’விஜய் 63’ – பிரமாண்ட படைப்பு இது – ஏஜிஎஸ் அறிக்கை!

சன் குரூப் தயாரித்த ‘சர்கார்’ படம் வெளியான கையோடு விஜய் தனது அடுத்த பட வேலைகளை துவங்கி விட்டார்! ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் இந்த படம் விஜய்யின் 63-அவது படமாகும். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ‘AGS’ .எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறது. இந்த படத்தின் பூஜை இன்று காலை சென்னை மையிலாப்பூரிலுள்ள கோயிலில் எளிமையாக நடைபெற்றது. இதனை ஏ.ஜி.எஸ்.நிறுவனத்தைச் சேர்ந்த அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் இதுகுறித்து படக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஏஜிஎஸ் எண்டர்டெயின் மெண்ட் நிறுவனம் விஜயுடன் அடுத்த திரைப்படத்தில் கைகோர்க்க உள்ளது என்பதை உங்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பதில் பெருமை கொள்கிறோம். இது எங்களது நீண்ட நாள் கனவு. விஜயுடன் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சியும் அளவில்லாத உற்சாகமும் அடைகிறோம். இது எங்களது தயாரிப்பில் உருவாகும் 20-வது திரைப்படம். மேலும் எங்கள் நிறுவனம் இதுவரை தயாரித்ததில் இதுவே பிரமாண்டமான படைப்பாகும். தளபதி 63 படத்தை இயக்குநர் அட்லி இயக்குகிறார்.

தெறி மெர்சல் படங்களை தொடர்ந்து விஜயும் வெற்றி இயக்குநர் அட்லியும் இணையும் ஹாட்ரிக் வெற்றி திரைப்படம் இது. இந்த வெற்றிக் கூட்டணிக்கு பலம் சேர்க்கும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தமெர்சல் கூட்டணியுடன் இணைவதில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மிகுந்த பெருமை கொள்கிறது.

ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகள், இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகும் தளபதி 63 அவரது ரசிகர்களின் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்யும் மாபெரும் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்.

உலகின் சிறந்த திறமையாளர்களால் உருவாக்கப்படும் தளபதி 63 இதுவரை வெளிவந்த விஜய்யின் திரைப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. ஏனைய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவகாரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது