சிவகுமார் சால்வை விவகாரம் உண்மை என்ன?

சிவக்குமார் சால்வையை வீசி எறிந்தது இப்போது வைரலாகி வருகிறது. ஆனால் ஒரு பரபரப்புக் காட்சிக்கு ஒரு வீடியோ கிடைத்தால் எப்படி வேண்டுமானாலும் செய்தியாக்கிக் கொள்ளலாம் என்ற அரை வேக்காட்டு மீடியா உலகை என்ன என்று சொல்வது?

காரைக்குடி நடந்த பழ.கருப்பையா புத்தக வெளியீடு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகர் திரு. சிவகுமார்.

நிகழ்ச்சியில் திரு. பழ. கருப்பையாவைப் பாராட்டிப் பேசியவர், அவரின் செயற்கரிய செயல் ஒன்றைக் குறிப்பிட்டு அவர் காலைத் தொட்டு வணங்கியும் இருக்கிறார்.

இப்படியானவர் நிகழ்ச்சி முடிந்து வெளியே செல்லும் போது ஒரு பெரியவர் சிவகுமாரை மறித்து சால்வை அணிவிக்க முற்பட்டுள்ளார்.

அதை சட்டென்று பறித்து, ‘எனக்கு சால்வை போடறதே பிடிக்காதுன்னு தெரியும்ல’ன்னு பக்கத்தில் இருந்தவரிடம் உணர்ச்சி மேலிட விசிறியிருக்கிறார் சிவகுமார்.

இந்தக் காட்சியைப் படம் பிடித்தவர்கள். யாரிடமும் எந்த விளக்கமும் கேட்கவில்லை. உடனே இதை பரபரப்புச் செய்தியாக்கி உள்ளனர்.

எப்படி என்றால், ஒரு வயதான ரசிகர் சால்வை போட வந்தார். அதை சிவகுமார் பிடுங்கி எறிந்தார். அதில் அந்த ரசிகர் மனவேதனை அடைந்தார்

இதில் உண்மை நிலையே வேறு. மீடியாக்கள் குறிப்பிடும் வயோதிக ரசிகர் பெயர் திரு. கரீம். திரு சிவகுமாருக்கு 58 ஆண்டு கால நண்பர். அவர் திருமணம், அவர் பிள்ளைகள் திருமணம் எல்லாம் செய்த போது குடும்ப விசேஷத்தில் முன்னின்றவர் சிவகுமார். அவரின் பேரன் பேத்திகளைக் கொஞ்சம் அளவு குடும்பத்தில் நெருக்கம்.

அந்த இஸ்லாம் நண்பரைப் பற்றி சிவகுமார் இந்து தமிழ்திசையில் எழுதிய திரைப்படச் சோலை தொடரில் விலாவாரியாகக் குறிப்பிட்டுள்ளார்.

அப்படிப்பட்டவரிடம் இப்போது நடந்த நிகழ்வில், ‘ எனக்கு சால்வை போடறதே பிடிக்காது. தெரிஞ்சுகிட்டே ஏன் இப்படி செய்யறே?’ ன்னு உரிமையுடன் பிடுங்கிப் போட்டிருக்கார். நடந்தது அவ்வளவுதான்.

இதைத்தான் ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்கி திரித்து தவறான செய்தியை வெளியிட்டிருக்கிறது சில செய்திச் சேனல்கள்.

ஏற்கனவே செல்ஃபோன் விவகாரத்தில் சிவகுமாரை சீண்டிப் பார்த்தவர்களுக்கு இப்போது இது அல்வா போல ஆகி விட்டது.

சம்பந்தப்பட்ட இஸ்லாம் பெரியவரே, அவர் குடும்பமே, இது தவறான செய்தி, உடனடியாக இதை delite செய்யா விட்டால் சேனல்கள் மீது வழக்குத் தொடருவேன் என்று தெரிவித்தும் யாரும் அடங்குவதாய்த் தெரியவில்லை.

பொய்யைப் பொருந்தப் பேசினால் உண்மை திரு திருன்னு விழிக்குமாம்ன்னு ஒரு பழமொழி உண்டு. இப்போ எல்லாம் பொய்யைப் பொருந்தக் கூட பேச வேண்டாம்.

இப்படி ஒரு வீடியோ காட்சி மட்டும் கிடைச்சா போதும் எல்லா உண்மையையும், சத்தியத்தையும், பத்திரிகை தர்மத்தையும் கூட குழி தோண்டிப் புதைச் சுடுவாங்க நம் பரபரப்பு ஊடக வியாதிகள்.

கண்ணால் காண்பதும் பொய் ; காதால் கேட்பதும் பொய் ; தீர விசாரிப்பதே மெய் என்று மூத்தோர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதற்கு அர்த்தம் இதுதானோ?

இணைய பதிவு
– ✍கா.சு. வேலாயுதன் , கோவை, 26.02.2024