தில்லானா மோகனாம்பாள்- திரும்பிப் பார்ப்போமா?

சிறந்த இயக்கம், சிறப்பான ஒலிப்பதிவு, நேர்த்தியான வசனம், வசன உச்சரிப்பு, ஈஸ்ட்மென் கலர், சிவாஜி, பத்மினியின் நடிப்பு என அத்தனை அம்சங்களும் தில்லானா மோகனாம்பாள் என்ற திரைப் படத்தை காலம் கடந்து பேச வைத்துக் கொண்டிருக்கிறது. நாவலை படமாக்கும் போது ஏற்படும் இடர்கள் எதுவும் தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிறிதளவும் இல்லை என்று இலக்கியவாதிகளே சான்றளித்துள்ளனர். ஆம்.. தமிழ் திரைப்பட உலகில் மாபெரும் காவியமாக நடிகர் சிவாஜிகணேசன், நடிகை பத்மினி நடித்த ‘தில்லானா மோகனாம்பாள் 1968 ஆம் ஆண்டு இதே நாளில் வெளியானது. 52 வருடங்கள் கடந்தும் தில்லானா மோகனாம்பாள் சித்திரத்திற்கு இணையான ஒரு படம் உருவாகவில்லை என்று சினிமா விமர்சகர்கள் சிலாகித்து ட்ரெண்டிங் உருவாக்கி மகிழ்கிறார்கள். இச்சூழலில் இந்த தில்லானா மோகனாம்பாள் குறித்து நம் கட்டிங் கண்ணையா வழங்கும் சிறப்புக் கட்டுரை இதோ:

1968 ஆம் ஆண்டு ஜுலை 27ந்தேதி வெளியான இந்த படத்தை பார்க்காத தமிழ் ரசிகர்களே இருப்பார்களா என்பது சந்தேகம். பொன்விழா கண்ட தில்லானா மோகனாம்பாளை கோடிக் கணக்கானோர் பார்த்திருப்பார்கள். இனியும் கோடிக்கணக்கானோர் பார்க்கத்தான் போகிறார்கள். நிஜம்தானே.. இப்போதே இப்படி என்றால் அந்தப்படம் உருவான கால கட்டத்திலும் வெளியான கால கட்டத்திலும் ரசிகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் படம் தொடர்பான செய்திகள் எப்படியெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்?

நாதசுர வித்துவான் சிக்கல் சண்முகவடிவேலுவாக சிவாஜி கணேசனும், நடன நங்கை மோகனாம்பாளாக பத்மினியும் வாழ்ந்து காட்டினர். தில்லானா மோகனாம்பாள் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. இப்படம், ஆங்கில விளக்க உரையுடன் மேல் நாட்டில் திரையிடப்பட்டது. அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று இந்தப் படத்தின் பிரதியை வாங்கிச்சென்று நாதஸ்வரம், பரதம் ஆகிய கலைகளைப்பற்றி தங்களது மாணவர்களுக்கு விளக்கப்படுத்தி வந்தது.

கொத்தமங்கலம் சுப்பு.. இவர்தான் தில்லானா மோகனாம்பாளின் உண்மையான கதாநாயகன். படத்தின் கதை இவருடையதுதான். கொத்தமங்கலம் சுப்புவை வெறும் கதை வசனகர்த்தா என்று நினைத்துவிடாதீர்கள். அவர் மிகப்பெரிய ஜாம்பவான்.. நடிகர், இயக்குநர், கதாசிரியர் என பன்முகம் கொண்டவர். ஜெமினி ஸ்டுடியோவின் செல்லப்பிள்ளை. இந்திய சினிமா உலகில் பிரமாண்டத்தின் உச்சம் என்று காலம்காலமாய் கொண்டாடப்படும் சந்திரலேகா (1948) படத்தின் கதை இவர் எழுதியதுதான். வஞ்சிக்கோட்டை வாலிபன், இரும்புத்திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற பிரம்மாண்ட படங்களெல்லாம் இவரின் கதைதான்.

