“தலைவி” பட ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி ஹைலைட்ஸ் !

தமிழகத்தின் மகளிரின் ஆதர்ஷமாக வாழ்ந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையை சொல்லும் படமாக, உருவாகும் தலைவி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு, இன்று படக்குழு மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொள்ள மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. Vibri Motion pictures, Karma Media Entertainment மற்றும் Zee Studios , Gothic Entertainment நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தினை வழங்குகிறார்கள். விஷ்ணு வர்தன் இந்தூரி சைலேஷ் R சிங், Sprint films சார்பில் ஹிதேஷ் தக்கர் மற்றும் திருமால் ரெட்டியுடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்கள். “தலைவி” படத்தினை Zee Studios 23 ஏப்ரல், 2021 அன்று உலகம் முழுவதும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடுகிறது.

30 வருட கால ஜெயலலிதாவின் வாழ்வின் தடங்களை,ஒரு நடிகையாக, உயர்ந்த நட்சத்திரமாக, அவரின் போராட்டத்தை, பெரும் சூழ்ச்சிகளை வென்று சாதனை படைத்திட்ட அரசியல் வாழ்வை, அதன் தாக்கம் குறையாமல், உணர்வுபூர்வமாக வெள்ளித்திரையில் வெளிக்கொடுவரவுள்ளது “தலைவி” திரைப்படம்

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் நடிகர் தம்பி ராமையா பேசியது…

எல்லா படங்களும் போல் இந்த படம் நூற்றில் ஒன்றல்ல, நூற்றாண்டுகளில் ஒன்று. 1965-1980 காலங்களில் ஜெயலலிதா-வை தவிர்த்து தென்னிந்திய படங்களை பார்க்க இயலாது. அதுபோல் 1982-ல் ஜெயலலிதா , தன்னை அதிமுக-வில் இணைத்து கொண்டபிறகு. 1982-2016 வரை இந்திய அரசியலை அவரை தள்ளிவைத்து பார்க்க இயலாது. சினிமா வாழ்வில், அரசியல் வாழ்விலும் பெரும் ஜாம்பவானாக இருந்த ஜெயலலிதா பற்றிய படம்.. இந்திராகாந்தி அம்மையார், மம்தா பேனர்ஜி, மாயாவதி, ஜெயலலிதா அம்மையார் ஆகிய நான்கு பேரையும் கலந்தார் போல் கங்கனா ரனாவத் உள்ளார். திறமை இருக்கும் இடத்தில் திமிரு வரும், கர்வ திறமை கொண்ட தேவதை, அவருடன் நடிக்கும்போது அதை நான் பார்த்தேன், அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன். தியாகராஜா பாகவதர், எம் ஜி ஆர், கமல், அஜித்குமார், இவர்கள் அனைவரும் அழகின் உச்சம், இவர்கள் அனைவரின் கலவையாக அரவித் சாமி உள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்திற்கு இவர் தவிர யாரும் பொருத்தமாக இல்லை.

நடிகர், இயக்குநர் சமுத்திரகனி பேசியது….

மிகப்பெரும் ஜாம்பவான்கள் பங்கு கொண்டிருக்கும் படத்தில் நானும் இருப்பது மிகப் பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இயக்குநர் விஜய்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும். 1000 பக்கங்கள் கொண்ட “ஆர் எம் வி ஒரு தொண்டர்” எனும் புத்தகத்தை படிக்க சொன்னார். படித்து வியந்து விட்டேன். இப்படியும் மனிதர்கள் இருந்திருக்கிறார் களா, என ஆச்சர்யகரமாக இருந்தது. என்னால் அவரைப்போல் நடிக்க முடியுமா என பயமாக இருந்தது. இயக்குநர் விஜய் ஊக்கம் தந்து நடிக்க வைத்தார். எம் ஜி ஆரை நான் படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படத்தில் 15 நாள் அவர் கூடவே இருந்தது போல் இருந்தது. நண்பர் அரவிந்த்சாமி அவரை தத்ரூபமாக திரையில் கொண்டுவந்துள்ளார். சிறு சிறு விசயங்களிலும் மெனெக்கெட்டு உழைத்தார். கங்கனா ஜெயலலிதா-வின் ஆவி புகுந்தது போல் செய்திருக்கிறார். நிச்சயம் அவரது உழைப்பு பாராட்டு பெறும். நான் இப்படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறேன் என்றால், அதற்கு இயக்குநர் விஜய் தான் காரணம். அவர் துளித்துளியாக படத்தை செதுக்கியுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

பாடலாசிரியர் மதன் கார்கி பேசியது..

