மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு-2’ திரைப்படம் உருவாக உள்ளதாக இன்றைக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘சைக்கோ’ படத்துக்குப் பிறகு ‘துப்பறிவாளன்-2’ படத்தை இயக்கினார் மிஷ்கின். அதில் விஷாலுடன் ஏற்பட்ட சண்டையால் அந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகினார். அதற்குப் பிறகு தனது அடுத்த படத்துக்கான கதைகளை எழுதி வந்தார்.
சிம்பு மற்றும் அருண் விஜய் ஆகியோருக்கு கதைகளைக் கூறினார். இருவருமே அதில் நடிக்கச் சம்மதம் தெரிவித்தாலும், எப்போது படப்பிடிப்பு என்பதே தெரியாமல் உள்ளது. இதனால், இதற்கிடையில் வேறொரு புதிய படமொன்றை இயக்க திட்டமிட்டார் மிஷ்கின்.
இன்று(செப்டம்பர் 20) தன்னுடைய பிறந்த நாளையொட்டி இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று மிஷ்கின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதன்படி, தன்னுடைய இயக்கத்தில் அடுத்ததாக ‘பிசாசு 2’ உருவாகவுள்ளதாக நேற்று நள்ளிரவில் அறிவித்தார் இயக்குநர் மிஷ்கின்.
2014-ம் ஆண்டு இயக்குநர் பாலாவின் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படம் ‘பிசாசு’. இந்தப் படம் அப்போது மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அதன் 2-ம் பாகத்தை அறிவித்துள்ளார் மிஷ்கின்.
இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க ஆண்ட்ரியா ஒப்பந்தமாகி யுள்ளார். ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது. கார்த்திக் ராஜா இசையமைக்க வுள்ளார். மிஷ்கின் – கார்த்திக் ராஜா கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுவாகும்.
வரும் நவம்பரிலிருந்து படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.