என்னது.. ‘சபாஷ் நாயுடு’ ட்ராப் ஆயிடுச்சா?

கமல்ஹாசன் இயக்கத்தில் கமல், ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, ராதாரவி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் சபாஷ் நாயுடு. இப்படம் தசாவதாரம் படத்தின் பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பிஸியாக இருப்பதால், நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த சபாஷ் நாயுடு வெளிவராது என்று செய்திகள் வெளியாவதை கமல் தரப்பு மறுத்து உள்ளது.

.

 

முன்னதாக இந்த சபாஷ் நாயுடு திரைப்படம் ஒரு குறுகில கால தயாரிப்புக்கு திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த படத்தின் இயக்குனர் ராஜீவ் குமார் அமெரிக்க படப்பிடிப்பின்போது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் படத்தில் இருந்து விலகினார். இதனையடுத்து கமல்ஹாசனே இந்த படத்தை இயக்கினார். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஜேம்ஸ் ஜோசப் தனது மனைவிக்கு விபத்து நேர்ந்ததால் அவரும் படத்தில் இருந்து விலகினார். மேலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசன் தனது அலுவலகத்தில் மாடிப்படியில் இருந்து கீழே விழுந்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு தாமதமானது. பின்னர் குணமாகி மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருந்த நிலையில் இந்த படத்தின் ஆடை வடிவமைப்பாளரும் கமல்ஹாசனுக்கு துணையாக இருந்தவருமான கெளதமி படத்தில் இருந்து விலகினார். இந்த நிலையில் கடந்த ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டபோது இந்த படத்தின் தயாரிப்பாளரும் கமலின் சகோதருமான சந்திரஹாசனும் அவருடைய மனைவியும், அடுத்தடுத்து ஒரு சிறிய இடைவெளியில் மரணம் அடைந்தனர்.

மேற்கண்ட பல்வேறு பிரச்சனைகளால் ‘சபாஷ் நாயுடு’ காலதாமதம் ஆகிவந்தாலும் மிக விரைவில் மீண்டும் புத்துணர்ச்சியுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு மிக விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு முன்பாக கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2′ படம் வெளிவரவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதிலும் கடந்த டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அமெரிக்காவில் இருக்கும் கமலின் மேக்கப் குழுவினர்களுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் அப்போதும் படப்பிடிப்பு நடக்கவில்லை. இப்படி தொடர்ந்து பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் தொடங்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.