டிசம்பர் 6 முதல் 10ம் மதுரையில் சர்வதேச திரைப்பட விழா!

மதுரையில் டிசம்பர் 6 முதல் 10ம் தேதி வரையில் 19வது மதுரை சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்படவிழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆவண மற்றும் குறும்படங்கள் திரையிடப்படவுள்ளன. இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் சர்வதேச மற்றும் இந்திய அளவிலான திரைத்துறை பிரபலங்களுடன் நேரடியாக கலந்துரையாட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்திய படங்கள், சர்வதேச படங்கள், நினைவுகூரல் படங்கள் (சமீரா ஜெயின், பட்ரிக் ரௌசெல்), இயக்குநர்களை மையப்படுத்திய படங்கள் மற்றும் சிறப்புப் பிரிவு படங்கள் என்று வரிசைப்படுத்தப்பட்டு படங்கள் திரையிடப்படவுள்ளன.

இந்த விழா குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அமுதன்.ஆர்.பி., “மதுரையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்த சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்படவிழாவில் 50க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படவுள்ளன. இதற்காக மதுரையில் குறிப்பிட்ட சில திரையரங்குகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விழா குறித்த முழுமையான தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.