கூர்மன்- திரை விமர்சனம் !

இயக்குநர் – பிரயன் B ஜார்ஜ்
நடிகர்கள் – ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன்

தன் காதலி இறப்பினால் தனியே வசிக்கும் காவல் அதிகாரியிடம் ஒரு கேஸ் வருகிறது அதை அவர் எப்படி கண்டுபிடிக்கிறார் அதனால் வரும் சிக்கல்கள் என்ன என்பது தான் படம்.

மனதிற்குள் நினைப்பதை அறியும், மைண்ட் ரீடர் ஒருவன் தன் காதலி இறந்ததால் போலீஸிலிருந்து விலகி தனியே வசிக்கிறான். அவனிடம் அவ்வப்போது சிக்கலான கேஸ்களில் குற்றவாளிகளை விசாரிக்க உதவி கேட்கிறார் உயரதிகாரி. அந்த மாதிரி ஒரு பெண்ணை கொலை செய்த வழக்கில் வரும் குற்றவாளி ஒருவன் திடீரென தப்பித்து விட அவனை நாயகன் பிடிக்கிறாரா அந்த கேஸ் என்ன ஆகிறது என்பதே படம்.

உண்மையில் படம் ஆரம்பிக்கும் இடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. அடுத்து அடுத்து வரும் திருப்பங்களும் போரடிக்காத சினிமாவை பார்க்கும் உணர்வை தருகிறது. திரைக்கதையும் கொஞ்சம் வித்தியாசப்பட்டு இருக்கிறது. இது எல்லாம் கொஞ்சம் ப்ளஸ் மட்டுமே

படத்தின் ஆரம்பத்தில் மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் ஒரு அதிகாரியை காட்டும்போதே அவரிடம் ஒரு சிக்கலான கேஸ் வந்தால் எப்படி இருக்கும் என ஆவலாக இருக்கிறோம் ஆனால் அவர் மொத்தமாக ஏமாற்றுகிறார்கள்.

யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது போல் இருக்கிறது திரைக்கதை. ஒரு பெரிய கான்செப்டை வைத்துகொண்டு படத்தில் ஒன்றுமே செய்யவில்லை அதிலும் இரண்டாம் பாதி க்ளைமாக்ஸ் எல்லாம் ஏன் இப்படி என தோன்ற வைக்கிறது. டிவிஸ்ட் அவர்கள் வைத்திருப்பதெல்லாம் ஒரு குறும்பட அளவிற்கே இருக்கிறது.

ராஜாஜி படம் முழுக்க கத்திக்கொண்டே இருக்கிறார். நடிப்பு வராத இடங்களில் கத்தி சமாளிக்கிறார். பாலசரவணன் அவருக்கு என்ன வேலை படத்தில் காமெடியும் இல்லை குணசித்திரமும் இல்லை. ஜனனி ஐயர் அதை விட கொடூரம் கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார்.

இசை பரவாயில்லை ரகம், ஒளிப்பதிவு தரம். ஒரு நல்ல முயற்சி வீணாகியிருக்கிறது. கூர்மன் பட்டை தீட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்