இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் !!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் – அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கிறார். இந்த திரைப்படம்- அப்ளாஸ் என்டர்டெய்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இடையேயான பல திரைப்படத் தயாரிப்பின் கூட்டு ஒப்பந்தத்தின் தொடக்கத்தை குறிப்பிடுகிறது.

கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரும் வெற்றியை பெற்ற ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்- தமிழின் தரமான திரைப்படங்களை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட படைப்பாளி பா. ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் அதிதி ஆனந்த்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பல திரைப்படங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன் தொடக்கமாக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் விளையாட்டை மையப்படுத்திய திரைப்படத்தை, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ என தொடர்ந்து வெற்றி பெற்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாரிக்கிறது.

படைப்பாளி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படத்தின் பணிகள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கியது. கபடி விளையாட்டை மையப்படுத்திய படைப்பாக உருவாகிறது. அனைத்து தரப்பிலும் எதிரிகள் சூழ்ந்த இந்த உலகத்தில் துணிச்சலையும், தைரியத்தையும் வாழ்வியலாக கொண்ட இளைஞனின் கதையை சொல்கிறது இந்த திரைப்படம். இந்தக் கதை- ஒரு மனிதன் விளையாட்டையே துப்பாக்கி போன்ற வலிமை மிக்க ஆயுதமாக ஏந்தி, வன்முறையற்ற.. அமைதியான.. மரணமற்ற வாழ்க்கையை வாழ்வதற்காக போராடும் போராட்டத்தை விவரிக்கிறது.

தனித்துவம் மிக்க நட்சத்திர நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘பிரேமம்’, ‘குரூப்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.