டிடோட்லர் வாழ்க்கை சிறந்தது என்பதை வலியுறுத்தும் ‘போதை ஏறி புத்தி மாறி’

ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க அறிமுக இயக்குனர் ஆர் சந்துரு இயக்கி உஅள்ள படம் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம். பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் பல திருப்பங்களைக் கொண்ட திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் குறும்படங்கள் மூலம் பிரபலமான தீரஜ் இபபடத்தின் வாயிலாக கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். கே.பி இசையமைக்க, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். சாபு ஜோசப் படத்தொகுப்பாளராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குனராகவும் பணிபுரிந்திருக்கிறார்கள்.

விரைவில் ரிலீஸாக இருக்கும் இந்தப் படம் குறித்து விவரித்த இயக்குநர் சந்துரு, “வாழ்க்கையில் ஏதோ ஒரு சூழ்நிலையில் நாம் எடுக்கும் முடிவுகள் மொத்த வாழ்க்கை யையும் வேறொரு பாதைக்கு திசை திருப்புவதாக அமைவதுண்டு. மேலும் போதைப் பழக்கம் நம்மில் பலருடைய நம்பிக்கைகளையும் கனவுகளையும் குறைத்து அவர்களுடைய வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. அப்படி ஒரு அத்தியாயத்தைப் பற்றி தான் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம் பேசுகிறது. தீரஜ் என்னுடைய நல்ல நண்பர். நாங்கள் குறும்படங்களில் ஒன்றாக பணியாற்றினோம். அதில் இருந்து வந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவு எங்களுக்குள் இருந்தது. அவர் ஒரு கடின உழைப்பாளி, இயக்குனர்களின் நடிகர். அனைத்து சூழ்நிலைகளிலும் இயக்குனர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பவர். கார்த்திக் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தினார், அதை சிறப்பாகவும் செய்தார்.

இந்த படத்தில் பிரதைனி சர்வா என்ற மாடல், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நான் ஸ்கிரிப்டை விவரிக்கும் போதே, பிருந்தாவாக நடிக்க ஒப்புக்கொண்டார். முன்னதாக அவருக்கு வந்த பல வாய்ப்புகளை அவர் மறுத்துவிட்டார். ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த படத்தின் கதா பாத்திரத்தமும், கருத்தியலும் அவரை ஈர்க்க, உடனடியாக அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். படத்தின் படப்பிடிப்பு முழுக்க முடிந்து தெலுங்கு டப்பிங் வேலை நடக்கிறது..

மிகவும் பிஸியாக இருந்த போதும் என்னுடன் பணியாற்ற நேரத்தை ஒதுக்கிய ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் சாருக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இந்தப் படத்தில் உள்ள விஷயம் ரசிகர்களுடன் மிக நன்றாகப் பொருந்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது,” என்றார் இயக்குனர் கே ஆர் சந்துரு.

நாயகன் தீரஜ் இப்படம் குறித்து பேசும்போது.“திருமணத்திற்கு முதல் கொடுக்கும் பேச்சிலர் பார்ட்டியில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களால் ஏற்படும் பிரச்னை எப்படி திருமணத்தையும், வாழ்க்கையையும் பாதிக்கிறது என்பதே ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் கதை. திரில்லர் பாணியில் விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் போதைக்கு அடிமையாகாதீர்கள் என்ற மெசேஜை சொல்லியிருக்கிறோம்.

போதை என்றால் குடிபோதை மட்டுமல்ல நம் வாழ்வில் நாம் பல விஷயங்களுக்கு அடிமையாகி உள்ளோம் அதை கட்டுப்படுத்தினாலே பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும். டிடோட்லர் வாழ்க்கை சிறந்தது என்பதை வலியுறுத்தியுள்ளோம். இந்த படத்துக்கு இதை விடப்  பொருத்தமான டைட்டில் கிடையாது என்பதை முழுப்படம் பார்க்கும் போது ஒவ்வொருவரும் கண்டிப்பாக  ஒப்புக் கொள்வார்கள். மொத்தத்தில்  இத்திரைப்படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.