ஹாட்ரிக் அடித்தாரா ஷாருக் !!

2023-ம் ஆண்டு மிகவும் கொண்டாடப்பட்ட நடிகர் என்றால் அது ஷாருக்கான் தான். அவர் நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பதான், ஜவான் என இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. அந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டதோடு ரூ.1000 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது.

இந்த நிலையில், அவர் நடிப்பில் இந்த ஆண்டு மூன்றாவது படமாக டங்கி இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது.
டங்கி திரைப்படத்தை பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான ராஜ்குமார் ஹிரானி இயக்கி உள்ளார். இப்படத்தில் ஷாருக்கான் உடன் டாப்ஸி, விக்கி கவுஷல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மனு ரன்தாவா (டாப்ஸி) அங்கிருந்து தப்பிக்கிறார். 25 வருடங்களாக லண்டனில் இருக்கும் அவருக்கு, நண்பர்கள் புக்கு லகன்பால் (விக்ரம் கோச்சார்), பாலி கக்கார் (அனில் குரோவர்) ஆகியோருடன் இந்தியா திரும்ப வேண்டும் என்று ஆசை. ஆனால் அவர்களுக்கு பிரிட்டிஷ் தூதரகம் விசா வழங்காது. அதனால் பஞ்சாப்பில் இருக்கும் தங்கள் நண்பர் ஹார்டி என்ற ஹர்தயாள் சிங் தில்லானுக்கு (ஷாருக்கான்) ஃபோன் செய்கிறார் மனு. அவர், அவர்களைத் துபாய் வரச் சொல்கிறார். அவர்கள் அங்குச் சென்றார்களா? பிரிட்டிஷ் அரசு அவர்களுக்கு ஏன் விசா வழங்கவில்லை? அவர்கள் லண்டன் சென்றது எப்படி? அவர்கள் ஃபோன் செய்து அழைத்த ஹார்டி யார்? என்பதே மீதிக்கதை.

வெளிநாட்டு மாயையில் சட்டவிரோதமாக நாடு கடப்பவர்களின் உயிர் வலி பயணத்தை வேதனையோடு சொல்லியிருக்கும் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, சொந்த நாட்டு சுகத்தை எந்த நாடும் தராது என்பதை ஆணி அடித்த மாதிரி பதிவு செய்திருக்கிறார்,

‘டங்கி’யில். ஐந்து வருடத்துக்குப் பிறகு படம் இயக்கியிருக்கும் ஹிரானி, தனது ‘சிக்னேச்சர் ஸ்டைலை’ இதிலும் தொடர்கிறார் . பெருங்கனவோடு இங்கிலாந்து செல்வதற்கான நேர்மையான வழிகளில், முக்கிய கதாபாத்திரங்கள் தோற்ற பிறகு, அவர்கள் வேறு வழியைத் தேர்வு செய்கிறார்கள். சட்டவிரோதமான அந்த வழி, பெரும் வலி நிறைந்தது என்பதை உயிரோட்டமாகப் பதிவு செய்திருக்கிறது திரைக்கதை. இவ்வளவு வலி கடந்தாலும் அங்கு, தாங்கள் கனவு கண்ட வாழ்க்கை இல்லை எனும் போது, இத்தனை போராட்டமும் வீணாகித் தவிக்கிற வாழ்வையும் அழகாகக் கடத்துகிறது படம்.

 

தனக்காக லண்டனில் காத்திருக்கும் காதலியைக் காண விசாவுக்கு ஏங்கும் விக்கி கவுசல் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொண்டதும் கதையில் பற்றிக்கொள்கிறது, பரபரப்பு. உயிரை பணயம் வைத்து, நாடு கடந்து லண்டன் மண்ணை மிதித்ததும் அவர்கள் படும் மகிழ்ச்சியும் உற்சாகமும் போலீஸில் அகப்படும் அடுத்த நொடியே தவிடுபொடியாகும்போது அத்தனை யதார்த்தம். இரண்டாம் பாதி திரைக்கதையில் கண்ணீர் விட பல காட்சிகள் இருந்தாலும் அழுத்தமில்லாத திரைக்கதை, படம் நீளமாக இருக்கும் உணர்வைத் தந்துவிடுகிறது.

ஷாருக்கானுக்கு இந்த வருடத்தில் இது மூன்றாவது படம் மற்ற இரண்டு படங்களை விட இந்தப் படம் வசூலில் சாதனை செய்வது சந்தேகம் தான் , பெரும் எதிர்பார்ப்புகளுடன் இல்லாமல் சென்றால் ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்