என் வெற்றிக்கு காரணம் இளையராஜா- நடிகர் மோகன் !!

தமிழ் திரையுலகில் அதிக எண்ணிகையில் வெள்ளிவிழா படங்கள் தந்த, நடிகர் மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் நாயகனாக களமிறங்கும் திரைப்படம் ‘ஹரா’. கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். மாறுபட்ட களத்தில், ஆக்ஷன் அதிரடிப் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ ஜி. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டு பத்திரிகையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள நடைபெற்றது.

இந்நிகழ்வில்…

நடிகர் மோகன் பேசியதாவது…

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். எத்தனையோ படம் நடித்திருக்கலாம், ஆனால் நான் பெருமையாக சொல்லிக்கொள்கிறேன், நான் நடித்த படங்கள் எல்லாம் லிஸ்ட் வைத்துக் கொண்டதே இல்லை. ‘ஹரா’ தான் என் முதல் படம். நான் நடிக்க ஆரம்பித்த போது, எனக்கு என மார்க்கெட் வாய்ப்பு வந்த பிறகு, எப்போதும் என்னால் முடிந்த அளவு புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்துள்ளேன். அவர்களுக்கு வாய்ப்பு தந்தால் பசியோடு வெறியோடு படம் செய்வார்கள் என்று தான் நினைத்துள்ளேன். என்னுடைய பாட்டுகள் பற்றி எல்லோரும் சொல்கிறார்கள் ஆனால் அதற்கு காரணம் இசைஞானி, அவர் யாருக்கும் வஞ்சனை இல்லாமல் பாட்டு தந்துள்ளார். எல்லா நடிகர்களுக்கும் ஒரே மாதிரி பாடல் தந்துள்ளார். ஆனால் அந்தப் பாடல்களில் என்னை ரசிக்கிறார்கள் என்றால் அதை ஆர் சுந்தர்ராஜன் மாதிரி இயக்குநர்கள் இயக்கியது தான் காரணம். அவர்கள் மக்கள் உணர்ந்து ஃபீல் செய்வது மாதிரி படம் எடுத்து வெற்றிப்பெறச் செய்தார்கள். அதனால் தான் மக்கள் என்னை தங்கள் பிள்ளை போல் கொண்டாடினார்கள். என்னை வைத்து இயக்கிய இயக்குநர்கள், இசையமைப்பாளர் எல்லோரும் தான் என் வெற்றிக்கு காரணம். நான் எப்போதும் மார்க்கெட்டைப் பற்றி யோசிக்கவே மாட்டேன், ஒரு படம் என்றால் அது எனக்குப் பிடிக்க வேண்டும் அவ்வளவு தான். நிகில் தான் விஜய் ஶ்ரீயை கூட்டி வந்தார், எனக்கு திரைக்கதையில் சில தயக்கங்கள் இருந்தது, அதை மனமுவந்து மாற்றினார். 7 முறை மாற்றி தான் இந்தப்படத்தை எடுத்துள்ளோம். ஏன் ஹராவை ஒத்துக்கொண்டீர்கள் என எல்லோரும் கேட்டார்கள். விஜய் ஶ்ரீயிடம் ஒரு ஃபெண்டாஸ்டிக்கான லைட் அண்ட் சவுண்ட் சென்ஸ் இருக்கிறது, அந்த திறமை அவரை பெரிய அளவிற்கு கொண்டு செல்லும். விஜய் ஶ்ரீ அவருக்கு என்ன ஆனாலும், படத்தை பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டு இருப்பார். அவர் பிழைத்து வரக் காரணம் அவர் மனைவி, குழந்தைகள் புண்ணியம் தான். அவர் இன்னும் நிறைய நல்ல படங்கள் தருவார். இந்தப்படத்தில் முதலில் பாடல்கள் இல்லை ஆனால் மூன்று பாடல்கள் வைத்துவிட்டார், மூன்று பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். மணிவண்ணன் மாதிரியான அறிவு கொண்டவர், மணிவண்ணன் தான் பேப்பரில் கதை இல்லாமல் எடுப்பார். ராஜிவ் மேனன் சாரை கேமராமேனாக பார்த்திருக்கிறேன் அவருடன் இணைந்து நடித்துள்ளேன். சிங்கம்புலி, அனுமோல் முதலாக இணைந்து நடித்த அனைவருக்கும் என் நன்றிகள். படம் பாருங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள், நன்றி.