இப்பேர்ப்பட்ட சுப்பு 1957 வாக்கில் ஆனந்தவிகடன் வார இதழில் ஒரு நாட்டியப்பெண்மணிக்கும் நாதஸ்வர கலைஞனுக்கும் இடையில் மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் சம்பவங்களை சித்தரித்து அழகாக தொடர் கதை எழுதி வந்தார்.ஆனந்த விகடனில், இரண்டு வருடங்கள் தொடராக வந்த கதை. அந்த இரண்டு வருடங்களும், புத்தகத்தை கையில் வாங்கியதும், இந்தத் தொடரைப் படித்துவிட்டுத்தான் அடுத்த பக்கங்களுக்குத் தாவுவார்கள் . வாசகர்கள் மத்தியில் அதற்கு அவ்வளவு வரவேற்பு, கதையில் அடிக்கடி வந்து செமையாக கலாட்டா செய்து விட்டுப் போகும் வில்லத்தனமான சவடால் வைத்தி, ஜில்ஜில் ரமாமணி என நிறைய பாத்திரங்கள் அக்கப்போர் பண்ணிவிட்டு செல்லும் தொடர்கதைக்கு அப்போது ஓவியர் கோபுலு வரைந்த சித்திரங்கள் இன்னும் அற்புதம்.சுருக்கமாகச்சொன்னால் கலைமணி என்ற புனைப்பெயரில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் என்ற ஒற்றை தொடர்கதை ஒட்டுமொத்த ஆனந்த விகடன் விற்பனையை பட்டையை கிளப்ப வைத்துவிட்டது.

தில்லானா மோகனாம்பாளாக சுப்பு மனதில் வடிவமைத்துக்கொண்டது பந்த நல்லூர் ஜெய லட்சுமி என்ற இளம் நாட்டியக்கலைஞரை.. நாதஸ்வர வித்வான் ஷண்முக சுந்தரமாக படைத்தது, அப்போது காலமாகிவிட்டிருந்த நாதஸ்வர வித்வான் திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் பிள்ளையின் மேனரிசங்களை வைத்துத்தான் என்று சொல்வார்கள். எழுத்து வடிவில் தூள்கிளப்பிய இந்தக்கதையை படமாக்க ஆனந்த விகடன் ஆசிரியரும் இந்திய திரைப்பட ஜாம்பவானுமான ஜெமினி அதிபர் எஸ்.எஸ் வாசனுக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது.. ஆனால் படம் எடுக்கும் சூழல்தான் அமையவில்லை.

அதே சமயம் தில்லானா கதையால் கவரப்பட்ட வாசகர்கள் மத்தியில், அதிகம் கவரப்பட்டவர் இயக்குநர் ஏபி நாகராஜன். கதையை வாங்கி எப்படியாவது படமெடுத்துவிடவேண்டும் என்று துடியாய் துடித்தார்.ஜெமினி வாசனிடம் கதையை தரச்சொல்லி கேட்டு பல தடவை, நடையாய் நடந்தார். வாசன் மனமிரங்கவேயில்லை. இருப்பினும் ஏபிஎன், ஒரு கட்டத்தில் கரைத்து விட்டார். இவ்வளவு ஆர்வத்துடன் கேட்கும் ஒரு கலைஞன், நம்மைவிட சிறப்பாக படமாக்குவார் என்று முடிவுக்குவந்து கதையை தர சம்மதித்தார்.

உடனே கதையின் உரிமத்துக்காக அதுவெளியான பத்திரிகையின் உரிமையாளர் என்ற முறையில் ஆனந்தவிகடன் எஸ்.எஸ்.வாசனிடம் இருபத்தைந்தாயிரத்தை இயக்குநர் ஏ.பி.நாகராஜன் கொடுத்தார். அதன்பிறகு கதையை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவை அவரது வீட்டில் சந்தித்து அவருக்கு தனியாக பத்தாயிரம் ரூபாயை கொடுத்தார்.

