‘நோ என்ட்ரி’ – பரபரப்பு திகில் படம்..!

ஜம்போ சினிமாஸ்  நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஏ.ஸ்ரீதர் தயாரித்துள்ள திரைப்படம் ‘நோ என்ட்ரி’. இவர் ஏற்கனவே ‘நீயா-2’ படத்தையும் தயாரித்துள்ளவர்.

இந்தப் படத்தில் நாயகியாக பிரதான வேடம் ஏற்று நடித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. ஆண்ட்ரியாவுடன் வாகா படத்தின் நாயகி ரண்யா, மும்பை சாக்ஷி, ஜெயஸ்ரீ, சதீஷ், ஆதவ் கண்ணதாசன், டில்லி, கோகுல் ‘மானாட மயிலாட’ புகழ் மானஸ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ரமேஷ் சக்கரவர்த்தி. இசை – அஜிஸ், பாடல்கள் கு.கார்த்திக், படத் தொகுப்பு – பிரதீப் E.ராகவ், நடன இயக்கம் – மானஸ், சண்டை காட்சிகள் – ஜி.என்.முருகன், வசனம் – செந்தில்குமார்,  கதை, திரைக்கதை, இயக்கம் – ஆர்.அழகு கார்த்திக். இயக்குநர் அழகு கார்த்திக் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் உலகில் அதிக மழை பெய்யும் இடமான மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியில் நடைபெற்றுள்ளது.

படத்தைப் பற்றி இயக்குநர் ஆர்.அழகு கார்த்திக் பேசும்போது, “இளம் தம்பதியர் மனித நடமாட்டமே அதிகம் இல்லாத ஒரு மலைப் பிரதேசத்தில் ஒரு சொகுசு ஹோட்டலில் தங்குகிறார்கள். அங்கே மனிதர்களை வேட்டையாடும் 15 நாய்களிடம் அவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த நாய்கள் பத்து சேர்ந்தால் ஒரு யானையையே வீழ்த்திக் கொன்று விடுமளவுக்குக் கொடூரமானவை. நர வேட்டையாடும் அந்த நாய்களிடமிருந்து அந்தக் தம்பதிகள் தப்பித்தார்களா இல்லையா என்பதைப் பரபரப்பாகவும், திகிலாகவும் சொல்லும் கதைதான் இந்த ‘நோ என்ட்ரி’ திரைப்படம்…” என்றார்.

இப்படத்திற்காக ஆண்ட்ரியா மிகவும் தைரியசாலியாக நாய்களுடன் போராடும் காட்சிகளில் நடித்திருக்கிறார்.

இப்படத்திற்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட 15 ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. படத்தில் இடம் பெறும் கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவிற்கு உருவாகி வருகின்றன.

இதுவரை தமிழ் சினிமா காணாத ஆபத்தான மலைப் பிரதேசக் காட்சிகளையும் பசுமைக் காட்டு வெளிகளையும் சிரபுஞ்சியில் 45 நாட்கள் தங்கி முகாமிட்டுப் படப்பதிவு செய்து வந்துள்ளனர்.

தற்போது படத்தின் தொழில் நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன.