அதர்வா & மேகா ஆகாஷ் நடித்த ‘பூமராங்’ டிசம்பர் 28-ல் ரிலீஸ்!

நடிகர் அதர்வாவின் நடிப்பில் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கியிருக்கும் ‘பூமராங்’ திரைப்படம் வரும் டிசம்பர் 28-ம் தேதியன்று திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தில் அதர்வாவுடன் மேகா ஆகாஷ், இந்துஜா, உபன் பட்டேல், சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் மூன்று வெவ்வேறுவிதமான தோற்றங்களில் நடித்திருக்கிறார் அதர்வா. அதற்காக பல மணி நேரம் கஷ்டப்பட்டு ப்ரோஸ்தடிக் மேக்கப் செய்து கொண்டிருக்கிறார் அதர்வா. இந்த மேக்கப்பை அதர்வாவுக்கு செய்தவர்கள் பாலிவுட்டின் பிரபலமான மேக்கப் கலைஞர்களான ப்ரீத்திஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிஸோசா. இவர்கள் ‘பத்மாவத்’, நவாசுதீன் சித்திக் நடித்த ‘மாம்’, அமிதாப்பச்சன், ரிஷி கபூர் நடித்த ‘102 நாட் அவுட்’ ஆகிய படங்களில் தங்களது சிறப்பான ப்ரோஸ்தடிக் மேக்கப்பால் பெயர் பெற்றவர்கள்.

இயக்குநர் கண்ணன் மற்றும் அவரது ஒட்டு மொத்தக் குழுவும் இப்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் ‘பூமராங்’ படம் டிசம்பர் 28-ம் தேதி வெளியாக இருப்பதுதான்.

படத்தின் வெளியீடு குறித்து இயக்குநர் கண்ணன் கூறுகையில், “வரும் டிசம்பர் 28-ம் தேதி எங்களுடைய தயாரிப்பான ‘பூமராங்’ படம் வெளியாக இருப்பதால் ஒட்டு மொத்த குழுவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நடிப்பில் உபென் படேல் சமரசமே செய்து கொள்ள விரும்பவில்லை. வேறு ஒருவர் அவருக்கு டப்பிங் பேசினாலும், தமிழ் கற்றுக் கொள்ள அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். படப்பிடிப்பின்போது அவரது நடிப்பின் மீது மிகுந்த ஆர்வமாக இருந்தார்.

சுஹாசினி மணிரத்னம் மேடம் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தில், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சதீஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகிய இருவருக்குமே சமமான முக்கியத்துவம் இருக்கும். வெறும் காமெடி மட்டுமல்லாமல், கதையில் முக்கிய பங்காகவும் இருப்பார்கள்.

இந்த படத்தில் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிக்க மிகவும் துல்லியமான முயற்சிகள் எடுத்த அதர்வா முரளிக்கு இப்படத்தின் வெளியீடு மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. மேகா ஆகாஷ் மற்றும் இந்துஜா ஆகியோரின் உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

இந்தப் படம் மிகச் சிறப்பாக உருவாக எனக்கு மொத்த குழுவும் பக்க பலமாக இருந்தது. ஒரு தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் இந்த எதிர்பார்ப்பே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்கள் முடிவில்லாத கடின உழைப்புக்கு இது புத்தாண்டு பரிசாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்…” என்றார்.

கலை இயக்கம் – சிவா யாதவ், இசை – ரதன், ஒளிப்பதிவு – பிரசன்னா எஸ்.குமார், படத் தொகுப்பு – ஆர்.கே.செல்வா, தயாரிப்பு – மசாலா பிக்ஸ் நிறுவனம், எழுத்து, இயக்கம், தயாரிப்பு – ஆர்.கண்ணன்.