ஆனால் சுப்புவோ அதை வாங்கவேயில்லை.. ‘’தில்லானா மோகனாம்பாள் கதைக்காக நீங்கள் ஏற்கனவே கொடுத்த பணக்கவரை பிரித்துக்கூடப்பார்க்காமல் அப்படியே வாசன் எனக்கு அனுப்பிவிட்டார். ஆகையால் ஒரே கதைக்காக இரண்டுபேரிடம் பணம் வாங்குவது முறையாகாது’’ என்று சுப்பு சொல்ல, எழுத்துக்கான சன்மானம் எழுத்தாளனுக்குத்தான் போய் சேரவேண்டும் என செயல்பட்ட வாசனின் நேர்மை, இயக்குநர் ஏபிஎன்னை வியக்கவைத்த தருணம் அது..

கதை கிடைத்துவிட்டது. கதாநாயகன்? குலமகள் ராதை, நவராத்திரி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம் என சிவாஜியை வைத்து வரிசையாக சரவெடி வெடித்து வந்த ஏபிஎன் வேறு யாரை கதாநாயகனாக போடப்போகிறார்? அதனால் கதாநாயகன் சாட்சாத் நடிகர் திலகம் சிவாஜியேதான்.

அடுத்து கதாநாயகி? ஒருவேளை எஸ்எஸ் வாசனின் ஜெமினி நிறுவனம் 1950களின் இறுதியில் தில்லானா மோகனாம்பாளை தயாரித்திருந்தால் அதில் வைஜெயந்திமாலாதான் கதா நாயகியாக நடித்திருக்க அதிக வாய்ப்பு. காரணம், வஞ்சிக்கோட்டை வாலிபன், இந்திதிரைப் படமான பைகாம், இதன் தமிழ் ரீமேக்கான இரும்புத்திரை போன்ற ஜெமினி நிறுவனத்தின் படங்களில் தொடர்ந்து வைஜெயந்திமாலாதான் கதாநாயகி.வைஜெயந்திமாலா பின்னர் இந்திக்கு போய் சூப்பர் ஸ்டாராக ஆகிவிட்டதாலும், ஜெமினி நிறுவனம் தயாரிக்காமல் ஏபி நாகராஜன் தயாரித்ததாலும் தில்லானா மோகனாம்பாளாக பத்மினி மாறிவிட்டார்.

சிவாஜி, பத்மினிக்குபிறகு மற்ற பாத்திரங்களை தேர்வு செய்வதில் ஏபிஎன் அளவுக்கு அதிகமாக தீவிரம்காட்டினார். காரணம். ஜெமினி நிறுவனம் ஒரு படத்தை தயாரித்தால் பிரமாண்டமாகவும் நேர்த்தியாகவும் இருக்குமோ அதற்கு எள்முனையளவு குறைந்தாலும், வாசனிடம் கெஞ்சிக்கூத்தாடி கதையை பெற்றதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்று நினைத்ததுதான்.

நாட்டியதாரகை மோகனாவை, சொகுசாக வாழவைக்க பல பெரிய மனிதர்களின் தயவை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார் மோகனாவின் தாயாரான வடிவாம்பாள்.. அவருக்கென,வீட்டில் சொல்வதெற்கெல்லாம் பக்கவாத்தியம் வாசிக்க ஏகப்பட்ட பாத்திரங்கள்.அதேபோல மோகனாவுடன்மோதி காதலில்விழும் நாதஸ்வர வித்வான் மட்டும் தனியொரு ஆளாக இருக்க முடியுமோ? அவருக்கும் ஒரு பட்டாளத்தை உருவாக்க வேண்டியிருந்தது. இதுபோதாதென்று மோகனாவுக்கும் நாதஸ்வர வித்வானுக்கும் அடிக்கடி இடையூறு செய்வதற்கென்றே ஒரு பட்டாளம் வேண்டுமே..

