‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படப்பிடிப்பு தொடங்கியது!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடெக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பல விருதுகளை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது. இதையடுத்து இதே நிறுவனம் தனது அடுத்தப் படத்தைத் துவக்கியுள்ளது. ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்தப் படத்தில் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் பா.இரஞ்சித்திடம் இயக்க உதவியாளராகப் பணியாற்றிய அதியன் ஆதிரை இந்தப் படத்தை இயக்குகிறார். 

‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ மற்றும் ‘மகிழ்ச்சி’ ஆகிய இசை ஆல்பங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தென்மா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்களின் கலை இயக்குநர் த.ராமலிங்கம் இப்படத்தில் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் பணியாற்றுகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் துவங்கியது. படப்பிடிப்பை இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.