லைஃப்ல ‘இது போதும்டா’னு சிலர் நினைக்கிறாங்க! – சூர்யா பர்த் டே மெசேஜ்!

நடிகர் சூர்யாவுக்கு இன்று (ஜூலை 23) பிறந்தநாள். இந்திய திரையுலகில் பிரதானமாக உள்ள தமிழ் சினிமா துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக்கொண்டு பெரும் வசூல் வேட்டை நாயகனாக ஓடிக்கொண்டிருப்பவர் நம் சூப்பர் ஹீரோ சூர்யா.  தமிழ் சினிமாவில் எப்படி பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வலம் வருகிறாரோ அதற்கு சற்றும் குறையாமல் தெலுங்கில் இவரது படம் ரிலீஸ் என்றால் அங்கும் திருவிழாதான்.

புகைப்பிடிக்கும் காட்சிகள் சூர்யாவின் ஆரம்ப கால கட்ட சினிமாக்கள் சிலவற்றில் மட்டுமே பார்க்க முடியும். தனது மார்க்கெட் வேல்யூ உயர உயர தனக்கான ரசிகர்கள் பட்டாளம் சூழச் சூழ புகை பிடிக்கும் காட்சிகளுக்கு நடிகர் சூர்யா முற்றிலுமான முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டிருப்பவர்.

தமிழ் சினிமாவில் தான் பிரம்மாண்ட உயரத்துக்கு வளர்ந்த பிறகும் கதை கேட்பதில் தொடங்கி படப்பிடிப்புக்கு வந்து செல்வது வரைக்கும் அப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளரின் நாயகனாக இருந்து வருகிறார். அதேபோல, படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் புகைப்படம் எடுக்க வேண்டும் என விரும்பி அணுகும்போது அவர்களை கைக்குளுக்கி வரவேற்று கொஞ்சமும் முகம் சுழிக்காமல் அவர்களுக்கு நேரம் ஒதுக்கும் எளிமையான கலைஞன். தேடி வரும் ரசிகர்கள் பட்டாளத்தில் பெண்கள் இருந்தால் அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை விசாரித்து வழி அனுப்பும் அக்கரை மனிதன்.

படப்பிடிப்பு இருக்கும் தேதிகளில் நடிகர் சூர்யா எந்த ஒரு நிகழ்ச்சியும் ஒப்புக்கொள்வதில்லை. தன்னால் படம் தயாரிக்கும் ஒரு தயாரிப்பாளர் எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது என அப்பா சிவக்குமார் சொன்ன வார்த்தைதான் அதற்கு காரணம். இப்பேர் பட்டவர் வாழ்க்கையை புதிய அனுபவங்கள்தான் மேம்படுத்தும். எப்போதும் புதுப்புது விஷயங்களை ஆர்வத்தோடு கற்றுக்கொண்டே இருங்கள் என்று நடிகர் சூர்யா தனது ரசிகர்கள் முன் தெரிவித்தார்.

‘‘நாம குழந்தையாக இருக்கும்போது முதன் முதல்ல சைக்கிள் வேணும்னு ஆசைப்படுவோம். அடுத்து கொஞ்சம் வளர்ந்ததும் பைக் வேணும்னு அப்பாகிட்ட அடம்பிடிப்போம். அதுவும் எந்த மாதிரி பைக்னுகூட ஒரு ஐடியாவோட சுத்துவோம். அடுத்து கார். இப்படி வாழ்க்கையில புதுசு புதுசுன்னு எப்பவும் ஒரு உற்சாகம் இருந்துகொண்டே இருக்கும். அது அப்படியே கல்லூரி, வேலை, திருமணம்னு அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்துக்கிட்டே இருக்கும். இந்தமாதிரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்துல ஒவ்வொரு ஆர்வம் இருக்கும். அந்த ஆர்வம் இப்போ நிறைய பேருக்கு குறையுதோன்னு தோணுது.

லைஃப்ல ‘இது போதும்டா’னு சிலர் நினைக்கிறாங்க. ஈஸியா சலிப்படையவும் செய்றாங்க.  எப்பவுமே ஒரு புது அனுபவம் வைத்துக்கோங்க. நம்ம செய்ற வேலையில நாம தான் பெஸ்ட்டா இருக்கணும்னு மனசுல ஆழமா நினைங்க. என்னென்ன விஷயங்கள் கற்றுக்கொண்டே இருக்க முடியுமோ கத்துக்கிட்டே இருங்க. லைஃப்ல ஒரு விஷயம் மட்டும் போதும்னு இங்கே இல்லை.

இப்போ எல்லாம் சந்தோஷம் ரொம்ப முக்கியம். கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து விடுகிறது. எதுக்காகவோ அந்த சந்தோஷத்தை நாம விட்டுடுறோம். எந்த காரணத்துக்காகவும் அதை இழக்கக்கூடாது. சந்தோஷம் என்பது சுலபமான விஷயம் அல்ல. வீடு, பணம் மட்டுமே சந்தோஷத்தை கொடுத்துடாது. மனதை எப்பவும் சந்தோஷமா வைத்துக்கொள்வதே ஒரு கலை.

நிறைய படித்து, அறிவாளியா இருக்குற ஒருவர் எப்பவும் உர்ர்ர்னு யார்கிட்டயும் எதுவும் பேசாம இருந்தா அவரை யாரும் சீண்டக்கூட மாட்டாங்க. அதுவே எப்பவும் சிரிச்சிக்கிட்டே மகிழ்ச்சியாக இருக்குறவங்கக்கிட்ட காரணமே இல்லாம அவங்களை சுத்தி நிறைய பேர் சூழ்ந்திடுவாங்க. நாம வேலை செய்ற இடத்துல தொடங்கி எல்லா இடங்கள்லயும் சந்தோஷத்தை காட்டுறது ரொம்ப முக்கியம்.

யாரோடயும் யாரும் ஒப்பிட்டுக்கொள்ள வேண்டாம். அது தேவையில்லாம மன உளைச்சலை கொடுக்கும். நம்ம வாழ்க்கை நம்ம ஓட்டம்னு இருக்கணும். நம்ம வேலை நமக்கு பெஸ்ட்னு இருக்கணும். அதுல என்ன புது அனுபவம் கிடைத்ததுன்னு பார்க்கணும். எதிலும் தனித்து நிற்கணும். இங்கே போதும்னு லைஃப் கிடையாது.

ரசிகர்கள் என் மேல் எவ்வளவு அக்கறை வைத்திருக்கீங்களோ அதே அளவுக்கு எனக்கும் உங்க மீது அக்கறை உண்டு. வயசு போய்க்கிட்டே இருக்கும். அதுக்குள்ள நல்ல உயரத்தை தொடணும். உடல் உறுப்பு தானம், ரத்த தானம்னு செய்ற என் ரசிகர்கள் ஒவ்வொருவரும் யாருக்கும் அடிமையா இருக்கக்கூடாது. இருக்க மாட்டீங்க. நல்ல பழக்கங்களை கடைபிடிங்க. மற்ற எல்லாத்தையும்விட முதல்ல குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். அதுதான் ரொம்ப முக்கியம்’’இவ்வாறு நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.