சென்னையில் நடிகை ஸ்ரீதேவியின் நினைவஞ்சலி கூட்டம்..!

நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் இரங்கல் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இதில் திரையுலகினர் திரளாக கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து இந்திய சினிமா ரசிகர்களின் கனவு தேவதையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24-ந் தேதி துபாயில் மரணம் அடைந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஸ்ரீதேவி மறைவுக்கு பல்வேறு நகரங்களில் தற்போது அஞ்சலி கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக  சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு அஞ்சலி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்காக ஸ்ரீதேவியின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. பக்தி பாடல்கள் பாடப்பட்டன. பிரார்த்தனையும் நடந்தது. இதில் போனிகபூர், மகள்கள் ஜான்வி, குஷி, சஞ்சய் கபூர், மகேஸ்வரி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அமர்சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

அதே போல் நடிகர்கள் சிவகுமார் சூர்யா, கார்த்தி, பிரபுதேவா, ஸ்ரீகாந்த், அருண்விஜய், வின்சென்ட் அசோகன், வினீத், நடிகைகள் வைஜயந்திமாலா, ராதிகா சரத்குமார், ஜோதிகா, லதா, மீனா, சினேகா, பூர்ணிமா, சுகாசினி, விமலா ராமன், சோனியா அகர்வால், காயத்ரி ரகுராம், மகேஷ்வரி, குட்டி பத்மினி, சத்தியபிரியா, புவனேஸ்வரி மற்றும் லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், தங்கர்பச்சான், தயாரிப்பாளர்கள் தாணு, டி.சிவா, ஐசரி கணேஷ், டி.ஜி.தியாகராஜன், ராம்குமார், ஏ.எம்.ரத்னம், ராஜ்குமார், சேதுபதி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவாளர்கள் ரவிவர்மன், செல்லத்துரை, நடன இயக்குனர் ராஜு சுந்தரம் மற்றும் தமிழ் திரையுலகினர் , முக்கிய பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக சி.ஐ.டி காலனியில் உள்ள ஸ்ரீதேவி வீட்டிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் அஜித்குமார், மனைவி ஷாலினியுடன் சென்று அவருடைய உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

அதே போல் ஸ்ரீதேவி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்கினார். நடிகர்கள் சிவகுமார், பாக்யராஜ், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், பசுபதி, அயூப்கான், பிரகாஷ், மனோபாலா, ஹேமச்சந்திரன், நடிகைகள் அம்பிகா, ஸ்ரீபிரியா, சத்யபிரியா, குட்டிபத்மினி, சிவகாமி உள்பட பலர் இதில் கலந்துகொண்டு ஸ்ரீதேவி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.