முதலில் கங்கனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். தேசிய விருது பெற்றிருக்கிறார். அடுத்த வருடம் இப்படத்திற்காகவும் விருதை பெற வாழ்த்துக்கள். பாடலாசியராக மட்டுமல்லாமல் திரைக்கதையிலும் பட உருவாக்கத்திலும் பணிபுரிந்தது புது அனுபவமாக இருந்தது. இப்படத்தின் திரைக்கதைக்காக விஜயேந்திர பிரசாத் உடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். திரைக்கதை பற்றிய அவரது பார்வை, நிறைய கற்று தந்தது. இந்த மாதிரி கதைகள் செய்யும்போது எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கும் ஆனால் இயக்குநர் விஜய் தெளிவாக இருந்தார். ஜெயலலிதா அவர்களின் வாழ்வின் நல்ல தருணங்களை சொல்லப் போகிறோம் என்றார். கங்கனா இப்படத்தில் மிகப்பெரும் பணியை செய்துள்ளார். எல்லோருக்கும் அவர் இந்த பாத்திரத்தை செய்ய முடியுமா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் படம் பார்த்த போது அந்த தடைகள் அனைத்தையும் உடைத்து மிக சிறப்பாக செய்துள்ளார். அரவிந்த் சாமி இப்படத்திற்காக மிகப்பெரும் உழைப்பை தந்திருக்கிறார். படத்தில் ஒவ்வொருவருமே கடுமையான உழைப்பை தந்துள்ளார்கள். படம் பிரமாண்டமாக வந்துள்ளது. இப்படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி.

இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ் பேசியது…

தலைவி இந்திய சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும். மிகப்பெரும் ஆளுமைகள் இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். இப்படத்தின் இசை ஒரு காலக் கட்டத்தை சொல்வதாக இருக்கும். அந்த காலகட்டத்தை இசையில் கொண்டுவர முயற்சித்துள்ளேன். ஜெயலலிதா -விற்கு ஒரு தனி இசை தொகுப்பை உருவாக்கி யிருக்கிறேன். உங்கள் அனைவரும் பிடிக்கும் என நம்புகிறேன்.

திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் பேசியது…

தலைவி எனக்கு ஒரு மிகச்சிறப்பான பயணமாக இருந்தது. படத்தை பற்றி அவர்கள் தந்த தகவல் தொகுப்புகள், பிரமிக்க தக்க வகையில் இருந்தது. நடிகை கங்கனா எனக்கு ஜெயலலிதா பற்றி அதிகம் தெரியாது, நான் எப்படி தயாராவது என்று கேட்டார். நீங்கள் நீங்களாக இருங்கள் போதும் என்று சொன்னேன். யாருக்கும் தலைவணங்காத, சுய மதிப்பு கொண்ட, இரும்பு பெண்மணி ஜெயலலிதா. கங்கனாவும் அதே போன்றவர் தான். தேசிய விருதை வென்றுள்ளார் தலைவி படத்தலைப்பு போல் ஒரு நாள் அவரும் தலைவியாக வாழ்த்துக்கள்.