இன்னொருபக்கம் இசையையும் நாட்டியத்தையும் மையப்படுத்தி எடுக்கப்படும் படம் என்பதால் பாத்திரங்களாக வரும் அத்தனை நடிகர் நடிகைகளையும் அந்த உலகத்தின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அச்சு அசலாக மாற்றியாக ஆகவேண்டும்.

வெளிப்படையாக சொன்னால், ஒருநாள் ஷுட்டிங் என்றால் அதற்கு நாலுநாள் ரிகர்சல் பார்க்கவேண்டும். இப்படிப்பட்ட மலையளவு வேலைகளுடன் இறங்கிய இயக்குநர் ஏ.பி.நாகராஜனுக்கு அடுத்து மனதை குடைந்தெடுந்த விஷயம். படத்திற்கான இசை… ஏபிஎன்னின் ஆஸ்தான இசையமைப்பாளரான திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன்தான் என்பதில் சந்தேகமில்லை.

சாஸ்திரிய சங்கீதத்தில் கேவிஎம் படுகில்லாடி. திருவிளையாடல் படத்தில் ஒரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா,… அப்புறம் பாட்டும் நானே பாவமும் நானே.. அப்புறம் இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை போன்ற பாடல்களெல்லாம் கேவிஎம்மின் சாஸ்த்திரிய இசையை பறைசாற்றும். ஆனால் பிரச்சினை என்னவென்றால் ஷண்முகசுந்தரத்திற்கு பின்னணியில் நாதஸ்வர இசையை கரைபுரண்டோட செய்யப்போகும் உண்மையான நாதஸ்வர ஜாம்பவான் யாரைக்கொண்டுவருவது என்ற கேள்விதான்.

நாதஸ்வர இசைக்காக அவர் மனதில் வைத்திருந்த நாதஸ்வர சக்ரவர்த்திகளில் ஒருவர் என போற்றப்பட்ட காருக்குறிச்சி அருணாச்சலத்தை.. அந்த நாதஸ்வர இசைமேதை 1964லிலேயே காலமாகிவிட்டார்.இதனால் ஏபிஎன் மனதிலும் கேவிஎம் மனதிலும் தோன்றியவர்கள் மதுரை சகோதரர்கள் எனப்படும் எம்பிஎன் சேதுராமன் மற்றும் எம்பிஎன் பொன்னுசாமி ஆகியோர்தான். உடனே இருவரும் புக் செய்யப்பட்டனர்.

நாட்டியப்பேரொளி பத்மினிக்கு நடன மங்கை மோகனாம்பாளாக பிரகாசிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் நாதஸ்வரம் வாசிக்க தெரியாத சிவாஜியை அப்படியே விட்டுவிட்டுவிட முடியுமா? இதற்காக எம்பிஎன் சகோதரர்களே நேரடியாய் தொடர்ந்து சிவாஜிக்கு பயிற்சியளிக்க ஆரம்பித்தார்கள். மதுரைக்கும் சென்னைக்கும் இடையே அடிக்கடி பயணித்து மொத்தம் நான்குமாத ரிகர்சில் பங்கேற்றனர். நாதஸ்வர இசையை சினிமாவுக்கு பயன்படுத்தும்போது வழக்கமான கச்சேரியாக இல்லாமல், எப்படியெல்லாம் ஏற்ற இறக்கம், இடைநில்லல் போன்றவை இருக்கவேண்டும் என்பதை திரை இசைத்திலகம் கேவி.மகாதேவன் விளக்கிக் காட்டியபோதுதான், மதுரை சகோதரர்களுக்கு, ஆஹா மிகப்பெரிய சோதனையை கடக்கவுள்ளோம் என்பதே புரிந்தது.

