மனிதர்களுக்கும் ஒட்டகத்துக்குமான பாசப்பிணைப்பைச் சொல்லும் படம்!

M10 PRODUCTIONS” சார்பாக M.S.முருகராஜ் தயாரிப்பில் வெளியான படம் “யா யா”. இப்படத்தில் “மிர்ச்சி” சிவா, சந்தானம், சாய் தன்ஷிகா, சந்தியா ஆகியோர் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் தந்து உருவான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது. இந்நிலையில், தனது நிறுவனத்தின் அடுத்த படைப்பை தயாரிக்க இருக்கிறார் தயாரிப்பாளர் M.S.முருகராஜ்.
M.S. முருகராஜ் தயாரிக்கவிருக்கும் அடுத்த படம் முழுக்க முழுக்க எமோஷனலுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஜனரஞ்சகமான படமாக உருவாகவிருக்கிறது. மனிதர்களுக்கும் ஒட்டகத்துக்குமான பாசப்பிணைப்பை நெகிழ்ச்சியுடன் சொல்லும் படமான இதனை ’சிகை’ படத்தின் இயக்குநர் ஜெகதீசன் சுபு இயக்கவிருக்கிறார். அதாவது
வானம், பூமி, சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள், கடல், மலை போன்றவைகளை எப்படி இறைவன் படைத்தானோ அதே அளவுக்கு ஒட்டகத்தையும் அவன் ஒப்பற்ற அதிசயமாகவே படைத்திருக்கின்றான் என்றால், அது மிகையல்ல. பரம சாதுவாகக் காட்சி அளிக்கும் ஒட்டகங்கள், சாதாரணமாக மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் திறன் படைத்தவை. சிறுதொலைவு ஓட்டப்பந்தயம் வைத்தால் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடவும் செய்யும். ஒட்டகம் ஒன்று 200 கிலோ எடையைச் சுமந்து கொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தூரம் நடக்கக் கூடியது.
கொளுத்தும் கோடை வெயிலிலும், கொதிக்கும் பாலை மணலிலும் நீர் இல்லாமலும், உணவில்லாமலும் பல நாட்கள் வாழக்கூடிய சக்தி கொண்டவை, ஒட்டகங்கள். மேய்வதற்குப் புல் போன்ற உணவு கிடைத்தால் 10 மாதங்கள் வரையிலும் தண்ணீர் குடிக்காமல் ஒட்டகத்தால் இருக்க முடியும். அப்பேர்ப்பட்ட ஒட்டகம் ஒன்றை மனிதன் ஒருவன் நேசிப்பதுதான் அடிப்படைக் கதையாம். இப் படத்தின் திரைக்கதை அமைப்பு வேலைகள் நடைபெற்றுவருகிறது. படத்தின் பூஜை விரைவில் நடைபெறவிருக்கிறது. படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரங்கள் அறிவிக்கப்படும்.