கிராமியக்கலையை மீண்டும் திரைக்கு கொண்டு வந்திருக்கும் ”டப்பாங்குத்து” !!

மாடர்ன் டிஜிடெக் மீடியா எல்எல்பி, S ஜெகநாதன் தயாரிப்பில், இயக்குநர் முத்து வீரா இயக்கத்தில், வெளிவந்திருக்கும் திரைப்படம் ”டப்பாங்குத்து”.

தமிழகம் மறந்து விட்ட தெருக்கூத்து கலையை மையமாக வைத்து வந்திருக்கும் படம் தான் இது.

தமிழகத்துக்கென பல கலைகள் இருந்தது ஏன் சினிமா பிறந்ததே நாடகக்கலையில் இருந்து தான், ஆனால் அந்த நாடகமே தெருக்கூத்தில் இருந்து தான் பிறந்தது தான்.

நம் நவீன வாழ்வியல் காலத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும், இந்த தெருக்கூத்தை ஆவணப்படுத்தும் நோக்கில் ஒரு நல்ல படைப்பாக வந்திருக்கிறது இந்த படைப்பு.

மதுரையை சேர்ந்த பாண்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தும் ஆட்டக்காரன்.அவன் தன் குழுவினருடன் சேர்ந்து மதுரையை சுற்றி உள்ள ஊர்களுக்குச் சென்று நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறான். அவனுடைய தாய் மாமன் தர்மலிங்கம், கலை நிகழ்ச்சிகளுக்கு நாடக நடிகர்களை புக் பண்ணி கொடுக்கும் ஒரு புரோக்கராக இருக்கிறார். அதே ஊரை சேர்ந்த தனம் பாண்டியோட கலை நிகழ்ச்சிகளுக்கு சென்று ஆடுவதற்கு முடிவு செய்கிறாள். ஆனால் தர்மலிங்கமா தனத்தை பாண்டியின் குழுவில் சேர்ந்து ஆடக்கூடாது என்று முட்டுக்கட்டை போடுகிறான். இதனால் பாண்டிக்கும் தர்மலிங்கத்திற்கும் மோதல் ஏற்படுகிறது தர்மலிங்கம் ஏன் தனத்தை ஆடக்கூடாது என்று சொல்கிறான், தனத்திற்கு பின்னணி என்ன?ஏன் தர்மலிங்கம் அவளை ஆடக்கூடாது என்று கூறுகிறான்.. தனம் பாண்டியோட மேடை ஏறினாளா? என்பது தான் படத்தின் கதை.

டப்பாங்குத்து என்பது தெருக்கூத்து கலையின் ஒரு வடிவம், ஆனால் அதை தெருவெங்கும் பாடியவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? எப்படியான பாடல்கள் பாடினார்கள் ? என்பதை பார்க்க ஒரு நல்ல வாய்ப்பாக இந்தப்படம் அமைந்துள்ளது.

தெருக்கூத்தில் எப்போதும் பாடல்கள் தான் மிக முக்கியம் அதே போல இந்தப்படம் முழுக்க பாடல்கள் தான். முழுக்கதையையும் பாடலின் வழியாகவே சொல்லியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்த கலைஞர்களான பறவை முனியம்மா, கரிசல் கருணாநிதி, தேக்கம்பட்டி சுந்தர்ராஜன், கிடாக்குழி மாரியம்மா, ஆக்காட்டி ஆறுமுகம், செந்தில் ராஜலட்சுமி, என நாட்டுப்புற கலைஞர்களின் பட்டிதொட்டி யெங்கும் பட்டய கிளப்பிய பாடல்கள் பலவும் படம் முழுக்க மிக அழகாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தெருக்கூத்து பாடல்கள் எந்த மாதிரி இருக்கும், அதன் அழகு எல்லாத்தையும் அழகாக பதிவு செய்ததற்காக படக்குழுவை பாராட்டலாம்.

கதை முழுக்க தெருக்கூத்தை மையமாக கொண்டுள்ளதால், கதையில் பெரிய கவனம் செலுத்தவில்லை. முதல் பாதி படத்தின் நீளம் மிக அதிகமாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் தான் படத்தின் முக்கிய திருப்பங்கள் இருக்கிறது.

தெருக்கூத்து கலைஞராக நாயகன் சங்கரபாண்டி படத்தில் மதிச்சியம் பாண்டியனாக வாழ்ந்திருக்கிறார். ஒரு தெருக்கூத்து கலைஞனை கண்முன்னால் கொண்டு வந்திருக்கிறார்.

புதுமுகம் தீப்தி டப்பாங்குத்து ஆட்டத்தில் கலக்கியிருக்கிறார், நடிப்பிலும் திறமை தெரிகிறது. அவரைத்தாண்டி ராசத்தி எனும் துணை கதாப்பாத்திரத்தில் வரும் துர்கா கவனம் ஈர்க்கிறா.

காதல் சுகுமார், படத்திற்கு மிகப்பெரிய பலம். படத்தில் பல இடங்களில் தன் நகைச்சுவையால் சிரிக்க வைக்கிறார். சக்குவாக குணச்சித்திரத்திலும் அவர் நடிப்பு பிரமாதம். வில்லனாக வரும் தர்மலிங்கமும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

தெருக்கூத்தை பதிவு செய்ய வேண்டும் எனும் மனதிற்காகவே இயக்குநர் முத்துவீராவை பாராட்டலாம். படத்தின் பட்ஜெட் சின்னதாக இருந்தாலும், அதை தெரியவிடாமல் உழைதிருக்கிறார்கள் படக்குழுவினர்.

முழுக்க தெருக்கூத்து தான் எனும் போது, படம் முழுக்க நடனமும் பாட்டும் தான், தீனா மாஸ்டர் நடன அமைப்பு படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது. சரவணனின் இசை படத்திற்கு தூணாக அமைந்துள்ளது.

கதையிலும் திரைக்கதையிலும் கொஞ்சம் கவனம் கூட்டியிருந்தால் இன்னும் நல்ல படைப்பாக இருந்திருக்கும். சின்ன சின்ன குறைகளை கழித்துவிட்டால், தமிழக கலைகளின் ஒரு ஆவணமாக அழுத்தமிகு படைப்பாக வந்திருக்கிறது டப்பாங்குத்து படம்.