சர்ச்சையை கிளப்பிய ‘தானா சேர்ந்த கூட்டம்’ விக்னேஷ் சிவன் ட்விட்டர் !

 

24 மற்றும் சிங்கம் 3 படத்திற்கு பிறகு சூர்யா நடித்து வெளியாகியிருக்கும் படம் தான் தானா சேர்ந்த கூட்டம். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், பாலாஜி நடிப்பில் வெளியான இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிரூத். இப்படத்தின் சிங்கள் ட்ராக் மற்றும் ட்ரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் படத்தின் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மிகவும் அதிகரித்தே காணப்பட்டது. சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக திரையில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள்.

படம் பொங்கலுக்கு வெளியானது. மக்கள் எதிர்பார்ப்பிற்கு படம் இருந்ததா என்றால் அது கேள்வி குறி தான். சிலர் படம் பிடித்திருந்தது என்று கூறினார்கள். ஆனால் சில படம் சரியில்லை என்று தெரிவித்தார்கள். இந்த நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ஒருவர், ஜனவரி மாதம் வந்த எந்த படமும் பெரிதாக ஓடடவில்லை, பிப்ரவரி மாதம் வெளியாகும் படமாவது நன்றாக ஓட வேண்டும் என்று ட்வீட் செய்திருந்தார். இதை பார்த்த விக்னேஷ் சிவன் கடும் கோபத்திற்கு ஆளானார்.

அதைக் குறிப்பிட்ட விக்னேஷ் சிவன் தன் ட்விட்டர் பேஜில், “சொல்லிட்டாரு…., எவ்வளவுதான் நாங்கள் கடினமாக உழைத்தாலும் சிலர் இதுபோன்ற அர்த்தமற்ற விமர்சனங்களால் எங்களை ஊக்கமிழக்கச் செய்கின்றனர். அலுவலகத்துக்கு வந்து காசுக்காக கைநீட்டி இரைந்து நின்றுவிட்டு இதையும் செய்கின்றனர். இப்படியான எதிர்மறை எண்ணம் கொண்ட நபர்களைப் பார்த்தாலே.. விரட்டி விரட்டி*” என்று பதிவிட்டுள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த ட்விட்டால் சர்ச்சை எழுந்தது. இதனால் சில நிமிடங்களிலேயே அவர் அந்த ட்விட்டை நீக்கிவிட்டார்.

அதன் பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு திரைப்படத்தை வசூல் போன்ற எண்கள் அடிப்படையில் அணுகுவது தயாரிப்பாளரின் வேலை. மக்கள் ரசிப்பதற்காக மட்டுமே படத்துக்கு வருகின்றனர். ஒவ்வொரு படத்தையும் ரசித்த காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் ஒவ்வொருவரும் விமர்சகராகிவிட்டனர். அதற்கு அவசியமில்லை. வாழ்க்கை அழகானது, அதனால் நேர்மறையாக அதை எதிர்கொள்வோம்” என்று குறிப்பிட்டார்.

இருப்பினும், விக்னேஷ் சிவன் செய்த ட்விட்டை பலரும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்துப் போட்டு கருத்து தெரிவித்துவருகின்றனர். இதனால், சமூக வலைத்தளங்களில் நேற்று இரவு முதலே சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இன்று விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கௌசிக் என்பவருக்கு விளக்கமளிக்கும் விதமாக, “பெண்களின் புகைப்படங்களுக்கு லைக் செய்யவும், கமெண்ட் செய்யவும் மட்டுமே உங்களுக்குத் தெரியும். அதனால் அதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். ஒரு படத்தின் வெற்றி, தோல்வி குறித்து உங்களுக்கு எந்த ஒரு தகவலும் தெரியாது. தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படக் குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம். ஆகையால் அது குறித்து எதுவும் பேச வேண்டாம்” என்று காய்ச்சி எடுத்திருக்கிறர் விக்னேஷ் சிவன்.

விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். “திரைப்படங்கள் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் ஊடகவியலாளர்களே!.. ஒரு படத்தின் கதை பற்றியும், அதில் நடித்திருக்கும் நடிகர்கள் ஏன் சரியாக நடிக்கவில்லை என்பது குறித்தும் கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, ஒரு படத்தின் வெற்றி தோல்வி பற்றி பேசுவது ஆரோக்கியமானதல்ல. இதைத் தாண்டி நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கிறது. அதில் கவனம் செலுத்துங்கள்” என்று தெரிவித்துள்ளார்.