ஏ.டி.எம். கொள்ளையர்களை கொன்ற ‘வேளச்சேரி துப்பாக்கிச் சூடு’ – சினிமாவாகிறது!

V.R. மூவிஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் T.ராஜேஸ்வரி தயாரிப்பில் உருவாகும் படம் ‘வேளச்சேரி துப்பாக்கிச் சூடு’. இந்த புதிய படத்தில் சரத்குமார் என்கவுன்டர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கதாநாயகியாக மனித உரிமை கழக அதிகாரியாக இனியா நடிக்கிறார். இளம் ஜோடிகளாக அர்வி, கேரள புதுமுகம் நீரஜா இருவரும் நடிக்கின்றனர். மற்றும் இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, தீபக் படத் தொகுப்பை கவனிக்கிறார். இயக்குநர் S.T.வேந்தன் இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் ஷாம்-சினேகா நடித்த ‘இன்பா’ மற்றும் ‘மயங்கினேன் தயங்கினேன்’ ஆகிய படங்களை இயக்கியவர்.

இன்றைய தேதியில் வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வரும் இளைஞர்களால் பல இடங்களில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கலாச்சார சீர்குலைவும் ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடித்துள்ளார். அந்த நிகழ்வுகளும் அதைச் சார்ந்த ஒரு என்கவுண்டர் ஆபரேஷனுக்குத்தான் இந்த ’வேளச்சேரி துப்பாக்கிச் சூடு’ என பெயரிட்டுள்ளனர். அதைப் புதுவிதமான திரைக்கதையில் இளைஞர்களை ஈர்க்கும்விதமாக தர இருக்கிறார்களாம்.

இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் என்கவுண்டர் காட்சி வேளச்சேரியில் நடைபெறுவதால் இந்தப் படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என ‘வேளச்சேரி துப்பாக்கிச் சூடு’ என்கிற டைட்டிலை வைத்துள்ளார்களாம்.

2012-ம் ஆண்டில் சென்னையில் பல இடங்களில் ஏ.டி.எம். கொள்ளைகள் அதிகமாக நடைபெற்றன. இதனை வட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள்தான் செய்வதாக நினைத்த சென்னை மாநகர போலீஸார் 2012-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதியன்று நள்ளிரவில் வேளச்சேரியில் அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து அனைவரையும் சுட்டுக் கொலை செய்தனர். இந்தத் தாக்குதலில் 5 வட இந்திய வாலிபர்களும் மரணமடைந்தனர். இந்தச் சம்பவத்தைத்தான் இந்தப் படத்தில் ஹைலைட்டாக பயன்படுத்தப் போகிறார்கள் என்பது தலைப்பிலேயே தெரிகிறது.

காஷ்மீர் துப்பாக்கிச் சூடு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு என துப்பாக்கிச் சூடு என்பது அன்றாட நிகழ்வாக மாறிப்போய் விட்டது. அதை மனித உரிமை மீறல் என சொல்லக் கூடிய இனியாவுக்கும், இல்லையில்லை… காவல்துறையின் செயல் நியாயமானதுதான் என்கிற சரத்குமாருக்கும் நடக்கும் விவாதங்களும் அதை சார்ந்த நிகழ்வுகளும்தான் படத்தின் அடிநாதம்.

சரத்குமார் நிறைய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும், முழுக்க முழுக்க என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிப்பது இதுதான் முதல் முறை ஆகும்..

படம் குறித்து இயக்குநர் S.T..வேந்தன் கூறும்போது, “காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தால் அதை மனித உரிமை மீறல் எனச் சொல்கிறார்கள். அதேசமயம் கிரிமினல்களால் பாதிக்கப்படும் காவல் துறையினருக்காக யாரும் கொடி பிடிப்பதில்லை.. யாரும் போராடுவதில்லை.

அப்பாவிகளை கொல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. ஆனால் எதிர்பாராதவிதமாக அப்பாவிகளும் கொல்லப்படுகிறார்கள் என காவல்துறை பக்க நியாயத்தை சரத்குமார் பேசுவதும், மனித உரிமை ஆர்வலராக வரும் இனியா பொதுமக்களுக்கான நியாயங்களை அவர்கள் பார்வையில் பேசுவதும் என இரண்டு தரப்பினரின் வாதங்களையும் சமமாக சொல்லியிருக்கிறோம்.

இதற்கிடையே வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம், இளமையான காதல் ஜோடி, என்கவுண்டர், மனித உரிமை கழக விசாரணை என மாறி மாறி பரபரப்பாக நகரும்விதமாக இதுவரை இல்லாத வகையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம். கிளைமாக்ஸ் என்கவுண்டர் முடிந்ததும் நடைபெறும் மனித உரிமை ஆணையத்தின் விசாரணை இந்தப் படத்தின் ஹைலைட்டாக இருக்கும்…” என்றார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.