கமல் & ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’ தொடங்கியது!

உலக நாயகன் கமல் நடிப்பில், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். அப்படம்தான் கமல் – ஷங்கர் இணைந்து பணியாற்றிய கடைசிப் படம். தற்போது 22 வருடங்கள் கழித்து, ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்று (ஜனவரி 18) தொடங்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் கமல், காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘இந்தியன் 2’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இன்று (ஜனவரி 18) படப்பிடிப்பு தொடங்கியதை முன்னிட்டு புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்துக்காக தனது அரசியல் பணிகளுக்கு இடையே, உடலமைப்பை மாற்றியமைத்துள்ளார் கமல். பொள்ளாச்சி, சென்னை, ஹைதராபாத் மற்றும் பல வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’வுக்கான வசனங்களை எழுதியுள்ளனர்.

சென்னையில் ஓரிரு வாரத்தில் படப்பிடிப்பை முடித்து விட்டு கமல்ஹாசன் உள்ளிட்ட பட குழுவினர் வெளிநாட்டுக்கு செல்கின்றனர். அங்கு 2 மாதங்கள் தொடர்ச்சியாக 8 நாடுகளில் இந்தியன்-2 படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க அக்‌ஷய்குமாரை அணுகினர். அவர் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. படத்தில் மற்றொரு கதாபாத்திரத்தில் நடிக்க தென்கொரிய நடிகை பே சூஸியிடம் பேசி வருகிறார்கள். இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் இறுதி காட்சி வெளி நாட்டில் முடிவடையும். இரண்டாம் பாகம் தைவானில் தொடங்கி இந்தியாவுக்கு வருவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனர். தைவான் காட்சிகளில் பே சூஸி நடிக்கிறார்.

இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா, பச்சை கிளிகள் தோளோடு பாட்டு குயிலோ மடியோடு, கப்பலேறி போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா, அக்கடானு நாங்க உடைபோட்டா, மாயா மச்சீந்திரா மச்சம் பாக்க வந்தீரா ஆகிய இனிமையான பாடல்கள் இடம்பெற்று இருந்தன.

இரண்டாம் பாகத்தில் அவருக்கு பதில் அனிருத் இசையமைக்கிறார். படக்குழுவினருக்கு ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். படத்தின் சண்டை காட்சிகளை வர்ம கலையை மையமாக வைத்து வடிவமைத்து உள்ளனர்.