பேமிலி கலந்த த்ரில்லர் ஜானரான இக்ஷூ டீசர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

றிமுக நாயகன் ராம் நடிக்கும் படம் இக்ஷு. டாக்டர் அஸ்வினி நாயுடு தயாரிக்கும் இந்தப் படத்தை வி.வி.ருஷிகா இயக்கியுள்ளார். விகாஸ் படிஷா இசையமைத்துள்ளார். நவீன் டுகிட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் விமர்சையாக நடைப்பெற்றது. சமீபத்திய மழையின்போது உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளைஞரை துணிச்சலாக காப்பாற்றிய காவல் ஆய்வாளர் திருமதி ராஜேஸ்வரி தமிழ் சினிமாவின் முன்னோடிகள் முன்னிலையில் டீசரை வெளியிட்டார். விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் கலைப்புலி ஜி.சேகரன், தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறப்பினர் விஜயமுரளி, கில்டு தலைவர் ஜாக்குவர் தங்கம், நடிகர் நட்டி உட்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மக்கள் தொடர்பாளர் பிரியா வரவேற்றார்.

விழாவில் இசையமைப்பாளர் நவீன் படிஷா பேசும்போது, ‘இந்தப் படத்தின் நாயகன் ராம் நேரில் பார்க்கும்போது சாக்லேட் பாய் லுக்கில் இருக்கிறார். ஆனால் படத்தில் அவருடைய நடிப்பு டெரர் ரகமாக உள்ளது. படம் முழுவதும் அவருடைய கடும் உழைப்பை பார்க்க முடிந்தது. இதில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. பாடலாசிரியர்கள் ஸ்ரீ சிராக், ஷியாம் ஆகியோர் சிச்சுவேஷனுக்கு ஏற்ற மாதிரி பிரமாதமான வரிகளைக் கொடுத்துள்ளார்கள். பாடல்கள் பேசப்படும் விதத்தில் வந்துள்ளன’ என்றார்.

விழாவில் நாயகன் ராம் கூறியதாவது, “இந்த டீமுக்கு நான் மிகப் பெரிய நன்றி சொல்லவேண்டும். ஏனெனில், புதுமுகமாகிய என் மீது நம்பிக்கை வைத்து மிகப் பெரிய பொறுப்பை வழங்கியுள்ளார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக கதைக்கும் கேரக்டருக்கும் என்ன நியாயம் செய்ய முடியுமோ அதை செய்திருக்கிறேன். இந்தப் படம் அனைத்து தரப்புக்கும் பிடிக்கும் விதமாக உருவாகியுள்ளது’’ என்றார்.

இயக்குநர் ருஷிகா பேசும்போது, ‘இது எனக்கு முதல் படம். இந்தப் படத்தை உண்மை சம்பவத்தை மையாக வைத்து இயக்கியுள்ளேன். இது பேமிலி கலந்த த்ரில்லர் ஜானர். எனது தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ் மொழியில் படம் இயக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. அந்த வகையில் ஒரே கல்லில் ஐந்து மாங்காய் அடித்த மாதிரி தமிழ், தெலுங்கு என்று ஐந்து மொழிகளில் இயக்கியது மகிழ்ச்சி’ என்றார்.

விழாவில் நட்டி பேசும்போது, ஹீரோ ராம் முதல் படம் மாதிரி இல்லாமல் வெகு சிறப்பாக பண்ணியிருக்கிறார். இயக்குநர் ருஷிகாவும் திறமையாக இயக்கியுள்ளார். காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மழை சமயத்தில் ஒரு உயிரை காப்பாற்றியது எல்லோர் மனதையும் நெகிழ வைத்தது. அதற்கு தலை வணங்குகிறேன். காவல் துறை உங்கள் நண்பன் என்பதற்கு ராஜேஸ்வரி மேடம் சிறந்த உதாரணம். இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகள்’’ என்றார்.

விழாவில் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி பேசியதாவது, ”காவல் அதிகாரியான என்னை இந்த விழாவுக்கு அழைத்ததில் மகிழ்ச்சி. காவல் துறையில் நான் மட்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறேன். என்னைப்போன்று பல காவலர்கள், அதிகாரிகள் முன் களப் பணியாற்றி மக்கள் சேவை செய்து வருகிறார்கள். அவர்களும் புகழுக்கும் போற்றுதலுக்கு உரியவர்கள் என்பதை இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். காவல் துறை எப்போதும் உங்கள் நண்பன் என்பதுதில் மாற்றமே இல்லை. சினிமா சமூகத்தில் பல மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. பல படங்களில் காவல் துறையை கண்ணியமாக காண்பித்துள்ளார்கள். சில படங்களில் காவல் துறையை தவறாகவும் சித்தரித்துள்ளனர். இங்கு பேசும்போது காவல் துறைக்கு ஒரு நாள் விடுமுறை அளித்தால் நாடு என்ன மாதிரி பிரச்சனையை சந்திக்கும் என்பதை சொன்னார்கள். அதையே நான் மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். காவல் துறையின் சேவை இல்லை யென்றால் மக்களின் நிம்மதி பறிபோய்விடும். குற்றங்கள் பெருகிவிடும்.

