தோனியின் அடுத்த படத்தை பற்றி எல் ஜி எம் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்தார் ஷாக்ஷி தோனி!

 

 

தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘எல் ஜி எம்’ திரைப்படம் எதிர்வரும் 28 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஆர். ஜே. விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இசையமைத்திருக்கிறார். முழு நீள குடும்ப பொழுதுபோக்கு நகைச்சுவை சித்திரமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தோனி எண்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் சாக்ஷி சிங் தோனி மற்றும் விகாஸ் ஹசிஜா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தோனி எண்டர்டெய்ன்மென்ட் வழங்குகிறது. தமிழகம் முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடுகிறது.

 

இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நெக்ஸஸ் மால் வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது சாக்ஷி சிங் தோனி, ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, ஆர். ஜே. விஜய், இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி, விநியோகஸ்தர் சக்தி வேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

நடிகை நதியா பேசுகையில், ” இந்தப் படத்திற்கு தோனி என்டர்டெய்ன்மெண்ட் என்ற பட தயாரிப்பு நிறுவனமே மிகப்பெரிய அட்ராக்சன். தோனி என்ற ஒருவரின் பெயர் இடம் பெற்றால் போதும்… இப்படத்திற்கு அதுவே மிகப்பெரிய விளம்பரம். ரமேஷ் தமிழ்மணி இப்படத்தின் இயக்குநர். மிக மிக திறமையானவர். இயக்குநர் மட்டுமல்ல இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஒரு பாடலைறயும் பாடியிருக்கிறார். கேப்டன் தோனி எப்படி மிகவும் கூல் என்று சொல்கிறோமோ… அதே போல் இவரும் மிகவும் அமைதியான மனிதர். அவர் இயல்பாக பழகியதால் தான் படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக பணியாற்றினோம். இந்தப் படத்தின் கதை மிகவும் சுவாரசியமானது. இந்தப் படத்தில் மெசேஜ் என்று எதுவும் இல்லை. இந்தப் படத்தில் சொல்லியிருக்கும் ஐடியா சாக்க்ஷி தோனியுடையது. அது அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பு குழுவினருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஜூலை 28ஆம் தேதி தியேட்டருக்கு வாங்க. ஃபேமிலியோட வாங்க. சிரிச்சுக்கிட்டே இருப்பீங்க. சிரிச்சுக்கிட்டே போவீங்க.” என்றார்.

ஹரிஷ் கல்யாண் பேசுகையில், ” நான் நடித்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மூன்று ஆண்டுகளாகிறது. கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு திரையரங்கில் எப்போது திரைப்படம் வெளியாகும் என எண்ணிக்கொண்டிருந்தேன். எந்த வகையான சினிமா வரும்? மக்கள் எப்படி ஆதரவு கொடுப்பார்கள்? என யோசித்துக் கொண்டே இருந்தேன். விஜய், அஜித், ரஜினி போன்ற நட்சத்திர நடிகர்கள் நடித்து வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் திரையரங்கத்திற்கு சென்று ரசிக்கிறார்கள். என்னை போன்ற வளர்ந்து வரும் நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்களின் படங்களுக்கு மக்கள் திரையரங்கத்திற்கு வருகை தருவார்களா..! என்ற கவலை இருந்தது. ‘லவ் டுடே’, ‘டா டா’, ‘குட் நைட்’, ‘போர் தொழில்’… போன்ற படங்களை மக்கள் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இத்தகைய வெற்றியை அளித்ததற்காக மக்களுக்கு முதலில் நன்றி. இது என்னை போன்று அடுத்தடுத்து வளர்ந்து வரும் நடிகர்களுக்கு உற்சாகமளிக்கக்கூடிய விசயம். நதியா, இவானா, ஆர். ஜே. விஜய், யோகி பாபு என அனைவருடனும் பணிபுரிந்தது மறக்க இயலாத அனுபவம். படப்பிடிப்பு தளத்தில் எங்களிடம் இருந்த உற்சாகம் திரையிலும் இடம் பிடித்திருக்கிறது என நினைக்கிறேன். ” என்றார்.

 

சாக்ஷி தோனி பேசுகையில், ”எங்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையே மொழி ஒரு தடையாக இல்லை. தோனிக்கு இங்கு கிடைத்த வரவேற்பு முக்கியமானது. உணர்வுபர்வமானது. இப்படத்தின் கதையை இயக்குநர் ரமேஷ் தமிழ் மணியிடம் சொன்னபோது அவர் இதை திரைப்படமாக உருவாக்கலாம் என்றார். இந்தக் கதையின் கான்செப்ட் என்னுடைய தோழிகளின் வாழ்க்கையிலும், நான் கேட்ட விசயங்களிலும் இருந்தும் உருவானது. மேலும் மாமியார் – மருமகள் பிரச்சனை என்பது உலக அளவிலானது. இந்தப் படத்தில் அந்த உறவுகள் குறித்த நேர் நிலையான அதிர்வுகளை பற்றி பேசி இருக்கிறோம். உண்மையில் இந்த திரைப்படம் ஒரு பாசிட்டிவான திரைப்படம். இந்தத் திரைப்படம் பொழுது போக்குடன் தயாராகி இருக்கிறது. எங்களுடைய இந்த திரையுலக பயணத்தில் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.