சொப்பன சுந்தரி காரை யாரு வச்சுருக்கா?

சொப்பன சுந்தரி திரை விமர்சனம்

இயக்குனர் – எஸ் ஜி சார்லஸ்
நடிகர்கள் – ஐஸ்வர்யா ராஜேஷ் , லக்ஷ்மி ப்ரியா , தீபா ஷங்கர் , கருணாகரன்
ஒளிப்பதிவு – பால முருகன் , ராஜ கோபாலன்
இசை – விஷால் சந்திரசேகர்
தயாரிப்பு – பாலாஜி சுப்பு விவேக் , ரவிச்சந்த்ரன்

தன்னுடைய உடன் பிறந்த அண்ணன் கல்யாணத்துக்கு பின் குடும்பத்தை கைவிட்டு விட, தனது அம்மா , வாய் பேச முடியாத அக்கா, படுத்த படுக்கையாக கிடக்கும் அப்பா ஆகியோரை வைத்துக்கொண்டு ஒரு நகைக்கடையில் பணிபுரிந்து தனது வாழ்க்கையை ஓட்டி வருகிறார் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.இந்த நிலையில்தான் அவருக்கு தங்க நகைக்கடை மூலமாக கார் ஒன்று பம்பர் பரிசாக கிடைக்கிறது. இதைத்தெரிந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் அதை அபகரிக்க முயற்சிக்கிறார்.காரை தனதாக்கி கொள்ள முயற்சிக்கிறது ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பம். இறுதியில் அந்தக்கார் யாருக்குச் சென்றது?அதனால் வந்த பின் விளைவுகள் என்ன என்பதே இப்படத்தின் கதை.

நகர வாழ்கையில் ஊறி,மனிதர்களின் நெளிவு, சுழிவுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை கன கச்சிதமாக புரிந்த அகல்யா கதாபாத்திரம் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு.. இயல்பாகவே ஐஸ்வர்யா ராஜேஷ் அப்படியான ஒரு மிடில் கிளாஸ் லைஃப்பில் இருந்து இந்த இடத்திற்கு வந்திருப்பதால்,அந்தக் கதாபாத்திரம் அவருக்கு நன்றாகவே கை வந்திருக்கிறது. அவரின் அக்காவாக தேசிய விருது வாங்கிய நடிகை லட்சுமி நடித்து இருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் நியாயம் செய்து இருந்தாலும் அவரை நினைவு கொள்ளும் அளவிற்கு அந்தக் கதாபாத்திரம் இல்லாமல் போனது ஏமாற்றம். அம்மாவாக விஜய் டிவி பிரபலம் தீபா அக்கா.. வழக்கம் போல தனக்கே உரித்தான பாணியில் சிரிக்க வைக்கிறார்.

முதல் பாதி சுவாரஸ்யமாக ஆரம்பித்தாலும் அதன் பிறகு படம் தொய்வாகதான் உள்ளது, இரண்டாம் பாதியில் சற்று விருவிருப்புடன் கலந்த நகைசுவையாக அமைந்துள்ளது

மொத்த படத்தையும் ஐஸ்வர்யா ராஜேஷின் மீது தான் வைத்துள்ளனர் . எந்த பிரச்சினை வந்தாலும் அதை கண்டு முடங்கிப் போகாமல், தற்போது தான் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தனதாக்கிக் கொள்ளும் படியாக அந்தக்கதாபாத்திரம் எழுதப்பட்டிருந்தது சிறப்பு. கிங்ஸ்லி நடிப்பில் எந்த மாற்றமும் இல்லை. சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். போலீஸ்காரராக வந்திருக்கும் சுனில் ரெட்டி நடிப்பில் வித்தியாசம் காட்டி இருக்கிறார். கருணாகரனுக்கு இதில் கொஞ்சம் நெகட்டிவ் ஷேடு. கவனம் ஈர்க்கிறார்.ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பிற கதா பாத்திரங்களுக்கு கொடுக்கப்படாதது ஏமாற்றம்.

 

சுமாரான இந்த திரில்லர் கதையை ஒட்டு மொத்தமாக தாங்கி நிற்பது அஜ்மலின் இசையும், பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜ கோபாலின் ஒளிப்பதிவுதான். குறிப்பாக அஜ்மல், பின்னணி இசையில் படத்தை பார்வையாளனுக்கு கடத்துவதில் பேரும் பங்கு ஆற்றி இருக்கிறார்.

மொத்தத்தில் சொப்பன சுந்தரியை விட அந்த காரை யார் வைத்துக்கொள்ள போகிறார்கள் என்பதே இப்படம்,