ZEE5 யின் தலைமைச் செயலகம் எப்படி இருக்கிறது ?

 

தலைமை செயலகம் தமிழில் புதிதாக வந்திருக்கும் சீரிஸ். இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராதிகா சரத்குமாரின் ராடன் நிறுவன தயாரிப்பில், கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, பரத் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளத்தின் நடிப்பில், அரசியல் தொடராக வந்திருக்கிறது தலைமை செயலகம்.

தமிழில் பெரும்பாலும் அரசியல் சினிமாக்கள் கொஞ்சம் கம்மிதான், அரசியலின் பின்னணியில் நடைபெறும் கதைகளை வைத்துக்கொண்டு ஒரு முழு சீரிசை முயன்ற பார்த்திருக்கிறார்கள். அதிலும் இயக்குனர் வசந்தபாலனிடமிருந்து இந்த மாதிரி ஒரு சீரிஸ் எதிர்பாராத ஆச்சரியம்.

கதை வழக்கம் போல் எல்லா அரசியல் கதையின் மையம் தான் நாற்காலி யாருக்கு எனும் போட்டி தான் இந்தக்கதையின் மையமும்

 

தமிழக முதல்வராக வருகிறார் அருணாச்சலம் (கிஷோர்). இவர் மீது ஊழல் வழக்கு ஒன்று மத்திய பிரமுகர் ஒருவரால் தொடுக்கப்பட்டு, சில வருடங்களாக அந்த வழக்கும் நடத்தப்பட்டு வருகிறது.

சாட்சிகள் அனைத்தும் முதல்வருக்கு எதிராக திரும்ப, தீர்ப்பும் முதல்வருக்கு எதிராக தான் வர வாய்ப்பிருப்பதாக அனைவரும் அறிகின்றனர். இந்த வழக்கானது ஆந்திர பிரதேசத்தில் நடக்கிறது.

கிஷோர் சிறைக்குச் சென்று விட்டால், முதல்வர் நாற்காலியை பிடிப்பதற்காக சில கழுகுகள் வட்டமிடுகின்றன. கிஷோரின் மூத்த மகளும் அமைச்சருமான ரம்யா நம்பீசன், கிஷோரின் இரண்டாவது மருமகனான நிரூப் நந்தகுமார் இருவரும் முதல்வர் பதவிக்கு வர ஆசைப்படுகிறார்கள்.

அதேசமயம், அப்பாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றும் ஓடிக் கொண்டிருக்கிறார் ரம்யா. இந்த சூழலில், கிஷோரின் நெருங்கிய நண்பரும் கட்சி ஆலோசகருமான ஷ்ரேயா ரெட்டியும் அப்பதவிக்கு குறி வைக்கிறார்.

ஷ்ரேயா ரெட்டி மீது இருக்கும் நட்பால், ஷ்ரேயா சொல்வதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் முதல்வர் கிஷோர்.

அதேசமயம், ஜார்கண்ட் மாநிலத்தில் பல கொலைகளை செய்து தப்பி வந்த துர்கா என்ற கதாபாத்திரத்தை தேடி, சிபிஐ போலீஸ் அலைகிறது. அதுமட்டுமல்லாமல், தொடர்ச்சியாக EX.M.P.க்களையும் அந்த துர்கா கதாபாத்திரம் கொலை செய்து வருகிறது.

தமிழகத்தில் நடக்கும் கொலை ஒன்றை விசாரிக்கிறார் போலீஸ் அதிகாரியான பரத். இந்த வழக்கானது நூல் பிடித்தவாறு செல்கிறது. இவை அனைத்தும் ஒருபுள்ளியில் வந்து இணைகிறது.

அந்த புள்ளி யார் மீது வந்து நிற்கிறது.? துர்கா யார்.? கிஷோருக்கு தண்டனை வழங்கப்பட்டதா.? இல்லையா.? அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்.? என்ற பல கேள்விகளுக்கு விடை இருக்கிறது மீதமுள்ள கதையில்.

பல தளங்களில் பயணிக்கும் கிளைக் கதைகளுடன் ஒரு சீரிஸுக்கு என்னென்ன தேவையோ அது அத்தனையும் கச்சிதமாக இந்த சீரிஸில் வைக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதைக்கு ஒரு தனி பாராட்டு தரும் அளவு கொஞ்சம் கொஞ்சமாக இழைத்து இழைத்து உருவாக்கி இருக்கிறார்கள்

ஸ்ரேயா ரெட்டியின் கதை, பரத்தின் விசாரணை, முதல்வரின் கதை, முதல்வர் பிள்ளைகளின் கதை, என ஒவ்வொரு கதைக்கும் பின்னால் இருக்கும் கிளைக் கதைகளில் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டி இருந்தால் மிக சிறப்பான சீரிஸ் கிடைத்திருக்கும்.

இந்த சீரியஸின் மிகப்பெரிய மைனஸ் கிளைக்கதைகளில் அதிக சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதும் நாற்காலிக்கு யார் வந்தாலும் நமக்கு என்ன என்று நினைப்பு வருவதும் தான்.

கிஷோர், ரம்யா நம்பீசன், பரத் என அத்தனை பேரும் மிக கச்சிதமாக தங்கள் நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். அதிலும் கிஷோர் தமிழக முதல் அமைச்சராக அசத்தியிருக்கிறார். நாயகி ஸ்ரேயா ரெட்டி கண்களாலே நம்மை கவர்ந்து விடுகிறார்

இந்தியா முழுக்க நகரும் கதையை அங்கயே போய் படமாக்கி இருக்கும் குழுவின் உழைப்பு சீரீஸ் முழுக்க தெரிகிறது. இசை ஒளிப்பதிவு என எல்லாமே ஒரு சினிமாவுக்கு இருப்பது போல் தரமால இருப்பது மிகப்பெரிய பலம்

திரைக்கதையின் சுவாரசியத்தை மட்டும் கூட்டி இருந்தால் இந்த சீரிஸ் தமிழில் சிறந்த சீரிஸாக வந்திருக்கும்