ஷூட்டிங் ஸ்பாட்டின் ஓரிடத்தில் படக்காட்சிக்கு ஏற்ப நாதஸ்வர வித்வான்கள் வாசிப்பார்கள்.. அதைப்பார்த்து உள்வாங்கிக்கொண்டு, இயக்குநர் ஏபி நாகராஜன் ஷாட்டுக்கு போகலாமா என்று கேட்டதும் சிவாஜியும் அவருக்கு பக்கத்தில் ஏவிஎம் ராஜனும் உண்மையான நாதஸ்வர கலைஞர்கள் மாதிரி வாசிப்பில் நடிப்புத்தன்மையை கொட்டி அசத்துவார்கள்.

தில்லானா படத்தின் நாதஸ்வர ரெக்கார்டிங் செஷன் தாம் இல்லாமல் நடக்கவேகூடாது என்று அன்புக்கட்டளையே போட்டிருந்தார் நடிகர் திலகம். காரணம் நாதஸ்வர வித்வான்களின் உடல்மொழியை பார்த்து அப்படி உள்வாங்கிக்கொண்டு நடிப்பில் வெளிப்படுத்தத்தான்.

நாதஸ்வர வித்வான் எம்பிஎன் பொன்னுசாமி ஒரு பேட்டியில் சொன்னார், ‘’தண்ணீரை எப்படி பிளாட்டிங் பேப்பர் உறிஞ்சுகிறதோ அந்த தன்மையை அப்படியே சிவாஜி என்ற மேதையிடம் கண்டோம். நாங்கள் மெய்மறந்து அழுத்திவாசிக்கும்போது எங்கள் கழுத்து நரம்பெல்லாம் புடைக்கும்.. அதை அப்படியே திரையில் சிவாஜி வெளிப்படுத்தியிருந்ததை முதன்முறையாக ரசிகர்களோடு சேர்ந்து மதுரை சிந்தாமணி தியேட்டரின் திரையில் பார்த்தபோது ஏற்பட்ட மெய்சிலிர்ப்பை விவரிக்கவேமுடியாது,தில்லானா மோகனாம்பாள் படம் வெளியானதும் எங்கள் புகழ் விண்ணுக்கு பறந்துவிட்டது, அதாவது வெளிநாடுகளிலெல்லாம் கச்சேரிக்கு அழைப்புகள் குவிந்துவிட்டன’’ பொருளாதார ரீதியாக தங்கள் வாழ்வில், தில்லானா மோகனாம்பாள் என்ற ஒரே படம் பெரிய ஏற்றத்தை தந்துவிட்டது என்று மதுரை சகோதரர்கள் நினைவு கூர்ந்தார்கள்.

நலந்தானா பாடல் உருவானதற்கே இன்னொரு பின்னணி உண்டு. அண்ணாவும் கண்ணதாசனும் கருத்து வேற்றுமையால் பேசிக்கொள்ளாத நேரம்.அப்போது அண்ணாவுக்கு உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்றுவந்தார், அவரை விசாரிப்பது மாதிரியே எழுதிக்கொடுத்த பாடல்தான் நலந்தானா பாடல். சிவாஜி பத்மினியை தாண்டி, நலந்தானா பாடலை வரிக்குவரி அலசினால் அண்ணாவின் உடல்நலத்தை பற்றி கண்ணதாசன் உருகிஉருகி விசாரிப்பது தெரிய வரும்.

