனுவில் கோரியிருந்தார்.

மேலும், அந்த மனுவில், “ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி, விஷால் தர வேண்டிய ரூ.8.29 கோடி பணத்துக்கான உத்தரவாதம் வழங்கும்படி விஷாலுக்கு உத்தரவிட வேண்டும்” எனவும் “தங்கள் நிறுவனத்திடம் சொன்ன கதையை வைத்து வேறு நபருக்கு படமெடுக்க ஆனந்தனுக்கு தடைவிதிக்க வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது ட்ரைடெண்ட் ஆர்டஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், தங்கள் நிறுவனத்திடம் சொன்ன கதையை கொண்டு ‘சக்ரா’ என்ற பெயரில் வேறு நிறுவனத்திற்கு படம் எடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி ‘சக்ரா’ படத்தின் டிரெய்லரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி வழக்கு விசாரணையை செப்டம்பர் 30-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதுவரை, சக்ரா’ திரைப்படத்தை ஒடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் ‘சக்ரா’ பட தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.