தி.மு.க.வை சேர்ந்தவர்கள் மட்டும் தான் தமிழில் பெயர் வைப்பார்களா..? தமிழிசை கேள்வி…!

‘எழுவாய் தமிழா’ என்ற தமிழ் மொழி போற்றும் ஆல்பத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழிசை சௌந்தர்ராஜன், அமெரிக்கை நாராயணன், தமிழ் ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு, நடிகர் ராதாரவி, கவிஞர் பிறைசூடன், கவிஞர் சினேகன், டி.பி.கஜேந்திரன், வ.உ.சி.யின் பேரன் முத்து குமாரசாமி, செம்மொழி சேலை நெய்து தேசிய விருது பெற்ற ஏ.ஜி.மனோகரன் ஆகியோரும், ஆல்பத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் நவின் சங்கர், ஒளிப்பதிவாளர் சௌ.பாண்டிகுமார், நடனம் சந்தோஷ், பாடலாசிரியர் ரேஷ்மன் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய கவிஞர் பிறைசூடன், “நான் தமிழை தவிர வேறு யாருக்கும் தலை வணங்கியதில்லை. அதனால்தான் அதிகம் சம்பாதிக்கவில்லை பிற மொழிகள் தமிழர்களை வாழ வைக்கலாம். ஆனால் தமிழ் மட்டும்தான் தமிழர்களை ஆள வைக்கும்…” என்றார்.

அடுத்து பேசிய சினேகன், “தமிழ் கற்றதால் நீங்கள் (பிறைசூடன்) தமிழன் என்ற தலைக்கனத்தோடு இருக்கிறீர்கள், இல்லை என்றால் இரண்டு வீடுகள் வேண்டுமானால் அதிகமாக சம்பாதித்து இருக்கலாம். ஆனால் தமிழை முழுமையாக கற்ற தன்னிறைவு இருக்காது. ஆகவே தமிழனாக நாம் தலைக்கனம் கொள்வோம். இப்படி தமிழகத்தில் நேர்மையாக இருப்பவர்கள்தான் விமர்சனங்களை அதிகம் எதிர் கொள்கிறார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய பா.ஜ.க. தமிழ் மாநிலத் தலைவரான திருமதி தமிழிசை செளந்தர்ராஜன், ” நானும் ஒரு தமிழ் பெண். மருத்துவம் படித்தாலும் பாரதியின் நூல் படித்து தமிழ் கற்றவள். எனது பெற்றோர்கள் தமிழ் மீது கொண்ட பாசத்தால்தான் எனக்கு ‘தமிழிசை’ என்று பெயர் வைத்தார்கள். அப்போது என் பெயரை கேட்ட அனைவரும் ‘தி.மு.க.காரர்களா நீங்கள்..?’ என்று கேட்டார்கள். தமிழை நேசிப்பதால்தான் நான் தமிழக பாரதிய ஜனதாவின் தலைவராகயிருக்கிறேனே ஒழிய, வேறு மொழிகளை நேசித்திருந்தால் வேறு மாநில நிர்வாகியாக இருந்திருப்பேன்.தேசிய கட்சி என்பதாலேயே பா.ஜ.க. தமிழுக்கு எதிரானவர்கள் அல்ல. எங்கள் பா.ஜ.க.வின் ஆட்சி தமிழகத்தில் வந்தால், நாங்கள் தமிழைதான் ஆதரிப்போம். வேறு மொழியை ஆட்சி மொழியாக கொண்டு வர மாட்டோம்…” என்றார்.

விழாவில் பேசிய ஒரிசா பாலு, “இந்தியாவை தவித்து 48 நாடுகளின் பாஸ்போர்ட்டில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது. எனவே தமிழ் மொழி அனைத்து நாடுகளும் மதிக்கும் இடத்தில்தான் உள்ளது. நாம்தான் அதனை மறந்து விட்டோம்…” என்றார் ஆதங்கமாக.

தமிழ் மொழிக்காக இப்படி ஒரு ஆல்பம் தயாரித்ததற்காக ‘முகவை பிலிம்ஸ்’ அங்கயற்கண்ணனை அனைவரும் பாராட்டினர்.

“தமிழுக்காக செலவு செய்வது என் பெற்றோருக்கு நான் செய்யும் கடமை போன்ற உணர்வு” என்றார் தயாரிப்பாளர் அங்கையற்கண்ணன். இறுதியில் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் ஆல்பத்தின் இயக்குநர் காளிங்கன்.