திரைக்கு பின்னால் வாசித்த அதே எம்பிஎன் பொன்னுசாமி சகோதரர்களே, அண்ணாவின் முன் நலந்தானா வாசிக்கும் ஆச்சர்யமான சூழலும் உண்டானது.அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிவந்த முதலமைச்சர் அண்ணா, தினந்தந்தி பத்திரிகையின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரங்கத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தார். அப்போது எம்பிஎன் சகோதரர்கள் வேறு கீர்த்தனை வாசித்துக்கொண்டிருந்தார்கள். அண்ணா நுழைவதைக்கண்டுவிட்டதும் உடனே, நலந்தானா பாடலை நாதஸ்வரத்தில் ஏற்றி அரங்கத்தையே அதிரவிட்டார்கள். அண்ணாவும் நான் நலம் என்று பாவனை செய்தபடியே அரங்கத்தில் இருந்த கூட்டத்தினரை பார்த்து கையை அசைக்க, கைத்ததட்டல்களும் கோஷங்களும் விண்ணைப்பிளந்த அந்த தருணம், தில்லானா மோகனாம்பாள் படத்தின் நலந்தானா பாடலுடன் பின்னிப்பிணைந்த திரைக்கு அப்பாற்பட்ட ஒரு வரலாறு.. கட்ட்

தில்லானா படத்திற்கு சிவாஜிக்கு எப்படி நாதஸ்வர பயிற்சி கொடுக்கப்பட்டதோ, அதேபோல பாலையாவிற்கு தனி டிவிஷன் ஒதுக்கப்பட்டது..தவில் வித்வான் பயிற்சி முடிந்தாலும் பாலையா சும்மா இருக்கமாட்டார். ஒரு தவிலை வாங்கி வைத்துக்கொண்டு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வீட்டில் அடித்துநொறுக்கினார்.

அவர் குடியிருந்த தெருவழியாக சென்றவர்கள் தவில் வாசிப்பு சத்தத்தை கேட்டுகேட்டு மிரண்டு போனகாலமெல்லாம் உண்டு.பாலையா வீட்டருகே குடியிருந்த அப்போதைய முன்னணி நடிகை வசந்தா ( ஜெய்சங்கரின் முதல் கதாநாயாகி,,, நானே ராஜா நானே மந்திரி படத்தில் விஜயகாந்தின் தாயாக வருவார்) தூங்கி எழுந்தா பாலையா வீட்டு தவில் தொல்லை தாளமுடியலை என்பார்.சின்ன பாத்திரம் என்றாலும் பாலையா அதற்காக தன்னை தயார் செய்துகொள்ளும் விதம் எப்போதும் அப்படித்தான் இருக்கும்

தில்லானா மோகனாம்பாள் நாவலாக வெளிவந்தபோதே அதில் பெரிதும் பேசப்பட்ட பாத்திரம் சவடால் வைத்தி. கார்ட்டூனிஸ்ட் கோபுலு வரைந்த சித்திரங்கள் அச்சு ஒருத்தரை அப்படியே பிரதிபலிப்பதுபோல் இருந்தன. அதுவேறு யாருமல்ல.. நாகேஷ்தான்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஆனந்த விகடனில் தில்லானா தொடர்கதை வந்தபோது நாகேஷ் அவர்கள் திரை உலகில் அறிமுகமாகவேயில்லை என்பதுதான். நாட்டியபெண்மணி மோகனாம்பாளை பெரிய மனிதர்களுடன் எப்படியாவது சேர்த்துவிடத்துடிக்கும் ஒரு மோசமான பிம்ப் கேரக்டர்.. கொஞ்சம் பிசகினாலும், பெண்ணைக்கூட்டிகொடுக்கும் கேரக்டர் மிகவும் ஆபாசமாகப்போய்விடும்.ஆனால் திரைக்கதை மற்றும் நாகேஷின் நடிப்பாற்றலால் சவடால் வைத்தி கேரக்டர், படம் முழுக்க ரசிகர்களை சிரிக்க வைத்தபடியே இருந்தது. ஒரு பிம்ப் கேரக்டரைக்கூட இப்படி விரசமே இல்லாமல் செய்யமுடியும் என்றால் அது நாகேசைத்தவிர வேறு யாரால் முடியும்?