காக்கி என்றால் விரோதமாக பார்க்கும் மனநிலையை கை விட வேண்டும். காக்கி உடைக்குள்ளும் ஈரம் இருக்கிறது. நாங்கள் வெளியேதான் பலா மாதிரி தெரிவோம். உள்ளே இனிக்கும் சுளை. மக்கள் சேவைதான் எங்களுக்கு முக்கியம். எங்களை நேசியுங்கள். காவல் துறையினர் பொதுப் பணியில் இருப்பதால் நல்லது, கெட்டது என்று தங்கள் வீட்டு நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் மக்கள் சேவையில் இருப்பார்கள். காவல் துறை என்பது உங்கள் சேவைக்காக மட்டுமே. பயப்படாமல் நீங்கள் எங்களை அணுகுங்கள். இதற்கு யாருடைய துணையும் வேண்டாம். உங்கள் பிரச்சனை எதுவோ நேரிடையாக வாருங்கள். நாங்கள் தீர்வுக்கு வழி வகுக்கிறோம். காவல் துறை புனிதமான துறை. உங்கள் குழந்தைகளுக்கு தைரியம் கொடுத்து வளர்த்தெடுங்கள்’ என்றார்.

விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது, ‘ தயாரிப்பாளர் அஸ்வினி அவர்கள் 5 மொழிகளில் இந்தப் படத்தை எடுத்துள்ளார். அவருடைய துணிச்சல் பாராட்டுக்குரியது. சினிமாவை பயன்படுத்தி பலர் சமூக வலைத் தளங்களில் சம்பாதிக்கிறார்கள். அதில் சிறு தொகையாவது சினிமாவில் உள்ள நலிந்தவர்களுக்கு உதவி செய்ய முன் வரவேண்டும். சமூக வலைத் தளங்களில் வீடியோ போடும் நண்பர்கள் நாகரீகமாக தலைப்பு கொடுங்கள். சினிமாவில் நாங்கள் எல்லோரும் நண்பர்களாக பழகி வருகிறோம். எங்களுக்குள் மோதல் உருவாக்குமளவுக்கு தலைப்பு கொடுக்காதீர்கள். சமூகத்தில் என்னளவில் பல ஆயிரம் குழந்தைகளுக்கு இலவச கல்விக்கு உதவி செய்துள்ளேன். காவல் துறையில் எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள். உயர் போலீஸ் அதிகாரிகள் விஜயகுமார், சைலேந்திர பாபு ஆகியோரிடம் எனக்கு நல்ல நட்பு உண்டு. அவர்கள் நேர்மைக்கு புகழ் பெற்றவர்கள். விஜயகுமார் சென்னை போலீஸ் கமிஷனராக பொறுப்பில் இருந்த போது திருட்டு வி.சி.டி. ஒழிப்புக்கு பல வகையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள். காவல் துறையில் ஒரு சிலர் நேர்மை தவறலாம். மற்றபடி காவல் துறை சமூகத்தில் சிறப்பான சேவை வழங்கி வருகிறது. சினிமாவில் போலீஸை தவறாக சித்தரிக்கிறவர்களை நான் நேரில் சந்திக்கும்போது கண்ணியமாக எடுக்கச் சொல்வதுண்டு. இப்போது அரசாங்கம் போலீஸ் துறைக்கு பல நல திட்டங்களை அறிவித்துள்ளது. வாரத்துக்கு ஒரு நாள் விடுமுறை, போலீஸ் பந்தோபஸ்து பணியில் பெண் காவலர்களளை விடுவித்தது போன்ற பல நல்ல அறிவிப்புகளை இந்த அரசாங்கம் செய்து வருகிறது. அந்த வகையில் போலீஸ் துறையை சேர்ந்த ராஜேஸ்வரி ஆற்றிய சமூகப் பணி என்பது மகத்தானது. அவருக்கு ராயல் சல்யூட். சினிமா போலீஸ் துறையின் பணிகளை சிறப்பாக நேர்மையாக பதிவு செய்கிறது. ‘ஜெய்பீம்’ படத்தில் போலீஸ் அராஜகத்தையும், ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியையும் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அந்த வகையில் இந்தப் படக்குழு சமூகத்துக்கு பயனளிக்கும் ஒரு படைப்பு கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துகள்’ என்றார்.

விழாவுக்கு வந்த அனைவருக்கும் தயாரிப்பாளர் அஸ்வினி நாயுடு நன்றி தெரிவித்தார்.