உண்மைக்கதையா ரஸாக்கர் – விமர்சனம் !!

சமர்வீர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் குடூர் நாராயணன் தயாரித்து யதா சத்ய நாராயணா இயக்கியுள்ள படம் ரஸாக்கர். பாபி சிம்ஹா, வேதிகா உள்ளிட்டவர்கள் நடிப்பில் இந்த வாரம் ரிலீசாகியுள்ள இப்படம் எப்படி உள்ளது.

இந்திய சுதந்திர காலகட்டத்தில் ஹைதராபாத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது

1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது இந்தியா 584 சமஸ்தானங்களாகப் பிரிந்திருந்தது. பெரும்பாலான மன்னர்கள் தங்களது ராஜ்ஜியத்தை சுதந்திர இந்தியாவுடன் இணைக்க மறுத்துவிட்டனர். சுதந்திர இந்தியாவின் துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்த சர்தார் வல்லாபாய் படேல், அவரின் செயலாளர் வி. பி மேனன் ஆகியோர் இணைந்து மன்னர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் ராஜ்ஜியத்தை கைவிட வைத்தனர்.

மற்ற சமஸ்தானங்கள் தங்களது ராஜ்ஜியங்களை இந்தியாவுடன் இணைக்க சம்மதித்துவிட்ட நிலையில், இறுதியாக காஷ்மீர் மற்றும் ஹைதராபாத் மட்டும் தனி சமஸ்தானங்களாக இருந்தன. ஒரு பக்கம் காஷ்மீர் பிரச்சனை பெரிதாகிக் கொண்டே இருக்க, மறுபக்கம் ஹைதராபாத் நிஜாம் தனது ராஜ்ஜியம் கைவிட்டுப் போகாமல் இருக்க கடும் அடக்குமுறைகளை கையாண்டார். பெரும்பான்மையான இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் மதக்கலவரங்கள் வெடித்தன. நிஜாம் அரசு மக்களை கொடூரமாக கொன்றழித்தது.

இந்த பின்னணியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் ரஸாக்கர். நிஜாம் அரசின் கீழ் செயல்பட்ட ரஸார்க்கர்கள் (படை) நிஜாம் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த சாமானிய இந்து மக்களின் மீது நடத்திய வன்முறைகள் இந்தப் படத்தில் பிரதானமாக இடம்பெறுகின்றன.

நம் வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு உண்மைச்சமபவத்தை எடுத்துக்காட்டியதற்காக படக்குழுவை பாராட்டலாம் ஆனால் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘தி கேரளா ஸ்டோரி’ போன்று இஸ்லாமியர்களை விமர்சிக்கும் வகையில் வெறுப்பை கக்கும் வகையில் படம் அமைந்திருப்பது சோகம்.

இந்திய சமூகத்தின் தற்போதைய தேவை இஸ்லாமிய வெறுப்பு அல்ல இதை படைப்பாளிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் திரைக்கதைக்கு என்று பெரிதாக மெனக்கெடவில்லை. ஒவ்வொரு ஊர்களில் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டதை மீண்டும் மீண்டும் படத்தின் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். தொகுத்திருக்கிறார்.

இயக்குநர் வதையை காட்டுவதில் காட்டிய ஈடுபாட்டை, கதை திரைக்கதையில் காட்டியிருக்கலாம். பாகுபலி படத்தின் மேக்கிங்க் பலரையும் பாதித்துள்ளது. அதே போல் பிரம்மாண்டத்தைக் காட்ட படக்குழுவினர் ,முயற்சித்துள்ளனர்.

பாபி சிம்ஹா, வேதிகா படத்தின் மையக்கதாப்பாத்திரம் இல்லை இருவரும் ஒரு சில நிமிடங்களுக்கு மட்டுமே வந்து படு சுமாரான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு போகிறார்கள். பாடல்கள் படத்தில் ஒட்டவில்லை , படு சுமாரான வி.எஃப் எக்ஸ் காட்சிகள் எல்லாம் படத்திற்கு மைனஸ்.

நம் நாட்டில் இஸ்லாமிய வெறுப்பு உச்சத்தில் இருப்பதாக எதிர்க்கட்சிகளும் சிறுபான்மையினர் மக்களும் குற்றச்சாட்டை முன் வைத்து வரும் சூழலில், இஸ்லாமியர்கள் செய்த கொடுமைகளை பாருங்கள் என்ற பிரச்சாரமே இந்தப் படத்தின் நோக்கமாக இருக்கிறது.

வெறுப்பை பிரச்சாரம் செய்து மதக்கிளர்ச்சியை ஏற்படுத்த விரும்பும் கும்பல், இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஒரு சாக்காக இப்படம் அமையும் என்பது தான் சோகம்.