நாகேஷ் இப்படி என்றால் ஆச்சி மனோரமா சும்மாவிடுவாரா? ஜில் ஜில் ரமாமணி என்ற பாத்திரத்தை அவர் திரையுலக பயணத்தில் முக்கியமான மைல்கல்லாவே மாற்றிவிட்டார். இத்தனைக்கும் தில்லானா மோகனாம்பாள் படத்தில் நடிக்க முதலில் மறுத்துவிட்டார் என்பதுதான் அதிர்ச்சியான விஷயம். புக் செய்தவற்காக டைரக்டர் ஏபிஎன் அணுகியபோது, சிவாஜி, பத்மினி பாலையா நாகேஷ், சிகே சரஸ்வதி அதற்கப்புறம் பெரிய பட்டாளமே இருக்கும்போது, படத்தில் எனக்கென்ன முக்கியத்துவம் வந்துவிடப்போகிறது என்று சொல்லி தவிர்த்தார்.

ஆனால் ஏபிஎன் விடவில்லை. ‘’மோகனாவுக்கு ஆடத்தெரியும், சண்முக சுந்தரத்திற்கு வாசிக்க தெரியும். ஆனால் படத்தில் நடனம், பாட்டு, நாடகம் என சகலமும் தெரிந்த கேரக்டர் என்றால், அது உன்னுடைய ஜில்ஜில் ரமாமணிமட்டுந்தான். இந்த கேரக்டர் உன்னை காலாகாலத்திற்கும் பேசவைக்கும் என்று சொல்லி சம்மதமும் வாங்கிவிட்டார்.

ஏபி நாகராஜன் சொன்னபடியே ஜில்ஜில் ரமாமணி கேரக்டர்.. அதை விவரிப்பது என்பது தங்கக்குடத்திற்கு பொட்டு வைத்துதான் அழகு பார்க்கவேண்டுமா என்பது மாதிரி.. நொந்துபோன பாத்திரமாய் சிரிக்கவைத்துக்கொண்டே வரும் மனோரமா, தவறான தகவல் அடிப்படையில் பிரிந்து நிற்கும் காதலர்களான மோகனாவையும் சண்முகசுந்தரத்தையும் சேர்த்துவைக்கும்போது, அவர்கள் இருவரையும் மட்டும் அல்ல ரசிகர்களையும் உருகவைத்துவிடுவார். அதுதான் ஆச்சி மனோரமா..

இப்படி அப்படத்தில் வரும் ஏவி எம் தொடங்கி ஒவ்வொருவரையும் பாராட்ட தனித் தனி தளமே வேண்டும்.. அச்சுழலில் 1968-ல் சென்னைக்கு வந்த வெளிநாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் தமிழ்சினிமாவை பற்றிய ஒரு டாகுமென்ட்டரி எடுத்திருக்கிறார். தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த விஷுவல் எவ்வளவு பெரிய கலைஞர்களையெல்லாம் நாம் இழந்திருக்கிறோம் என்ற ஏக்கத்தைதான் ஏற்படுத்தியது.

இன்று உருப்படியாக படம் எடுக்கிறார்களோ இல்லையோ? ‘மேக்கிங் ஆஃப் ஸோ அண் ஸோ’ என்று தனியாக ஒரு படத்தை எடுத்து தமது ஹோம் தியேட்டரிலேயே 100 நாட்கள் ஓடவிட்டு சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் மானிட்டரும் இல்லை. மண்ணாங்கட்டியும் இல்லை. எவ்வளவு அழகாக அந்த கலைஞர்களுக்கு சொல்லித் தருகிறார் பாருங்கள் தயாரிப்பாளரும் டைரக்டருமான ஏ.பி.நாகராஜன்.இந்த டாகுமென்ட்டரியை எடுத்தவர் மிகவும் குசும்பான ஆள் போலிருக்கிறது. சிவாஜி பத்மினி உள்ளிட்ட நமது கலைஞர்களின் மேக்கப் சென்சை பற்றியெல்லாம் செமத்தியாக கிண்டலடித்திருக்கிறார் நீங்களே பாருங்களேன்