மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படம் இப்போது தமிழில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. ஹர்ஷினி மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் அரவிந்த் சாமியும், அமலா பாலும் இணைந்து நடித்திருக்கிறார்கள். மலையாளப் படத்தை இயக்கிய இயக்குநர் சித்திக்கே தமிழ்ப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.இந்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 13-ம் தேதியன்று மாலையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
விழாவில் நடிகர் அர்விந்த் சாமி, அமலா பால், இயக்குநர் சித்திக், ரோபோ சங்கர், ஆஃப்தாப் ஷிவ்தசானி, நடிகை மீனா மற்றும் இசையமைப்பாளர் அம்ரேஷூடன் மூத்த நடிகையும், அம்ரேஷின் அம்மாவுமான ஜெயசித்ரா ஆகிய திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் தயாரிப்பாளர் பேசியபோது, “இந்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் ஒரு நல்ல எண்டர்டெய்னர் மூவியாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு அட்வான்ஸ் தொகை வாங்காமலேயே அரவிந்த் சாமி ஸார். இப்படத்தில் நடித்து கொடுத்தார். அவருக்கு எனது பெரிய நன்றிகள்..!
இயக்குநர் சித்திக் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு திரைக்கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. இசையமைப்பாளர் அம்ரேஷ் கணேஷ் படத்திற்கு சிறப்பாக இசையமைத்துள்ளார். பாடல்களும் அருமையாக வந்துள்ளது…” என்றார் பெருமையுடன்.
நடிகர் அர்விந்த் சாமி பேசும்போது, “இந்தப் படத்தில் நடிக்க என்னை தேர்வு செய்ததற்காக இயக்குநர் சித்திக்கிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளுக்கு சில ரிஸ்க்குகளை எடுத்துள்ளேன். தமிழ்த் திரையுலகின் மிக மூத்த சண்டை இயக்குநரான பெப்சி விஜயனுக்கு இந்தப் படம் 500-வது படமாகும். இந்தச் சிறப்பு பெற்ற படத்தில் நான் நடித்ததில் எனக்கு பெருமையாக இருக்கிறது.
படத்தில் ரோபோ சங்கர் மற்றும் சூரியின் காமெடி காட்சிகள் அருமையாக வந்துள்ளது, அவர்களுடன் நானும் சேர்ந்து சிறிது காமெடிக்கு முயற்சி செய்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்…” என்றார்.
நடிகை ஜெயசித்ரா பேசியபோது, “என் மகன் அம்ரேஷ் இப்போது மூன்றாவது முறையாக இந்த பெருமைமிக்க மேடையில் என்னை நிற்க செய்துள்ளான். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் இவரது இசை அனைவராலும் பாரட்டப்பட்டது. தற்போது இந்த மேடையில் பலரும் அவரை பாராட்டியுள்ளனர். எனக்குப் பெருமையாக உள்ளது. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்…” என்று அவர் கூறினார்
இசை – அம்ரேஷ், ஒளிப்பதிவு – விஜய் உலகநாதன், படத் தொகுப்பு – கே.ஆர்.கௌரி சங்கர், தயாரிப்பு வடிவமைப்பு – மணி சுசித்ரா, கலை இயக்கம் – ஜோசப் நெல்லிகன், சண்டை பயிற்சி – பெப்சி விஜயன், நடனம் – பிருந்தா, நிர்வாக தயாரிப்பு – விமல்.ஜி, தயாரிப்பு – எம்.ஹர்ஷனி, எழுத்து, இயக்கம் – சித்திக்.