இயக்குனர் விஜய் கூறியது

இப்படத்திற்காக இரு வருடங்கள் முன் தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகிய போது, சிறு தயக்கம் இருந்தது. பின்னர் இப்படம் செய்ய வேண்டும் என ஒப்புகொண்டேன். எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் அவர்களுடன் வேலை செய்தது, மீண்டும் பள்ளி செல்வது போல், மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். அரவிந்த் சாமி ள் நடித்தது படத்திற்கு மிகப்பெரிய பலம், அவருடைய உழைப்பின் மூலம் இந்த படத்தை மிகவும் சிறப்பாக ஆக்கியுள்ளார். ஜீவி எனக்கு ஒரு குடும்ப உறுப்பினர் போல, அவருடைய பங்கு இந்த படத்தில் மிகப்பெரியது, அவருடைய பாடல்கள் இந்த படத்தில் பெரிதாக பேசப்படும். மதன் கார்க்கி, அஜயன் பாலா இருவரும் இந்த படத்தில் பெரும் பங்குவகுகித்துள்ளனர். பாக்கியஸ்ரீ, தம்பி ராமையா, மதுபாலா மூவரும் அவர்களுடைய சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். சமுத்திரகனி பங்களிப்பிற்கு மிக்க நன்றி. இணை தயாரிப்பாளர்கள் திருமல், ரித்தேஷ், சைலாஷ் -க்கு நன்றி. நான்கு தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா அவர்களுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி, அவருடைய திறமை அளப்பறியது, கதையினை உணர்ந்து நடிப்பார். எடை கூடுதல், குறைப்பது என இப்படத்தில் அவரது பங்கு அதிகம். அரசியல் கதையாக பார்க்காமல், ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் ஒரு பெண்ணாக வெற்றி பெற்ற, ஒரு பெரும் ஆளுமையை பற்றிய படமாக இது இருக்கும்.

நடிகர் அரவிந்த் சாமி பேசியது….

ஒன்றறை வருட பயணம் இது. இம்மாதிரியான படத்தில் அனைவரையும் ஒருங்கி ணைத்து எனக்கும் வாய்ப்பு தந்தற்கு, தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இப்படத்தில் வரும் அனவைருமே, வரலாற்று நாயகர்கள். இப்படிபட்ட படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் விஜய்க்கு நன்றி. இப்படத்தில் மிகப்பெரும் ஆளுமைகள் ஒன்றிணைந்து பணியாற்றீயுள்ளார்கள் அவர்களால் தான் இப்படம் சாத்தியமாகியுள்ளது. கங்கனா அற்புதமாக நடித்துள்ளார். சமுத்திரகனி, தம்பி ரமையா, நாசருடன் பணிபுரிந்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது. எல்லோரும் இப்படத்தில் நடிக்க நான் கஷ்டப்பட்டு உழைத்ததாக கூறினார்கள். ஒரு கதாபாத்திரத்திற்கு என்ன வேண்டும் என்று நமக்கு முதலிலேயே தெரியும் அதை செய்ய வேண்டியது நம் கடமை. நான் இஷ்டப்பட்டு மகிழ்சியுடன் தான் இப்படத்தை செய்தேன் படம் நன்றாக வந்துள்ளது. நன்றி

நடிகை கங்கனா ரனாவத் பேசியது…

“தலைவி” திரைப்படத்திற்காக முதலில் என்னை அணுகியபோது முதலில் நடிக்க தயங்கியனேன். பிறகு இயக்குனர் விஜய் தான் வற்புறுத்தி ஒப்புக் கொள்ள வைத்ததார். மேலும் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படத்திற்கு அரவிந்த் சாமி மாதிரியான ஒரு ஹீரோ அளித்த ஒத்துழைப்பு மிக முக்கியமானது. பாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஹீரோவுக்கு கொடுக்கும் முக்கியத் துவம் எனக்கு கொடுக்கப்பட்டதே இல்லை தலைவி படத்தில் இயக்குனர் விஜய் என்னை மிகவும் மரியாதையுடன் நடத்தினார். என் திறமைக்கு மதிப்பளித்தார். என்னை முழுதாக இப்படத்திற்காக வடிவமைத்துள்ளார். இப்படத்தில் நடித்த பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இப்படம் மொத்த இந்தியாவிற்கானது. அனைவருக்கும் பிடிக்கும். தமிழில் இன்னும் நிறைய படங்கள் செய்ய ஆசைப் படுகிறேன் நன்றி