வல்லவன் இந்தி ரைட்ஸ் யாருக்கு? டி ஆர் Vs பி.எல்.தேனப்பன்

கடந்த 2006-ம் வருடம் சிலம்பரசன் இயக்கி, நடித்த படமாக வெளியானது வல்லவன். அதில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தனர் பி.எல்.தேனப்பன் இந்த படத்தை தயாரித்திருந்தார் இந்த படம் வெளியாகி சுமார் 12 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இந்த படத்தில் இந்தி உரிமை யாருக்கு சொந்தம் என்ற பெரிய சர்ச்சை வெடித்துள்ளது.

இதுகுறித்து இயக்குனரும் சிலம்பரசனின் தந்தையுமான டி.ராஜேந்தர் நேற்று காவல் துறையில் ஒரு புகார் அளித்துள்ளார்.. அதில் இந்த வல்லவன் மற்றும் மன்மதன் என இரண்டு படங்களில் இந்தி பட விற்பனை உரிமை தங்களிடம் தான் உள்ளது எனவும் தயாரிப்பாளர் தேனப்பன் இதை தங்கள் அனுமதியில்லாமல் ஹிந்தியில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு விற்றுவிட்டதாகவும் புகார் அளித்துள்ளார்.

பின்னர் இது பற்றி டி.ஆர். பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “என் மகன் சிம்பு நடித்த ‘மன்மதன்’ திரைப்படம் இந்தியன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கிருஷ்ணகாந்த் தயரித்த படம். இந்தப் படத்திற்கான ரீமேக் உரிமை சிம்பு சினி ஆர்ட்ஸ் பெயருக்கு எழுதிக் கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் இப்போது எஸ்.என். மீடியா நிறுவனத்தின் உரிமையாளரான சஞ்சய் லால் வாணி தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பனின் தூண்டுதலின் பெயரில் ‘மன்மதன்’ படத்தின் ரீமேக் உரிமம் தன்னிடம் இருப்பதாக விளம்பரம் செய்திருக்கிறார்.

தெலுங்கு மற்றும் வட இந்திய மொழி ரீமேக் உரிமையில் ஒரு பங்கு இயக்குநர் என்கிற அடிப் படையில் சிலம்பரசனுக்கும் உள்ளது. இதேபோல் ‘வல்லவன்’ பட உரிமையை ஹிந்தி மொழிக்கு நான் விற்றவுடன், இப்போது அதைத் தடுக்க பி.எல் தேனப்பன் முயற்சி செய்கிறார்.

இது தொடர்பாக காவல்துறை ஆணையரிடம் எஸ்.என் மீடியா சஞ்சய் லால்வாணி மற்றும் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் இருவர் மீதும் கொடுத்துள்ளேன். ‘மன்மதன்’, ‘வல்லவன்’ ஆகிய படங்களின் ரீமேக் உரிமைகளை கோடிகளை இழந்தாலும் விட்டுத் தர மாட்டேன்…” என்றார் ஆவேசமாக.

இதை தொடர்ந்து டி.ஆர்.குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள பி எல் தேனப்பன், “என்னுடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் நான் தயாரித்த திரைப்படம் ‘வல்லவன்’. இதில் சிம்பு, நயன்தாரா இருவரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தை சிம்புவே இயக்கியிருந்தார். இந்தப் படம் கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி யன்று வெளியானது.இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமை மற்றும் வட இந்திய மொழிகளுக்கான ரீமேக் உரிமையும் எனது ராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கே சொந்தமான தாகும். இந்த ரீமேக் உரிமைகளை நான் எஸ்.என். மீடியா நிறுவனத்திற்கு கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதியன்று முறையாக ஜெமினி லேபின் கடிதம் மூலமாக விற்பனை செய்துள்ளேன்.

நான் ‘வல்லவன்’ படத்தை தயாரித்து, அதை சிலம்பரசனை நடிக்க வைத்தும், இயக்குநராக அறிமுகப் படுத்தியபோது அவருடைய ஒத்துழையாமையால் அந்தப் படத்தின் பட்ஜெட் பல மடங்காகி அதனால் ஏற்பட்ட நஷ்டத்தினால் இன்றளவும் அதிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் ஊடகங்களை சந்தித்த இயக்குநர் டி.ராஜேந்தர் ‘வல்லவன்’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமம், மற்றும் வட இந்திய மொழிகளின் உரிமம் தன்னிடம் உள்ளது என்று தெரிவித்ததாக அறிகிறேன். மேலும் அந்த ரீமேக் உரிமையை வாங்கியவர்கள் மீதும், விற்றவர்கள் மீதும் பழி சுமத்தும்விதமாக பேசியதாகவும் நான் அறிகிறேன்.

இப்படி வல்லவன் படத்தின் தயாரிப்பாளரான என்னையும் எனது 35 ஆண்டு கால திரையுலக அனுபவத்தையும் கேலிக்கூத்தாக்கும் வகையில் என்மேல் அபாண்டமாக பழி சுமத்தும் வகையில் பேசிய டி.ராஜேந்தர் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.மேலும் என் பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேவைப்பட்டால் இது தொடர்பாக காவல் ஆணையரை சந்தித்து புகார் அளிக்கவும் இருக்கிறேன்” என விளக்கமளித்துள்ளார் பி.எல்.தேனப்பன்.