என்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை! – ரகுல் ப்ரீதி சிங் பேட்டி!

“நான் 20 படங்களில் நடித்துவிட்டேன். இதுவரை யாரும் என்னை படுக்கைக்கு அழைக்கவில்லை. திறமை இருந்தால் மட்டுமே திரையுலகில் சாதிக்க முடியும்.. ஆனாலும் நடிகைகளைப் பற்றி தொடர்ந்து தவறாக பேசுவது, இது ஆண் ஆதிக்கம் நிறைந்த உலகம் என்பதையே வெளிப்படுத்துகிறது” என்று கூறியுள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

கில்லி என்ற கன்னடப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கில் தொடர் வெற்றிப்படங்களில் நடித்து வரும் ரகுலுக்கு தமிழ் திரையுலகில் வலுவான வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார். அந்தப் படத்தில் சாய் பல்லவியும் நடிக்கவுள்ளார். தற்போது கார்த்தி, சூர்யா என்று தமிழில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங், விரைவில் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயினாக உருவெடுப்பார் என்று கோடம்பாக்கமே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆனாலும் திரையுலகில் தொடர் கிசுகிசுக்களில் சிக்கும் இவருடைய கவர்ச்சிப் படம் ‘மேக்ஸிம்’ என்ற ஆங்கிலப் பத்திரிகை அட்டையில் சமீபத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் இயல்பாகவே கடுமையாக உழைப்பேன். எங்கு வேலை செய்கிறேனோ அவர்கள் பேசும் மொழியைக் கற்பது எனது கடமை. தெலுங்கு பட உலகில் பணியாற்ற தொடங்கியதும் அந்த மொழியைக் கற்க தொடங்கிவிட்டேன். நான் ஒரு தென்னிந்திய நடிகை. வடக்கில் இருந்து வந்ததாக சிலர் கூறுவது வேதனையாக உள்ளது. ஆனால் தெலுங்கில் பேசுவதையே அதிகம் விரும்புகிறேன். அதைப் போலவே தமிழும் கற்று வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

“இயற்கையாகவே மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள். நாட்டில் நடக்கும் பாலியல் வன்புணர்வு சம்பவங்களை மறந்து விடுகிறார்கள். நடிகைகளைப் படுக்கைக்கு அழைப்பது பற்றி பேசுகிறார்கள். இப்படி நடிகைகளைப் பற்றி தொடர்ந்து தவறாக பேசுவது, இது ஆண் ஆதிக்கம் நிறைந்த உலகம் என்பதையே வெளிப்படுத்துகிறது. இருப்பினும் நான் 20 படங்களில் நடித்து விட்டேன். என்னைச் சுற்றி நல்லவர்களே இருக்கிறார்கள். திரையுலகில் திறமை இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்” என்று தன் கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்.