ரஜினியின் 2.0 படம் தயாராகலை: அதனால் ‘காலா’ ரிலீஸ் ?!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘2.0’ படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சுமார் 400 கோடி பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தியா மட்டுமன்றி உலக அளவில் தமிழ்ப் படங்களே வெளியாகாத நாடுகளிலும் இப்படத்தை வெளியிட லைகா நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

‘2.0’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றன. தான் நினைத்தது போன்று கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கவேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார் ஷங்கர். முழுக்க 3டி கேமிரா தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் படம் என்பதால், கிராபிக்ஸ் காட்சிகள் செய்வதில் கடினமாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள். இந்நிலையில், ஏப்ரல் வெளியீடும் சாத்தியமில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை முடித்துள்ள காட்சிகள் அனைத்தையும் படத்தோடு இணைத்து DI பணிகள் உள்ளிட்டவற்றை முடிக்க காலதாமதமாகும். இதனால்தான் வெளியீட்டு தேதியை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் தாமதப்படுத்தி வருகிறது படக்குழு.

இந்நிலையில், ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ‘காலா’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், இதில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ரஜினிகாந்த் தனக்கான டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார். இதனால் ‘காலா’ திரைப்படத்தை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடலாமா என்று படக்குழு ஆலோசித்து வருகிறது. ‘காலா’ படத்தை லைகா நிறுவனம் வாங்கி தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறதாக்கும்!