இயக்குனர் – சுதீஷ் ஷங்கர்
நடிகர்கள் – வடிவேலு, ஃபகத் பாசில், கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா
இசை – யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பு – சூப்பர் குட் ஃபிலிம்ஸ் – ஆர் பி சௌத்ரி
பகத் பாசில், வடிவேல் இவர்கள் கூட்டணியே படம் பார்க்கும் ஆவலைத் தூண்டியுள்ளது.
படத்தின் ஒன்லைனுமே டிரெய்லரில் அட்டகாசமாக இருந்தது.
எலிப்பொறியில் சிக்கிய எலி, போலீஸ் அதிகாரி கையிலிருந்து தப்பி பாம்பை நோக்கி ஓடுவதில் தான் படம் ஆரம்பிக்கிறது.
ஒரு திருடன், ஒரு வீட்டுக்கு திருட போகையில், அங்கு கட்டி வைக்கப்பட்டிருக்கும் அம்னீசுயா பேஷண்டான வடிவேலுவை, பணம் தருகிறேன் என சொன்னதற்காக காப்பாற்றுகிறார். பின்னர் அவரிடம் 25 லட்சம் பணம் இருக்கிறது என்றவுடன், அதை அடிப்பதற்காக அவருடனேயே பயணமாகிறார், அந்த பயணம் தான் படம்.
படத்தின் மிகப்பெரிய பலம் வடிவேலுவும் பகத்தும் தான் காட்சியில் கதையாக எதுவுமே இல்லையென்றாலும், திரையை மெய்மறந்து பார்க்க வைக்கும் திறமை இருவரிடமும் இருக்கிறது.
1980 களில் மலையாள சினிமாவின் பெரிய நட்சத்திரமாக இருந்த மம்முட்டி தமிழில் பல அற்புதமான படங்களை அவ்வபோது கொடுத்துக் கொண்டே இருப்பார் அதே போல பகத் பாசிலும் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தமிழில் தனது நடிப்பு திறனை பதித்து செல்கிறார், கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் வடிவேலு மற்றும் பகத் பாசில் இருவரது எதார்த்தமான நடிப்பு மற்றும் நகைச்சுவை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறது. ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வடிவேலுவும், நல்லவன் போல் நடித்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடும் பகத் பாசிலும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வதும், ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் திட்டம் போடுவது என்று படம் முழுவதையும் தோளில் சுமந்திருக்கிறார்கள்.
கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா, ரேனுகா, லிவிங்ஸ்டன், பி.எல்.தேனப்பன், கிருஷ்ணா, ஹரிதா ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப அளவாக நடித்து திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
படம் முழுக்க லைவ் லோகேஷனில் படம்பிடித்திருக்கிறார்கள். இப்போது பல படங்கள் செட்டுக்குள்ளேயே முடிந்து விடுகிறது. ஆனால் லைவ் லோகோஷன் படத்திற்கு புதிய கலர் சேர்த்து அது ஒரு கதாபாத்திராமாகி நமக்கு நெருக்கமாகிவிடுகிறது. சென்னை வேலூரில் ஆரம்பித்து, திருவண்ணாமலை, ஈரோடு, சேலம் எனப்போய் இறுதியாக கோவையில் முடிகிறது.

கொஞ்சம் முயன்றிருந்தால் இது அன்பே சிவம், மெய்யழகன் மாதிரி ஆகியிருக்கும் ஆனால் இயக்குநர் வேறு கதை சொல்ல நினைத்திருக்கிறார்.
இண்டர்வெல் பாயிண்ட் அசத்தல் அதைதொடர்ந்து வரும் ப்ளாஷ்பேக், க்ளைமாக்ஸ் எல்லாமே கதையின் லாஜிக்கை சரிப்படுத்தி நல்ல படம் என சொல்ல வைத்துவிடுகிறது.
வடிவேலுவும் பகத்தும் அட்டகாசமாக நடித்திருக்கிறார்கள் …, ஆனால் எங்குமே படத்தில் மனதுக்குள் பதிவது மாதிரி ஒரு ஆழமான காட்சி இல்லை.. அது குறை தான்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி படைப்பு இயக்குநராக பணியாற்றியிருக்கும் வி.கிருஷ்ணமூர்த்தி, இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒரு பயணம் மற்றும் அந்த பயணத்தின் நடுவே சில மர்மங்கள் என்ற ரீதியில் சுவாரஸ்யமாக படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார். வடிவேலுவை ஏமாற்ற முயற்சிக்கும் பகத் பாசில், பகத் பாசிலை ஏமாற்றிவிட்டு கொலை செய்யும் வடிவேலு, என முதல் மற்றும் இரண்டாம் பாதியில் எதிர்பார்க்காத சில திருப்பங்களை வைத்திருக்கும் இயக்குநர் சுதீஷ் சங்கர், பல திரைப்படங்களில் பேசிய, பேச வேண்டிய சமூக பிரச்சனையை வேறு பாணியில் பேசியிருப்பதோடு, அதை திரை மொழியில் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்
மொத்தத்தில், ‘மாரீசன்’ அனைத்து ரசிகர்களையும் கவரும் .
